முடிக்கு கண்டிப்பாக எண்ணெய் வைக்க வேண்டும். ஆனால் சரியான நேரத்தில் சரியான முறையில் எண்ணெய் வைக்க வேண்டும். அப்போதுதான் அவை முடியின் நுண்ணறைகள் வரை ஊடுருவி முடி வளர்ச்சிக்கு உதவும். முடியை வலிமையாக ஆரோக்கியமாக வைத்திருக்க செய்யும். தலைக்கு குளித்த உடன் ஷாம்பு போட்டு முடித்ததும் கூந்தல் சுத்தமாக இருக்கு என்று எண்ணெய் வைக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் அது நல்லதா என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
1. எண்ணெய் முடியில் ஊடுருவாது
எப்போது ஷாம்பு போட்டாலும் தலைமுடி ஈரப்பதமாக இருக்கும். அப்போது உடனே எண்ணெய் போட்டால், அந்த ஈரப்பதம் ஒரு தடையாக இருக்கும். இதனால் எண்ணெய் முடியின் வேர் அல்லது ஸ்கால்ப்பில் ஊடுருவுவது கடினம். சிலர் தினமும் ஷாம்பு போட்டு தலைக்குளியல் செய்வதும் உண்டு. எண்ணெய் முடியின் மேல் மட்டும் இருக்கும். இதனால் முடி பிசுபிசுப்பாகவும், கனமாகவும் உணர வைக்கும். இதனால் முடிக்கு எந்த சத்தும் கிடைக்காது. எண்ணெயும் தண்ணீரும் ஒன்று சேராது. அதனால் ஈரமான முடியில் எண்ணெய் போடும் போது அது முடியில் ஒட்டாது மாறாக தோற்றத்தை டல்லாக்கி காட்டும்.
2. முடி பிசுபிசுப்பாக ஒட்டிக்கொள்ளும்
தலைக்கு எண்ணெய் போட்டவுடன் முடி கொழகொழப்பாகவும், ஒட்டின மாதிரியும் இருக்கும். பலரும் சரியாக தலைக்கு குளிக்கவில்லை போலும் என்று நினைப்பார்கள். அல்லது ஷாம்பு தான் காரணமோ என்றும் நினைப்பார்கள். ஆனால் ஈரமான முடியில் எண்ணெய் போடுவதால் இப்படி ஆகலாம். முடி ஈரமாக இருக்கும்போது, எண்ணெயானது முடியின் மேற்பரப்பிலேயே தங்கிவிடும். ஷாம்பு, கண்டிஷனர் போக மீதம் இருந்தாலும் அவை எண்ணெயுடன் சேர்ந்து ஒரு மாதிரி படலம் போல முடியில் ஒட்டிக்கொள்ளும். இதனால் முடி பார்க்கவே மோசமான தோற்றத்தில் இருக்கும். பிசுபிசுப்பாக இருக்கும்.
3. உச்சந்தலையில் பாக்டீரியா, பூஞ்சை தொற்றுகள்
ஷாம்பு போடும்போது உச்சந்தலை மற்றும் முடி இழகளில் இருக்கும் அழுக்கை வெளியேற்றுகிறது. அப்போது உடனே எண்ணெய் வைக்கும் போது உள்ளிருக்கும் ஈரப்பதம் தேங்கிவிடும். இதனால் பாக்டீரியா, பூஞ்சை எல்லாம் வளர வாய்ப்புகள் உண்டு. உச்சந்தலை பொடுகு, அரிப்பு போன்றவற்றுக்கு இவையும் ஒரு காரணம். ஷாம்பு போட்ட பிறகு கூந்தல் நன்றாக உலரும் வரை எண்ணெய் பயன்படுத்த கூடாது.
4. மற்ற கூந்தல் தயாரிப்புகளின் பலனை தடுக்கும்
ஷாம்பு போட்ட பிறகு சீரம் தடவுவது சிலருக்கு வழக்கமாக இருக்கும். ஹேர் சீரம், லீவ் இன் கண்டிஷனர் போன்றவற்றை பயன்படுத்தும் பழக்கம் இருப்பவர்கள் உடனடியாக எண்ணெயும் தடவினால் அது கூந்தலை இரண்டு விதமாக பாதிக்கும். ஹேர் புராட்க்ட் பொருள்கள் வேலை செய்ய விடாமல் தடுக்கலாம். இதனால் ஹேர் சீரம் நன்மைகள் கிடைக்காமல் போகலாம். மேலும் எண்ணெய் மேலடுக்கில் பிசுக்கு போல் உண்டாகலாம். இதனால் கூந்தலுக்கு நன்மை செய்யும் ஷாம்பு, சீரம், கண்டிஷனர் போன்றவற்றை முடி உறிஞ்சுவது கடினமாகிறது. பொருள்களும் ஊடுருவ முடியாது.
5. முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காது
ஷாம்பு மற்றும் கண்டிஷனர் போட்ட உடனே எண்ணெய் தேய்ப்பதால் முடி ஒட்டிகொள்கிறது. இதனால் கூந்தலை சுத்தம் செய்யவும் வலுப்படுத்தவும் பயன்படுத்தும் ஷாம்பு மற்றும் கண்டிஷனரில் உள்ள சத்துக்கள் முடியில் சேராமல் போகலாம். ஏனெனில் நல்ல ஷாம்பூக்கள் மற்றும் கண்டிஷனர்களில் உங்கள் முடியை ஈரப்பதமாக்க, சரிசெய்ய மற்றும் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட பொருட்கள் உள்ளன. எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் இவை முடிக்கு கிடைக்காமல் போகலாம்.
எண்ணெய் வைப்பதற்கு சரியான நேரம் எது?
எண்ணெய் தேய்த்த பிறகு ஷாம்பு போடும் பழக்கம் இருந்தால் அதை தவிர்ப்பதே நல்லது. கூந்தலுக்கு உதவும் எண்ணெயை தடவி நன்றாக மசாஜ் செய்து 30 நிமிடங்கள் வரை ஊறவைத்து பிறகு ஷாம்பு போட்டு குளிக்கலாம். இதன் மூலம் கூந்தலுக்கும் வேண்டிய சத்துக்கள் உள்ளே செல்லும். இதனால், முடி சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் இருக்கும்.
ஷாம்பூவுக்குப் பிறகு எண்ணெய் தேய்ப்பதில் ஆர்வமாக இருந்தால், உங்கள் முடி பெரும்பாலும் காய்ந்ததும் அல்லது குறைந்தபட்சம் ஈரப்பதமாக இருக்கும்போது எண்ணெய் தேய்க்க முயற்சிக்கலாம். அதிலும் மிக குறைவாக பயன்படுத்த வேண்டும்.
பொறுப்பு துறப்பு:
இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. உங்களுக்கு பாதுகாப்பான ஒன்றை தேர்வு செய்ய துறை சார்ந்த நிபுணரிடம் ஆலோசிக்கலாம். இங்கு வழங்கப்பட்ட தகவலின் துல்லியம், நம்பகத்தன்மைக்கு சமயம் தமிழ் பொறுப்பேற்காது.