தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் ஆகிய இரண்டும் காலம் காலமாக நம்முடைய சரும பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வரும் இயற்கைப் பொருட்கள். சந்தைகளில் பலவித சருமப் பராமரிப்புப் பொருட்கள் கிடைத்தாலும், கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டையும் தங்கள் சருமப் பராமரிப்பில் பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், உங்கள் சருமம் வறண்ட சருமமாக இருந்தால், இந்த இரண்டில் எது சிறந்தது என்பது குறித்து இங்கு விரிவாகப் பார்ப்போம்.
தேங்காய் எண்ணெய்: ரிச் மாய்ஸ்ச்சரைஸர்
தேங்காய் எண்ணெய் உங்கள் சருமத்தில் ஒரு சிறந்த மாய்ஸ்ச்சரைஸராக செயல்படும். எவ்வளவு வறண்ட சருமத்தையும் நீண்ட நேரத்திற்கு ஈரப்பதமாக வைத்திருக்கும் தன்மை இதற்கு உண்டு. குறிப்பாக, தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் சருமத்தின் பாதுகாப்பு அடுக்கை வலுப்படுத்தி, செல்களின் சேதத்தைக் குறைத்து, சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
கற்றாழை ஜெல்: ஜென்டில் ஹைட்ரேட்டர்
மாய்ஸ்ச்சரைஸர் அப்ளை செய்தது தெரியக் கூடாது, சில நிமிடங்களிலேயே சருமத்திற்குள் உறிஞ்சிக் கொள்ள வேண்டும், பிசுபிசுப்பாக இருக்கக் கூடாது என்று நினைத்தால் நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது கற்றாழை ஜெல் தான். இது மிக வேகமாக சருமத்திற்குள் ஊடுருவி உடனடியாக சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கும். குறிப்பாக, வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு அடிக்கடி ஏற்படும் சிவந்து போதல் மற்றும் சரும எரிச்சல் போன்ற பாதிப்புகளைக் குறைக்கும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் கற்றாழை ஜெல்லில் உண்டு.
கற்றாழை - தேங்காய் எண்ணெய் ஒப்பீடு
- ஹைட்ரேட்டிங் பண்புகள்: தேங்காய் எண்ணெய் செறிவான தன்மை கொண்டது, நீண்ட நேரத்துக்கு ஈரப்பதமாக வைத்திருக்கும். கற்றாழை ஜெல் அடர்த்தி குறைந்த திரவத்தன்மை கொண்டது, மிக எளிதாக சருமத்துக்குள் நுழைந்து ஈரப்பதத்தை வழங்கும்.
- சருமத்திற்குள் உறிஞ்சுதல்: கற்றாழை ஜெல் சருமத்தில் மிக விரைவாக உறிஞ்சிக் கொள்ளும். தேங்காய் எண்ணெய் உறிஞ்சிக் கொள்ள சற்று அதிக நேரம் எடுக்கும்.
- அழற்சி எதிர்ப்புப் பண்பு: இரண்டிலுமே உள்ளது. ஆனால் கற்றாழை ஜெல் மிக வேகமாக அந்தப் பண்புகளை வெளிவிடும். தேங்காய் எண்ணெய் சற்று அதிக நேரம் பிடிக்கும்.
வறண்ட சருமத்திற்கு எது சிறந்தது?
தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் ஆகிய இரண்டுமே வறண்ட சருமத்துக்கு ஏற்றவைதான். அதனால் உங்களுடைய சருமத்தின் தன்மை, தேவை ஆகியவற்றைப் பொருத்து தேர்வு செய்யுங்கள். அதிக அளவு ஈரப்பதம் தேவைப்பட்டால் அல்லது மிக அதிகமாக சருமம் வறண்டு போயிருந்தால் நீங்கள் தேங்காய் எண்ணெயைத் தேர்வு செய்யலாம். ஆனால் மிதமான அளவில் தான் வறட்சி இருக்கிறது என்றால் அதற்கு கற்றாழை ஜெல் சிறந்தது. குறிப்பாக, பிசுபிசுப்பு இல்லாமல் க்ரீம் மாய்ஸ்ச்சரைஸருக்கு பதிலாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அதற்கு கற்றாழை ஜெல் மிகச்சிறந்த ஆப்ஷன்.
இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்துதல்
தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் இரண்டையும் சேர்த்தும் நீங்கள் பயன்படுத்தலாம். இது இன்னும் கூடுதல் நன்மைகளைக் கொடுக்கும். பகலில் மாய்ஸ்ச்சரைஸருக்கு பதிலாக கற்றாழை ஜெல்லையும், இரவில் தேங்காய் எண்ணெயையும் பயன்படுத்துவது மிகச்சிறப்பாக இருக்கும். தேங்காய் எண்ணெய் நன்கு சருமத்துக்குள் நுழைந்து அதிகமாக ஈரப்பதத்தை வழங்கும். பகலில் கற்றாழை ஜெல் பயன்படுத்த சருமம் மென்மையாக மாறும்.
இறுதியாக, இந்த இரண்டுமே உங்கள் சருமப் பராமரிப்பில் நல்ல மாற்றங்களைத் தரும். சிலருக்கு கற்றாழை ஜெல் அரிப்பு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அதனால், எந்தவொரு வீட்டு வைத்தியமோ அல்லது சந்தைகளில் கிடைக்கும் சருமப் பராமரிப்புத் தயாரிப்புகளோ பயன்படுத்துவதற்கு முன் ஒரு பேட்ச் டெஸ்ட் செய்து கொள்வது நல்லது. அப்போது பக்க விளைவுகள் இல்லாத பயன்களைப் பெறலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
உங்கள் அழகு மற்றும் ஆரோக்கியம் குறித்த தகவல்களுக்கும், வாழ்வின் சகல அம்சங்களுக்கும் வழிகாட்டும் ஜோதிடம்360 உடன் இணைந்திருங்கள். தமிழ் பாரம்பரியத்தின் அழகை உணருங்கள்.