ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்களின் தனிப்பட்ட குணாதிசயங்களுக்கு ஏற்ப விநாயகப் பெருமானின் குறிப்பிட்ட வடிவத்தை வழிபடுவது வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் உதவும். இந்த வழிகாட்டியில், 12 ராசிகளும் எந்த விநாயகர் ரூபத்தை, எப்படி வழிபட்டால் சிறப்பான பலன்களைப் பெற முடியும் என்பதை விரிவாகக் காணலாம்.
ராசி வாரியான விநாயகர் வழிபாட்டு முறைகள்
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தை பெற்றவர்கள், தைரிய மிக்கவர்கள். இவர்கள் வீர கணபதியை வழிபட வேண்டும். சிவப்பு நிற குங்குமத்தால் விநாயகர் உருவம் பிடித்து, செவ்வரளி மாலை அணிவித்து, வேப்ப எண்ணெயால் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இதனால் அவமானங்கள், கோர்ட் வழக்குகள் நீங்கி, ஆயுள் பலம் அதிகரிக்கும், நோய்கள் விலகும், மறைமுக எதிரிகள் தொல்லை நீங்கும். வாழ்வில் உயர்வு ஏற்படும்.
ரிஷபம்
சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற ரிஷப ராசிக்காரர்கள் அம்பிகையின் அருள் பெற்றவர்கள். இவர்கள் ஸ்ரீவித்யா கணபதியை வழிபட வேண்டும். சந்தனம் அல்லது நாட்டு சர்க்கரையில் விநாயகர் உருவம் பிடித்து, மல்லிகை பூ சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இப்படி வழிபடுவதால் திருமண தடைகள் விலகும், தன லாபம் பெருகும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் புதன் பகவானை ஆட்சி நாதனாக கொண்டவர்கள். திறமைகள் அதிகம் கொண்ட இவர்கள் கண் திருஷ்டி, பொறாமை, மறைமுக எதிரிகளால் பாதிக்கப்படுவார்கள். இவர்கள் லட்சுமி கணபதியை வழிபடுவது சிறப்பான பலன்களைக் கொடுக்கும். பச்சை நிற குங்குமத்தால் விநாயகர் பிடித்து வைத்து, மரிக்கொழுந்து அணிவித்து, இலுப்பை எண்ணெயினால் தீபம் ஏற்றி வழிபடுவதால் பெயர், புகழ் உள்ளிட்ட அனைத்து விதமான சுகங்களையும் பெற முடியும்.
கடகம்
சந்திரனை ஆட்சி நாதனாக கொண்ட கடக ராசிக்காரர்கள் அதிக ஞாபக சக்தியும், பல கலைகளில் வல்லவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் ஹேரம்ப கணபதியை வழிபட வேண்டும். உப்பு அல்லது அரிசி மாவால் விநாயகர் உருவம் செய்து வெண்தாமரை மலர் சூட்டி, புங்கை எண்ணெயால் தீபம் ஏற்றி வழிபடுவதால் உயர்வு ஏற்படும்.
சிம்மம்
சூரியனை ஆட்சி அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் தைரியம், வெற்றி, தலைமை குணம், தன்னம்பிக்கை உடையவர்கள். இவர்களுக்கு எப்போதும் வெற்றி மேல் வெற்றிகள் குவிய விஜய கணபதியை வழிபட வேண்டும். அரக்கு நிற குங்குமத்தால் விநாயகர் பிடித்து வைத்து, செந்தாமரை மலர் அல்லது எருக்கன் மாலை சூட்டி விளக்கெண்ணெய் தீபமேற்றி வழிபட வேண்டும்.
கன்னி
புதன் பகவானை ஆட்சி நாதனாக கொண்ட கன்னி ராசிக்காரர்கள் திறமை, இரக்க குணம் கொண்டவர்கள். இவர்கள் மோகன கணபதியை வழிபட வேண்டும். பச்சை நிற குங்குமத்தால் விநாயகர் பிடித்து வைத்து, மரிக்கொழுந்து அணிவித்து, இலுப்பை எண்ணெயினால் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
துலாம்
சுக்கிரனை ஆட்சி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள், லட்சியவாதிகள். இவர்கள் வாழ்க்கையில் மேலும் மேலும் உயர்வு வெற்றிகளை பெறுவதற்கு ஷிந்ர ப்ரஸாத கணபதியை வழிபட வேண்டும். சந்தனம் அல்லது நாட்டு சர்க்கரையில் விநாயகர் உருவம் பிடித்து, மல்லிகை பூ சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
விருச்சிகம்
செவ்வாய் பகவானை ஆட்சி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் சுறுசுறுப்பான குணம் கொண்டவர்கள். நினைத்த காரியத்தை உடனடியாக முடிக்க வேண்டும் என நினைக்கும் இவர்கள் சக்தி கணபதியை வழிபட வேண்டும். சிவப்பு நிற குங்குமத்தால் விநாயகர் உருவம் பிடித்து, செவ்வரளி மாலை அணிவித்து வேப்ப எண்ணெயால் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
தனுசு
குரு பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்கள் நேர்மை குணம் கொண்டவர்கள். இவர்கள் சங்கடஹர கணபதியை வழிபட வேண்டும். மஞ்சளால் விநாயகர் உருவம் பிடித்து வைத்து முல்லை பூ அணிவித்து, தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் தடைகள் விலகி, உயர்வு ஏற்படும்.
மகரம்
சனி பகவானை ஆட்சி நாதனாக கொண்ட மகர ராசிக்காரர்கள் தியாக உள்ளமும், விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மையும் கொண்டவர்கள். அடிக்கடி மனக்குழப்பத்திற்கு ஆளாகும் இவர்கள் யோக கணபதியை வழிபட வேண்டும். பசு சாணம் அல்லது புற்றுமண்ணால் விநாயகர் பிடித்து கனகாம்பரம் சூட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட தொழில் லாபமும், வளர்ச்சியும் ஏற்படும்.
கும்பம்
சனி பகவானின் ஆதிக்கம் கொண்ட கும்ப ராசிக்காரர்கள் அடக்கி ஆளும் குணம் கொண்டவர்கள். இவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய சித்திய கணபதியை வழிபட வேண்டும். பசு சாணம் அல்லது புற்றுமண்ணால் விநாயகர் பிடித்து கனகாம்பரம் சூட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
மீனம்
குரு பகவானை ஆட்சி நாதனாக கொண்ட மீன ராசிக்காரர்கள் கள்ளம், கபடம் அற்ற குழந்தை மனம் படைத்தவர்கள். நினைத்ததை அடைய வேண்டும் என்ற பிடிவாத குணம் கொண்ட இவர்கள் பால கணபதியை வழிபட வேண்டும். மஞ்சளால் விநாயகர் உருவம் பிடித்து வைத்து முல்லை பூ அணிவித்து, தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.