காலங்காலமாக நாம் உணவில் சேர்த்து வரும் மசாலாப் பொருட்கள் வெறும் சுவைக்காக மட்டுமல்ல, எண்ணற்ற மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளன. அவற்றை சரியான முறையில் பயன்படுத்தி வந்தால், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வாய்வுத் தொல்லை, அஜீரணக் கோளாறுகள் மற்றும் அமிலத்தன்மை போன்ற பொதுவான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம். இந்த கட்டுரையில், உங்கள் தினசரி சமையலறையில் உள்ள எளிய மூலிகைகளை பயன்படுத்தி உங்கள் செரிமான அமைப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைப் பார்ப்போம்.
செரிமான மண்டலத்தை சீராக்கும் முக்கிய மூலிகைகள்
தினசரி வாழ்வில் ஏற்படும் அஜீரணம், வாய்வு, வயிறு உப்பசம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு நம் சமையலறையிலேயே சிறந்த தீர்வுகள் உள்ளன. அவற்றை எப்படி பயன்படுத்துவது என்று விரிவாகக் காண்போம்.
இஞ்சி அல்லது சுக்கு (Ginger or Dry Ginger)
இஞ்சி எல்லா வீட்டிலும் அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒரு பொருள் தான். இஞ்சியாகவோ அல்லது காய்ந்த நிலையில் இருக்கும் சுக்காகவோ இதை பயன்படுத்தலாம்.
- காலை வேளை: இஞ்சியாக எடுத்துக்கொள்ளலாம். சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தேனில் கலந்து சாப்பிடலாம் அல்லது இஞ்சியை டீயாக எடுத்துக் கொள்ளலாம்.
- மதிய வேளை: சுக்காக எடுத்துக்கொள்வது நல்லது. சுக்கு பொடியை தண்ணீரில் கலந்து அப்படியே மதிய உணவுக்கு அரை மணி நேரத்திற்கு பிறகு எடுத்துக் கொள்ளலாம்.
சீரகத் தண்ணீர் (Cumin Water)
அசிடிட்டி மட்டுமல்ல, நெஞ்செரிச்சல், குடல் சார்ந்த பிரச்சினைகள் அத்தனைக்கும் தீர்வு தரும் அற்புத மூலிகை சீரகம். ‘அகம் (குடல் மற்றும் உடலின் உள்பகுதி) சீராக வைத்திருப்பதால் தான் இதற்கு சீரகம் என்று பெயர் வந்தது’ என்பார்கள்.
- தினசரி பயன்பாடு: தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதுடன், அசிடிட்டி பிரச்சினை இருப்பவர்கள் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு சீரகத்தை இரவு முழுவதும் ஊறவிட்டு காலையில் அப்படியே தண்ணீராகவும் குடிக்கலாம்.
- மாற்று முறை: கொதிக்க வைத்து டீயாகவும் எடுக்கலாம். நீங்கள் குடிக்கும் தண்ணீரில் சீரகத்தைப் போட்டு கொதிக்க விட்டு, ஆறவைத்து நாள் முழுக்க அந்த நீரைக் குடித்து வரலாம்.
பெருஞ்சீரக டீ (Fennel Tea)
பெருஞ்சீரகம் பெரும்பாலும் அசைவ உணவுகள் மற்றும் குருமா ஆகியவற்றில் வாசனைக்காக சேர்ப்போம். ஆனால் அது வாசனைக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை. அசைவ உணவுகளில் உள்ள கொழுப்பு உள்ளிட்ட கடினமாக ஜீரணமாகக்கூடிய உணவுகளில் சோம்பை சேர்க்கும்போது அது ஜீரணத்தை எளிதாக்கும்.
- உணவுக்குப் பின்: உணவுக்குப் பிறகு அப்படியே பெருஞ்சீரகத்தை பச்சையாக வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.
- டீயாக: கொரகொரப்பாக பொடி செய்து கொண்டு டீயாக செய்து குடிப்பது அசிடிட்டி, வயிறு உப்பசம் உள்ளிட்ட நிறைய பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்கும்.
ஓமம் வாட்டர் (அ) ஓமம் டீ (Ajwain Water / Tea)
ஓமம் சீரகத்தைக் காட்டிலும் மிக சிறிய அளவில் தான் இருக்கும். ஆனால் அதன் வாசனை மிக அதிகமாக இருக்கும். முறுக்கு போன்ற எண்ணெய் பலகாரங்களில் சுவைக்காகவும் எண்ணெயால் ஏற்படும் குமட்டல் மற்றும் வாய்வுத் தொல்லை ஆகியவை ஏற்படாமல் தடுக்கும்.
- சமையலில்: ஓமத்தை நீங்கள் சமையலில் எடுத்துக் கொள்வதோடு, நீராவி முறையில் பிரித்தெடுக்கப்பட்ட ஓமம் வாட்டர் கிடைக்கும்.
- தேநீர்: ஓமம் ஊறவைத்து கொதிக்க வைத்த டீயை உணவுக்குப் பின் அல்லது இரவில் குடித்து வர இரவில் வரும் நெஞ்செரிச்சல் தீரும்.
கொத்தமல்லி குடிநீர் (Coriander Water)
கொத்தமல்லி விதை வயிறு சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்கவும், அஜீரணக் கோளாறு, ஜீரண மண்டல செயல்பாட்டில் ஏற்படும் மந்தத் தன்மை, அமில வாயு ரிஃப்ளக்ஸ், குடல் சார்ந்த பிரச்சினைகள் ஆகிய எல்லாவற்றுக்கும் மிகச்சிறந்த தீர்வாக இந்த கொத்தமல்லி விதையை சொல்லலாம். ஆயுர்வேதம் மற்றும் சித்த வைத்தியத்தில் கொத்தமல்லிக்கு மிகச்சிறந்த இடம் இருக்கிறது.
- பயன்கள்: வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றில் பித்தம் அதிகரிக்கும்போது அதை கட்டுப்படுத்தவும் குறைக்கவும் செய்யும்.
- பயன்பாடு: கொத்தமல்லி விதையை டீயாக கொதிக்க விட்டும் குடிக்கலாம். அல்லது கொத்தமல்லி விதையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து அடுத்த நாள் காலையில் அதை வடிகட்டி குடிக்கலாம்.
நாள்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு
இந்த 5 எளிமையான, வீட்டில் இருக்கும் மூலிகை மசாலாப் பொருள்களை வெறும் உணவில் சேர்ப்பது மட்டும் இல்லாமல், தினசரி உணவுமுறையில் வழக்கமாக்கிக் கொண்டால், நாள்பட்ட அசிடிட்டி, வாய்வுத் தொல்லை, வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகள் உங்களை நெருங்கவே நெருங்காது. இது ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இந்த மூலிகைகளை மருந்தாக நினைத்து பிரச்சினை வரும்போது மட்டும் எடுத்துக் கொள்வதை விட, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான ஒரு பகுதியாக மாற்றிக் கொள்ளுங்கள்.
பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இது எந்தவித மருந்து மற்றும் மருத்துவரின் சிகிச்சைக்கு இணையானது அல்ல. இதன் உண்மைத்தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு Jothidam360 பொறுப்பாகாது.