காமாட்சி துக்க நிவாரண அஷ்டகம் என்பது பராசக்தி காமாட்சி தேவியின் அருளை வேண்டி, நம் துக்கங்களையும், துன்பங்களையும் நீக்க அருளப்பட்ட சக்திவாய்ந்த துதிப்பாடலாகும். இந்த அஷ்டகத்தை தினசரி பாராயணம் செய்வதன் மூலம் மன அமைதி, வளமான வாழ்வு மற்றும் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது ஐதீகம். சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை பக்தி சிரத்தையுடன் உச்சரித்து காமாட்சி தேவியின் திருவருளை பெறுவோம்.
காமாட்சி துக்க நிவாரண அஷ்டகத்தின் சக்தி
காமாட்சி துக்க நிவாரண அஷ்டகம்: மங்கள ரூபிணி மதியிணி சூலினி மன்மத பாணியளே சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி செளந்தரியே கங்கண பாணியன் கனிமுங்க கண்டநல் கற்பகக் காமினியே ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே !
கானுறு மலரெனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள் தானுறு தவ ஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள் மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள் ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே !
சங்கரி செளந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே! பொங்கரிமாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே எங்குலந்தழைத்திட எழில்வடிவுடனே எழுந்த நல்துர்க்கையவளே ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே!
தணதண தந்தண தவிலொளி முழங்கிடத் தண்மணிநீ வருவாய் கணகண கங்கண கதிரொளிவீசிடக் கண்மணி நீ வருவாய் பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய் ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷியே .
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல்பாணியளே! கொஞ்சிடும் குமரணைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல் குமரியளே சங்கடம் தீர்ந்திடச் சமரது செய்தநற் சக்தியெனும் மாயே ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே .
எண்ணியபடி நீ அருளிட வருவாய் எங்குல தேவியளே பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய் கண்ணொளியதனால் கருணையேகாட்டி கவலைகள் தீர்ப்பவளே ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே .
இடர்தரும் தொல்லை இனிமேல் இல்லையென்று நீ சொல்லிடுவாய் சுடர்தரும் அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய் படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய் ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே .
ஜெயஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி ஜெயஜெய துர்க்காஸ்ரீ பரமேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெயஜெய ஸ்ரீதேவி ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே .
காமாட்சி தேவிக்கு அபிஷேகம் மற்றும் அதன் பலன்கள்
- குங்கும அர்ச்சனை செய்தோர்க்கு அம்பாள் கோடிக்கோடி பொன் கொடுப்பாள்.
- சந்தனத்தால் அபிஷேகம் செய்தோர்க்கு அம்பாள் சர்வா பீஷ்டங்களும் கொடுப்பாள்.
- தேனால் அபிஷேகம் செய்தோர்க்கு அம்பாள் திவ்ய தரிசனம் கொடுப்பாள்.
- பாலால் அபிஷேகம் செய்தோர்க்கு அம்பாள் பல ஜென்ம பாவங்களை தீர்ப்பாள்.
- கனியால் அபிஷேகம் செய்தோர்க்கு அம்பாள் கண்முன்னே வந்து நிற்பாள், தீராத வினைகளைத் தீர்ப்பாள்.
தேவி திருவடி சரணம் அம்மா. நின் திருவடி சரணம் சரணம் அம்மா. பவ பய ஹாரிணி அம்பா பவானியே துக்க நிவாரணி துர்க்கே ஜெயஜெய கால விநாசினி காளி ஜெயஜெய சக்தி ஸ்வரூபிணி மாதாவே ஜெயஜெய ஜெயஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே .