அமாவாசை திதி, முன்னோர்கள் வழிபாட்டிற்கு உரிய முக்கியமான நாளாகும். கார்த்திகை மாதத்தில் வரும் அமாவாசையில் (மிருசீரிஷ அமாவாசை) செய்யப்படும் சில காரியங்கள் செல்வ வளத்தை அதிகரிக்க செய்வதுடன், முன்னோர்களையும் திருப்தி அடைய வைத்து, மகாலட்சுமியின் அருளையும் பெற்றுத் தரும். இதனால் பொருளாதாரத்தில் உயர்வு ஏற்பட்டு, பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். ஜோதிடம் ரீதியாக இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு கார்த்திகை அமாவாசை நவம்பர் 19ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10.28 மணிக்கு துவங்கி, நவம்பர் 20ஆம் தேதி பகல் 12.31 மணிக்கு நிறைவடைகிறது. அமாவாசை நாளில் செல்வ வளம், அதிர்ஷ்டம் ஆகியவை அதிகரிக்கும் 5 முக்கிய பரிகாரங்களை இங்கு காணலாம்.
கார்த்திகை அமாவாசையில் செய்ய வேண்டிய 5 முக்கிய பரிகாரங்கள்:
1. புனித நீராடல்
அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து, நதிகளில் புனித நீராடுவது மிக விசேஷமானது. புனித நதிகளில் செல்ல முடியாதவர்கள், வீட்டில் குளிக்கும் நீரில் கங்கை தீர்த்தத்தை கலந்து குளிக்கலாம். குளித்த பிறகு, "ஓம் நமோ நாராயணாயா" என்ற மந்திரத்தை சொல்லி, சூரிய பகவானுக்கு தண்ணீர் படைத்து வழிபட வேண்டும். இது உங்கள் பாவங்களை போக்கி, புண்ணியத்தை சேர்க்கும்.
2. விளக்கு ஏற்றுதல்
அமாவாசை அன்று மாலையில் சூரியன் மறைந்த பிறகு, மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இதை வீட்டு நிலை வாசலிலோ அல்லது துளசி செடிக்கு அருகிலோ ஏற்றுவது சிறப்பு. இப்படி விளக்கேற்றுவதால் சனி பகவானால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்குவதுடன், பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் அருளை பெற்றுத் தரும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்வதால் அதிர்ஷ்டம் பெருகும், வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.
3. அரச மர வழிபாடு
அமாவாசை அன்று மாலையில் அரச மரத்தடியில் கடுகு எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கேற்ற வேண்டும். "ஓம் நமோ பகவதே வாசுதேவாய" என்ற மந்திரத்தை உச்சரித்தபடி அரச மரத்தை சுற்றி வர வேண்டும். இது பித்ரு தோஷத்தை போக்கும் சிறந்த பரிகாரம். அரச மரத்தை வழிபடுவதால் முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன் மகிழ்ச்சி, செல்வ வளம் அதிகரிக்கும். பொருளாதார பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும், மேலும் இது தமிழ் கலாச்சாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.
4. பெருமாள் வழிபாடு
அமாவாசை அன்று பெருமாளை வழிபடுவதால் செல்வ வளம், வெற்றி ஆகியவை தேடி வந்து கொண்டே இருக்கும். அன்றைய தினம் பெருமாளின் விக்ரஹம் இருந்தால் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்யலாம். விக்ரஹம் இல்லை என்றால் படத்திற்கு நைவேத்தியமாக படைத்து, துளசி இலைகள், மஞ்சள் நிற பூக்கள், சந்தனம், இனிப்பு வகைகள் படைத்து வழிபட வேண்டும். "ஓம் நமோ பகவதே வாசுதேவாய" மந்திரத்தையோ அல்லது பெருமாளின் 108 திருநாமங்களையோ சொல்லி வழிபட வேண்டும். இதனால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும், வாழ்க்கையில் செல்வ நிலை உயர்ந்து கொண்டே இருக்கும்.
5. மாவிளக்கு ஏற்றதல்
அமாவாசை அன்று மாலையில் மாவிளக்கு அல்லது களிமண்ணால் செய்யப்பட்ட விளக்கை நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி ஏற்ற வேண்டும். இந்த விளக்கை நதிக்கு எடுத்துச் சென்று, ஓடும் தண்ணீரில் விட வேண்டும். இதனால் நம்முடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என நம்பப்படுகிறது. அதோடு அதிர்ஷ்டம் பெருகும், துன்பங்கள் நீங்கும், செல்வம் சேருவதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். இந்த பரிகாரங்கள் முருகப்பெருமானின் ஆசியையும் பெற்றுத்தரும் என்று நம்பப்படுகிறது.