Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

கேதார கெளரி விரதம்

கேதார கெளரி விரதம் என்பது அன்னை பார்வதி சிவபெருமானின் ஒரு அங்கமாக இணைந்த புனித தினத்தை நினைவுகூரும் ஒரு முக்கிய விரதம். இந்த விரதம் கணவன்-மனைவி ஒற்றுமையையும், மாங்கல்ய பலத்தையும் வழங்கும் என்பது தமிழ் மரபில் ஆழமாக வேரூன்றிய நம்பிக்கை. ஜோதிட ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் இந்த விரதத்தின் சிறப்புகளை இங்கே விரிவாகக் காணலாம்.

கேதார கௌரி விரதம்: ஒரு கண்ணோட்டம்

கேதார கெளரி விரதம் என்பது பெண்களால் கடைபிடிக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த விரதம். கன்னிப் பெண்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், திருமணமான பெண்கள் கணவரை பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த விரதத்தை கடைபிடிப்பது உண்டு. இறைவனை விட்டு இமைப்பொழுதும் நீங்காத வரம் வேண்டும் என்பதற்காக அன்னை பார்வதி தேவி கடைபிடித்த விரதம்தான் கேதார கௌரி விரதம். அன்னையின் தவத்தை மெச்சிய சிவன் தனது உடலில் ஒரு பாகத்தை விட்டுக்கொடுத்தார். கணவன் மனைவி உறவு நேசத்தோடும் பாசத்தோடும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கேதார கௌரி விரதம் இருக்க வேண்டும்.

ஐப்பசி மாத அமாவாசை நாளில் கேதார கௌரி விரதம் கொண்டாடப்படுகிறது. சிவனைக் குறித்து அன்னை பார்வதி மேற்கொண்ட விரதங்களில் முக்கியமானது இந்த கேதார கௌரி விரதம். சிவசக்தி இணைந்த சொரூபத்தை இந்த விரதம் பெற்றுத் தந்ததால் பெண்கள் விரும்பிய எல்லா வளங்களையும் இந்த விரதம் அள்ளித் தரும்.

கேதார கெளரி விரத வரலாறு

சிவசக்தி இணைந்திருந்தால் மட்டுமே உலகம் இயங்கும் என்பதை உணர்த்தும் விதமாக கேதார கௌரி விரதத்தினைப் பூர்த்தி செய்து அன்னை பார்வதியானவள் சிவபெருமானின் உடம்பினில் சரிபாதியைப் பெற்று தனது உரிமையை நிலைநாட்டினார் என்கிறது புராண கதை. ஆதியும் அந்தமும் இல்லாத நாயகன் கயிலை நாதன்தான் என்றும் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்றெல்லாம் கூறி உள்ளார்ந்த பக்தியுடன் சிவனை மட்டுமே வணங்குவார். சிவனைத் தவிர வேறு யாரையும் சிந்திக்காத அவரது போக்கு பிற கடவுளரை அவமதிக்கும் வகையில் அமைந்ததுண்டு. அப்படி ஒரு நிலை பார்வதிக்கு ஏற்பட்டது.

பிருங்கி முனிவர் சம்பவம்

கயிலையில் தன் கணவருடன் அமர்ந்திருக்கும் போது அங்கு வரும் பிருங்கி முனிவர் நேராக வந்து சிவனை மட்டும் வணங்கி வலம் வருவதும், தன்னை திரும்பியே பார்க்காமல் போவதும் கண்டு பார்வதி மனம் வருந்தினாள். எப்படியாவது பிருங்கி முனிவர் தன்னையும் வணங்க வேண்டும் என்று எண்ணிய பார்வதி இறைவனை நெருங்கி அமர்ந்து கொண்டாள். வழக்கம் போல கயிலாயம் வந்த பிருங்கி முனிவர் சிவனுடன் நெருக்கமாக பார்வதி அமர்ந்திருந்ததைக் கண்டு கலங்கவில்லை. வண்டு உருவம் எடுத்து இருவருக்கும் இடையில் புகுந்து சிவனை மட்டுமே வலம் வந்தார்.

இதனைக் கண்டு ஆத்திரமடைந்த பார்வதி, தன்னை அவமதித்த முனிவரின் கால்கள் முடமாகிப் போகட்டும் என்று சபித்தாள். உடனே அது பலிக்கவே நடக்க சக்தியில்லாமல் முனிவர் தடுமாறினார். ஆனால் தனது பக்தருக்கு நேர்ந்த கதியை கண்ட இறைவன் பிருங்கி முனிவர் ஊன்றி நடக்க ஒரு குச்சியை அளித்தார். தோஷம் நீங்குவதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டார் முனிவர். சக்தியின் மனம் ஆறுதல் அடையும் போது சாபம் நீங்கும் என்றார்.

பார்வதி தவமிருந்து பெற்ற வரம்

சிவனையும் என்னையும் பிரித்து பார்க்க கூடாது என்ன செய்வது என்று நாரதரிடம் கேட்கிறார் பார்வதி. அவரோ கௌதம முனிவரிடம் கேட்க சொல்கிறார். நேராக பார்வதி தேவி, கௌதம முனிவரை பார்க்கிறார். அதற்கு கௌதம முனிவர் 21 நாட்கள் கேதாரம் என்ற தலத்திற்கு சென்று விரதம் இருக்க சொல்கிறார். அப்படி விரதம் இருந்தால் இறைவரின் இடபாகத்தை பெற்று இருவரும் ஒருவராகலாம் எப்போதும் பிரிய வேண்டியிருக்காது என்று கூறினார். கயிலாயத்தில் இருந்து பார்வதி பூலோகம் வந்தாள். தன் கணவரை விட்டு ஒருகணமும் பிரியாத வரம் வேண்டும் என்று தவமிருந்தாள். கடுமையான தவத்திற்கு இளகிய இறைவன் பார்வதியை காண பூலோகம் வந்தார். சிவனை கண்ட பார்வதி ஒருநாளும் உமை விட்டு பிரியாத வரம் வேண்டும் என்று வேண்டினாள். பார்வதியின் எண்ணத்தை உணர்ந்த இறைவனும் தன்னுடலுடன் பார்வதியை இணைத்து அர்த்தநாரீஸ்வரராய் ஆனார். இவ்வாறு அம்பிகை இறைவனின் உடலில் ஒருபாதியாகி, கணவரிடம் இருந்து எந்நாளும் பிரிக்க முடியாத பந்தத்தை உருவாக்கிக் கொண்ட நாள் தான் கேதார கௌரி விரத நாள்.

கேதார கெளரி விரதம் உணர்த்தும் உண்மை

குடும்பத்தில் கணவனின் வலிமை குறையும் போது மனைவியானவள் அவருக்குத் துணை நிற்க வேண்டும், அவ்வாறே கணவனும் தனது துணைவிக்கு சரிபாதி உரிமையைத் தரவேண்டும் என்பதை சூசகமாகச் சொல்வதே இந்த கேதார கௌரி விரதம். குடும்பத்தில் கணவனும், மனைவியும் இணைந்து செயல்பட்டால்தான் வெற்றியைக் காண இயலும் என்பதை புராணங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஸ்கந்த புராணத்தின்படி சக்தியின் 21 நாள் கேதார கெளரி விரதம் முடிந்து இந்த தினத்தில் தான் சக்தியை தன்னில் ஒருபாதியாக சிவன் ஏற்றுக் கொண்டார் என்கின்றன புராணங்கள். அந்த நாளே தீபாவளி திருநாளாக கொண்டாடப்படுகிறது.

ஆண்டு தோறும் புரட்டாசி மாத சுக்கில பட்ச தசமி முதல் கிருஷ்ண பட்சத்து சதுர்த்தசி வரை ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசை இருபத்தொரு நாட்கள் கைக்கொள்ளும் விரதமாகும்.

கேதார கெளரி விரத சிறப்புகள்

  • குடும்ப ஒற்றுமை: கேதார கௌரி விரதம் என்பதே கணவன்- மனைவி ஒற்றுமைக்காகவும், என்றென்றும் தம்பதியர் இணைபிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் கடைபிடிக்கப்படுவதாகும்.
  • மாங்கல்ய பலம்: இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் சிவ-சக்தி அருளால் சகல சௌபாக்கியங்களும் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து வீடுபேறடைவர் என புராணங்கள் கூறுகின்றன.
  • நல்ல வரன்: இந்த விரதத்தை திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டியும், திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவர் வேண்டியும் விரதம் இருக்கின்றனர்.
  • விரும்பிய வரம்: கேதார கௌரி விரதத்தினை மன ஒருமைப் பாட்டுடனும், புனித நோக்குடனும் என்ன வரம் வேண்டி அனுஷ்டிக்கிறார்களோ அந்தந்த வரங்களை அம்பாளின் வேண்டுகோளிற்கு இணங்க சிவன் மிக விரைவாகவே கொடுத்து விடுவார் என்பது பலரது அனுபவ உண்மையாகும்.

விரதம் இருக்கும் முறையும் பலன்களும்

இந்த விரதம் இருப்பவர்கள் 21 முடிச்சுகள் கொண்ட காப்பை அணிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு திதிக்கும் ஒரு முடிச்சு என போடுவார்கள். இப்போது 21 நாட்கள் பலரால் விரதம் இருக்க முடிவதில்லை. 3 நாட்கள், ஏழு நாட்கள், ஏன் ஒரு நாள் கூட சிலர் விரதம் இருந்து பூஜை செய்கின்றனர். எம்பெருமானே இவ்விரதத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும் என்று சிவபெரு மானிடம் அம்பிகை கேட்டுக் கொண்டார். சிவன், அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று அவ்வாறே ஆகுக என்று அருள் புரிந்தார். எனவே ஒற்றுமையுடன் வாழ நினைக்கும் தம்பதியர் இந்த விரதம் அனுஷ்டிக்கலாம். இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வரியம் பெருகும். வறுமையொழியும், நினைத்த காரியம் கை கூடும் என்பது பலரது அனுபவ உண்மையாகும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

கேதார கெளரி விரதம் என்பது அன்னை பார்வதி சிவபெருமானின் உடலில் ஒரு பாதியாக இணைந்த தினத்தை நினைவுகூரும் ஒரு விரதம். இது கணவன்-மனைவி ஒற்றுமை, மாங்கல்ய பலம் மற்றும் விரும்பிய வரங்களைப் பெற உதவும்.

கன்னிப் பெண்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், திருமணமான பெண்கள் கணவரை பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம்.

இந்த விரதம் ஆண்டுதோறும் புரட்டாசி மாத சுக்கில பட்ச தசமி முதல் கிருஷ்ண பட்சத்து சதுர்த்தசி வரை, ஐப்பசி மாதத் தீபாவளி அமாவாசை அன்று முடிவடையும் வகையில் இருபத்தொரு நாட்கள் கைக்கொள்ளப்படும். தீபாவளி அமாவாசை நாளன்றும் அனுசரிக்கப்படுகிறது.

இந்த விரதத்தை கடைபிடிப்பதால் கணவன்-மனைவி ஒற்றுமை மேம்படும், மாங்கல்ய பலம் கூடும், நல்ல வரன் அமையும், ஐஸ்வர்யம் பெருகும் மற்றும் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை.

விரதம் இருப்பவர்கள் 21 முடிச்சுகள் கொண்ட காப்பை அணிந்து கொள்ள வேண்டும். இது 21 நாட்கள் விரதத்திற்கு ஒரு அடையாளமாகும். முழுமையாக 21 நாட்கள் இருக்க முடியாதவர்கள் 3, 7 நாட்கள் அல்லது ஒரு நாள் கூட விரதம் இருந்து பூஜை செய்யலாம்.

Our Other Services