கேதார கெளரி விரதம் என்பது சிவ பெருமான் மற்றும் பார்வதி தேவியின் அருளை பெறுவதற்கான மிக முக்கியமான விரதமாகும். செல்வ வளம், நல்ல ஆயுள், ஆரோக்கியம், குடும்ப ஒற்றுமை, வளர்ச்சி ஆகியவை பெருகுவதற்கு மிகவும் ஏற்ற இந்த விரதம், வாழ்வில் இருக்கும் தடைகள் அனைத்தையும் விலக்கி, நீண்ட ஆயுளை அருளும் சக்தி கொண்டது. தீபாவளி உடன் இணைந்து வரும் அமாவாசைக்கு முந்தைய 21 நாட்கள் கடைபிடிக்கப்படும் இந்த தெய்வீக விரதம், அனைத்து விதமான விருப்பங்களையும் நிறைவேற்றும்.
கேதார கெளரி விரதத்தின் முக்கியத்துவம் மற்றும் பலன்கள்
இந்த விரதம் தெய்வீக ஐக்கியத்தை கொண்டாடுகிறது. குறிப்பாக, குடும்பத்தில் கணவன்-மனைவி பிரச்சனை, கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகள் ஆகியோர் இந்த அற்புதமான விரதத்தை கடைபிடிப்பதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி ஏற்பட்டு, நல்ல இல்லற வாழ்க்கை அமைவதற்கு துணைபுரியும். இது செல்வ வளத்தை தருவதுடன், மன அமைதியை அளித்து, விருப்பங்களை நிறைவேற்றும் விரதமாகவும் கருதப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில், கேதார கெளரி விரதம் அக்டோபர் 01ம் தேதி துவங்கி, அக்டோபர் 21ம் தேதி வரை கடைபிடிக்கப்பட உள்ளது.
விரத முறை மற்றும் பூஜை சடங்குகள்
- விரதம் இருப்பவர்கள் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து துவக்கி விட வேண்டும்.
- கலசம் அமைத்து, அதில் கேதாரீஸ்வரரை எழுந்தருள செய்து, 21 நூல் சுற்றி, 21 முடிச்சு போட்டு வைக்க வேண்டும்.
- அந்த கலசத்திற்கு தினமும் பூ, பழங்கள் படைத்து வழிபட வேண்டும்.
- தேங்காய், வாழைப்பழம் உள்ளிட்ட 21 வகையான நைவேத்தியங்கள் மற்றும் 21 வகையான பழங்கள், 21 வில்வ இலைகள் ஆகியவற்றை சிவ பெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் படைத்து வழிபட வேண்டும்.
- விரதம் இருப்பவர்கள் தினமும் ஒரு வேளையாவது உணவு ஏதும் சாப்பிடாமல் இருப்பது சிறப்பு. சிலர் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு, விரதம் இருப்பார்கள்.
- சிவ பெருமான் மற்றும் பார்வதியை போற்றும் மந்திரங்கள், ஸ்லோகங்கள் ஆகியவற்றை சொல்லி, வழிபட வேண்டும். "ஓம் நமசிவாய" மந்திரத்தை சொல்லி வழிபடுவது அல்லது கெளரி அஷ்டோத்திர சதநாமாவளி சொல்லியும் வழிபடலாம்.
கேதார கெளரி விரதத்தின் புராண பின்னணி
புராணங்களின் படி, சிவ பெருமானிடம் கோபம் கொண்ட பார்வதி தேவி, கைலாயத்தில் இருந்து வெளியேறி, கெளதம முனிவரின் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்தார். அவர் அளித்த அறிவுரையின் படி கேதார கெளரி விரதத்தை கடைபிடித்து, பார்வதி தேவி மீண்டும் சிவ பெருமானுடன் இணைந்தார். பார்வதி தேவியின் தீவிரமான பக்திக்கு மகிழ்ந்து, எப்போதும் தன்னை பிரியாமல் இருப்பதற்காக தன்னுடைய உடலில் பாதியை தந்து அருளினார். இதுவே அர்த்தநாரீஸ்வர வடிவமாகும். இது தீபாவளி அன்று வரும் அமாவாசை தினத்தில் நடந்தது என சொல்லப்படுகிறது.