பெண் குழந்தைகள் அவர்களுடைய அடிப்படை கல்வியை முடித்து உயர் கல்வியை தொடருவதற்கு ஊக்குவிக்கும் விதமாக இந்திய அரசு ஏரளமான உதவித்தொகைத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் பிரகதி உதவித்தொகை திட்டம் மாணவியர்களுக்கான முக்கியமான கல்வி உதவித்தொகை திட்டமாக செயல்பட்டு வருகிறது. தற்போது, இந்த உதவித்தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது, யார் விண்ணப்பிக்கலாம், தகுதி நிபந்தனைகள் என்னென்ன, உதவித்தொகை விவரங்கள் மற்றும் முக்கியமான தேதிகள் உள்ளிட்ட பல தகவல்களை இப்பதிவில் விரிவாக தெரிந்துக் கொள்வோம்.
பிரகதி உதவித்தொகை திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
- ஏஐசிடிஇ பிரகதி உதவித்தொகை திட்டம் என்றால் என்ன?
- பிரகதி உதவித்தொகை திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?
- பிரகதி உதவித்தொகை திட்டத்தின் நன்மைகள்
- பிரகதி உதவித்தொகை விவரம்
- பிரகதி உதவித்தொகைக்கான தகுதி வரம்புகள்
- பிரகதி உதவித்தொகைக்கான தேவையான ஆவணங்கள்
- பிரகதி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் முறை
- பிரகதி உதவித்தொகை விண்ணப்பத்தை எவ்வாறு புதுப்பிப்பது?
- பிரகதி உதவித்தொகைக்கான முக்கிய தேதிகள்
ஏஐசிடிஇ பிரகதி உதவித்தொகை திட்டம் என்றால் என்ன?
ஏஐசிடிஇ பிரகதி உதவித்தொகை திட்டம் (AICTE Pragati Scholarship Scheme) என்பது இந்திய அரசின் சார்பாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலால் (AICTE) 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்வி உதவித்தொகை திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ், தொழில்நுட்பக் கல்வியில் பட்டப்படிப்பு (Degree) மற்றும் பட்டயப்படிப்பு (Diploma) பயிலும் தகுதியுள்ள மாணவிகளுக்கு படிப்பு முடியும் வரை ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித்தொகையாக ரூ.50,000 வழங்கப்படுகிறது.
பிரகதி உதவித்தொகை திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?
பிரகதி உதவித்தொகை திட்டத்தின் முக்கிய நோக்கம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் பிற தொழில்நுட்பத் துறையில் பட்டப்படிப்பு அல்லது பட்டயப் படிப்பை தேர்வுசெய்வதற்கு பெண் மாணவிகளை ஊக்குவிப்பதே ஆகும். இதன் மூலம் கல்வியில் சமத்துவத்தை ஊக்குவிக்க முடியும். மேலும், உதவித்தொகையை வழங்குவதன் மூலம், திறமையான இளம் பெண்கள் நிதி பிரச்சனை காரணமாக கல்வி இடைநிற்றலையும் குறைக்க முடியும்.
பிரகதி உதவித்தொகை திட்டத்தின் நன்மைகள்
- பிரகதி உதவித்தொகையானது, ஏஐசிடிஇ அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பில் முதலாமாண்டு அல்லது இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருக்கும் 10,000 மாணவிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
- அதில் 5,000 இடங்கள் பட்டப்படிப்பு மாணவியர்களுக்கும், 5,000 இடங்கள் பட்டயப்படிப்பு மாணவியர்களுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
- தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவியருக்கு கல்லூரி கட்டணம், புத்தகங்கள், கணினி மற்றும் படிப்பு தொடர்பான பொருட்கள் வாங்குவதற்கு ஆண்டுதோறும் ரூ.50,000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
பிரகதி உதவித்தொகை விவரம்
பிரகதி திட்டத்தில் தேர்வாகும் மாணவிகளுக்கு படிப்பு முடியும் வரை உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும், இந்த உதவித்தொகையானது முதலாமாண்டு தொழில்நுட்ப பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு நான்கு ஆண்டுகளுக்கும், இரண்டாமாண்டு தொழில்நுட்ப பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கும் வழங்கப்படும்.
அதேப்போல், முதலாமாண்டு டிப்ளமோ படிக்கும் மாணவிகளுக்கு 3 ஆண்டுகளுக்கும், இரண்டாமாண்டு பட்டயப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படும்.
பிரகதி உதவித்தொகைக்கான தகுதி வரம்புகள்
- பிரகதி உதவித்தொகைக்கு பெண் மாணவிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- இத்திட்டத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
- 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களைப் பொறுத்தே இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
- மாணவியர் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலால் (AICTE) அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி, நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும். அத்துடன், அந்த படிப்பு தொழில்நுட்ப துறையில் ஒன்றாக இருக்க வேண்டும்.
- மாணவியருடைய பெற்றோரின் வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மேல் இருக்கக் கூடாது. அரசு வழங்கிய வருமானச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.
- மேலும், டிப்ளமோ (Diploma) மற்றும் பட்டப்படிப்பில் (Degree) முதலாமாண்டு அல்லது இரண்டாமாண்டு நேரடிச் சேர்க்கை பெற்ற மாணவியராக இருக்க வேண்டும்.
- அதேபோல், இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் மாணவி, வேற எந்தவொரு மாநில, மத்திய, ஏஐசிடிஇ -யின் உதவித்தொகை பெரும் பயனாளியாக இருக்கக் கூடாது.
- இத்திட்டத்தின் உதவித்தொகையை பெற FRILL/Minor/Joint கணக்கைப் பயன்படுத்த முடியாது என்பதால் மாணவி வங்கியில் ஒரு சேமிப்புக் கணக்கை வைத்திருக்க வேண்டும்.
குறிப்பு:
- விண்ணப்பதாரர் திருமணமானவராக இருந்தால், பெற்றோர், மாமனார், மாமியார் ஆகியோரின் ஆண்டு வருமானம் கருத்தில் கொள்ளப்படும்.
- அதேபோல், இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் மாணவி கல்லூரியில் இருந்து இடையில் நின்றுவிட்டால், பிரகதி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அடுத்தடுத்த உதவித்தொகைக்கு தகுதி பெற மாட்டார்கள்.
பிரகதி உதவித்தொகைக்கான தேவையான ஆவணங்கள்
மாணவியர் பிரகதி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் போது பதிவேற்றப்பட வேண்டிய ஆவணங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
- 10 ஆம் வகுப்பு சான்றிதழ் மற்றும் மார்க் ஷீட்
- 12 ஆம் வகுப்பு சான்றிதழ் மற்றும் மார்க் ஷீட்
- ஆதார் அட்டை
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
- கையொப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்
- ஜாதி சான்றிதழ்
- குடும்பத்தின் ஆண்டு வருமானச் சான்றிதழ்
- வங்கி பாஸ்புக் (வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும்)
- நடப்பு கல்வியாண்டிற்கான கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டதற்கான ரசீது
- டிப்ளமோ/பட்டப்படிப்பு சேர்க்கை கடிதத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்
- பொனாஃபைட் / படிப்பு சான்றிதழ்
- பெற்றோரின் உறுதிமொழி
- தொடர்ந்து படித்து வருவதற்கான கல்லூரி முதல்வரின் சான்றிதழ் (Promotion Certificate)
பிரகதி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் முறை
இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகைகளை பெற விரும்பும் மாணவிகள், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் அறிவிப்பு வெளியான பிறகு, தேசிய உதவித்தொகைக்கான வலைத்தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை முதலில் மாணவிகள் படிக்கும் கல்லூரி அல்லது கல்வி நிறுவனம் சரிபார்த்து ஒப்புதல் அளிக்கும். அதைத் தொடர்ந்து, மாநில/யூனியன் பிரதேசத்தின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சரிபார்க்கும். அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில், மாணவியரின் பட்டியல் தயார் செய்யப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவியரின் பட்டியலானது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். பின்னர், அந்த மாணவிகளின் வங்கி கணக்கில் உதவித்தொகை செலுத்தப்படும்.
குறிப்பு: இந்த திட்டம் புதுப்பித்தக்கக் கூடியது என்பதால், தொடர்ந்து உதவித்தொகைய பெற மாணவியர் ஒவ்வொரு ஆண்டும் பிரகதி உதவித்தொகை திட்ட விண்ணப்பத்தை புதுப்பிக்க வேண்டும்.
பிரகதி உதவித்தொகை விண்ணப்பத்தை எவ்வாறு புதுப்பிப்பது?
பிரகதி உதவித்தொகையை ஆன்லைனில் புதுப்பிக்க (Renewal), முந்தைய ஆண்டின் லாகின் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி தேசிய உதவித்தொகை போர்ட்டலில் (NPS) உள்நுழைந்து, புதுப்பித்தல் அல்லது எனது விண்ணப்பங்கள் பகுதிக்குச் சென்று, புதுப்பித்தல் படிவத்தை நிரப்ப வேண்டும். பின்னர், சென்ற ஆண்டு பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண் பட்டியல் பதிவேற்றி, நடப்பு கல்வியாண்டிற்கு தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். அதைத் தொடர்ந்து, விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கும் செய்து அச்சிட்டு, தேவையான ஆவணங்களுடன் மாணவி படிக்கும் கல்லூரியின் உதவித்தொகை பொறுப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டியதும் கட்டாயமாகும்.
பிரகதி உதவித்தொகைக்கான முக்கிய தேதிகள்
இந்த திட்டத்திற்கான விண்ணப்பத் தொடக்க தேதி பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் வெளியாகும். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடை தேதி பொதுவாக டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். அதேபோல், இறுதிப் பட்டியல் அறிவிப்பு வழக்கமாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் வெளியிடப்படும். ஆர்வமுள்ள மாணவிகள் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, காலக்கெடுவிற்கு முன்பே உதவித்தொகைக்கு விண்ணப்பித்துவிட வேண்டும்.
குறிப்பு: சரியான தேதிகள் ஆண்டுதோறும் மாறுபடும் என்பதால், விண்ணப்பதாரர்கள் துல்லியமான தகவல்களுக்கு AICTE அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பெண்களுக்கான AICTE பிரகதி உதவித்தொகை திட்டம் என்பது தொழில்நுட்ப துறையில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்காக இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலால் தொடங்கப்பட்ட கல்வி உதவித்தொகை திட்டமாகும்.
இந்த திட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு உதவித்தொகையாக ஒவ்வொரு ஆண்டும் ரூ.50,000 அவர்களின் படிப்பு முடியும் வரை வழங்கப்படுகிறது.