Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

மதிப்புக் கூட்டும் வேளாண் இயந்திர மானியத் திட்டம்

விவசாயிகள் உற்பத்தி செய்த விளைப்பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கவும், அவர்களின் வருமானத்தை உயர்த்தவும் தமிழ்நாடு அரசு மதிப்புக் கூட்டும் வேளாண் இயந்திர மானியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை மானியம் பெற்று, வேளாண் இயந்திர சேவை மையங்கள் அமைப்பது குறித்த முழு தகவல்களை இங்கு காணலாம்.

மதிப்புக் கூட்டும் வேளாண் இயந்திர மானியத் திட்டம் என்றால் என்ன?

வேளாண் பொறியியல் துறையின் மூலம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 2021 - 22 ஆம் ஆண்டு முதல் 'மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையங்கள் மானியத்தில் அமைக்கும் திட்டம்' என்ற மானியத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், விளைப்பொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையங்கள் அமைக்க நினைக்கும் விவசாய குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

மதிப்புக் கூட்டும் இயந்திர மானியத் திட்டத்தின் நன்மைகள்

  • விவசாய குழுக்குள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் ரூ.10 லட்சம் மதிப்பிலான மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையம் அமைப்பதற்கு ரூ.5 லட்சம் மானியமாகப் பெறலாம்.
  • கிராமப் பகுதிகளில் இயந்திர சேவை மையங்கள் அமைக்கலாம்.
  • விவசாயிகள் தாங்கள் விளைவித்த விவசாய விளைப்பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய முடியும்.
  • விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதோடு, கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

மானியம் பெறுவதற்கான நிபந்தனைகள்

  • தனிப்பட்ட விவசாயிகள் தவிர, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், பாசனநீர் பயன்பாட்டுக் குழுக்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மதிப்புக் கூட்டும் இயந்திரத்தை இயக்குவதற்கு மும்முனை மின்சார இணைப்பு வசதியுடன் கூடிய சொந்தக் கட்டடம் அல்லது வாடகை கட்டடம் வைத்திருக்க வேண்டும்.
  • கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் செயல்படுத்தப்படும் கிராம விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மதிப்புக் கூட்டும் இயந்திர மானியத்துக்கு தேவையான ஆவணங்கள்

  • பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
  • ஆதார் அட்டை நகல்
  • நிலம் சம்பந்தமான சிட்டா மற்றும் அடங்கல்
  • வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல்
  • சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ் நகல்
  • குழுவாக இருந்தால் பதிவு சான்றிதழின் நகல்
  • சாதிச் சான்றிதழ் நகல் (ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பினருக்கு மட்டும்)

மதிப்புக் கூட்டும் இயந்திரத்துக்கான மானியம் எவ்வளவு?

இந்த திட்டத்தின் கீழ், மதிப்புக் கூட்டும் இயந்திரங்களுக்கு 40 சதவீத மானியம் அல்லது ஒவ்வொரு இயந்திரத்துக்கும் நிர்ணயிக்கப்பட்டு உள்ள உச்சவரம்புத் தொகை இவற்றில் எது குறைவோ, அந்த தொகை பின்னேற்பு மானியமாக விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு வழங்கப்படும். ஆதிதிராவிட, பழங்குடியின பிரிவைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளாக இருந்தால், கூடுதலாக 20 சதவீதம் அதாவது, 60 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் மானியம் போக, மீதமுள்ள தொகைக்கு வங்கி மூலம் கடன் பெற விரும்பினால், மத்திய அரசின் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் (Agriculture Infrastructure Fund) மூலமாக 3 சதவிகித வட்டி தள்ளுபடியுடன் கடன் பெறும் வசதியை தமிழ்நாடு அரசு செய்துள்ளது.

மானியம் வழங்கும் இயந்திரங்களின் பட்டியல்

  • சிறிய பருப்பு உடைக்கும் இயந்திரம்
  • மாவரைக்கும் இயந்திரம்
  • தானியம் அரைக்கும் இயந்திரம்
  • கால்நடை தீவனம் அரைக்கும் இயந்திரம்
  • சிறிய வகை நெல் அரவை இயந்திரம்
  • நெல் உமி நீக்கும் இயந்திரம்
  • தேங்காய் மட்டை உரித்தெடுக்கும் இயந்திரம்
  • எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு இயந்திரம்
  • நிலக்கடலை செடியிலிருந்து காய் பிரித்தெடுக்கும் இயந்திரம்
  • கேழ்வரகு சுத்தப்படுத்தி கல் நீக்கும் இயந்திரம்
  • வெங்காயத் தாளை நீக்கும் இயந்திரம்
  • பாக்கு உடைக்கும் இயந்திரம்
  • நிலக்கடலை தோல் உரித்து தரம் பிரிக்கும் இயந்திரம்
  • பருத்தி பறிக்கும் இயந்திரம்
  • தேயிலை பறிக்கும் இயந்திரம்
  • வாழை நார் பிரித்தெடுக்கும் கருவி
  • சூரிய கூடார உலர்த்திகள்

மதிப்புக் கூட்டும் வேளாண் இயந்திர மானியத்துக்கு விண்ணப்பிக்கும் முறை

மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையம் அமைப்பதற்கு மானியம் பெற விருப்பமுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் விவசாய குழுக்கள் 'உழவன் செயலி' மூலமாகவோ அல்லது அருகில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறைச் சார்ந்த வட்டார உதவி பொறியாளர், உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அல்லது மாவட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மதிப்புக் கூட்டும் வேளாண் இயந்திர மானியத் திட்டம் என்பது விளைப் பொருட்களின் மதிப்புக் கூட்டும் வேளண் இயந்திரங்கள் சேவை மையம் அமைப்பதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கும் திட்டமாகும்.

தமிழக அரசின் மதிப்புக் கூட்டும் வேளாண் இயந்திர மானியத் திட்டத்தின் கீழ், ரூ.10 லட்சம் திட்ட செலவில் விளைப்பொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையங்கள் அமைக்க நினைக்கும் விவசாய குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு 50 சதவீதம் மானியம் (ரூ.5 லட்சம்) வழங்கப்படுகிறது.

விவசாயிகள் விளைவித்த விளைப்பொருட்களை இயந்திரங்கள் மூலமாக மதிப்பைக் கூட்டி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது, இயந்திரங்கள் வாங்க மானியம் வழங்கி விவசாயிகளிடையே பல்வேறு மதிப்புக் கூட்டும் இயந்திரங்களை பிரபலப்படுத்துவது போன்றவை தமிழ்நாடு அரசின் மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் சேவை மையங்கள் அமைக்கும் திட்டத்தின் நோக்கமாகும்.

Our Other Services