இந்த நவராத்திரியில் ஒன்பது அல்லது பத்து நாட்களும் என்னென்ன சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வதால் அம்பிகையின் திருவருளையும், அபரிமிதமான சக்தியையும் பெற முடியும் என்பதை இங்கு விரிவாக அறிந்துகொள்வோம். முறையாக இந்த வழிபாடுகளை செய்வதன் மூலம் உங்கள் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும்.
நவராத்திரி வழிபாட்டின் சிறப்புகள்
நவராத்திரி வழிபாடு என்பது சக்தி வழிபாட்டில் மிக முக்கியமான ஒன்றாகும். சக்தி தேவியான துர்கை அம்மனின் அருளை பெறுவதற்கான ஒரு உன்னதமான வழிபாடாக நவராத்திரி வழிபாடு கருதப்படுகிறது. பொதுவாக ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். சில சமயங்களில் அபூர்வமாக நவராத்திரி 10 நாட்கள் கூட வருவதுண்டு.
இந்த நவராத்திரி வழிபாட்டினை முறையாக மேற்கொள்வதால் எதிர்மறை ஆற்றல்களை விரட்டுவதுடன், துர்கை அம்மனின் அருளையும் பெற முடியும் என நம்பப்படுகிறது. சாரதா நவராத்திரி என்பது செழிப்பு, அமைதி ஆகியவற்றை வழங்கக் கூடியதாகும். இந்த மங்களகரமான காலத்தில் நம்முடைய வேண்டுதல்கள், விருப்பங்கள் நிறைவேறுவதற்காக 4 முக்கியமான விஷயங்களை மேற்கொள்வது அவசியமாகும். உங்கள் வாழ்வு சிறக்க ஜோதிட ரீதியாக பார்க்கும்போது, இந்த வழிபாடுகள் பெரும் நன்மைகளைத் தரும்.
நவராத்திரியில் தவறாமல் செய்ய வேண்டிய 4 விஷயங்கள்
1. நவர்ண மந்திரம் பாராயணம்
சக்தி வாய்ந்த நவர்ண மந்திரத்தை நவராத்திரி காலத்தில் உச்சரிப்பது மிகவும் சிறப்பானது. இது தெய்வீக சக்தியுடன் தொடர்புடைய மந்திரங்களில் ஒன்று என்பதால், இதை நவராத்திரி காலத்தில் தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கை பாராயணம் செய்தால் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களின் அருளையும், அதிர்ஷ்டத்தையும் பெறலாம். "ஓம் ஐம் ஹ்ரீம் க்ளீம் சாமுண்டயே விச்சே" என்ற இந்த மந்திரத்தை கையில் ருத்ராட்ச மாலை அல்லது ஜப மாலை வைத்தபடி தினமும் 108 முறை சொல்வதால் ஆபத்துக்கள், நெருக்கடிகள், பிரச்சனைகள் நம்மை நெருங்காமல் தெய்வீக அருள் நம்மை காக்கும் என நம்பப்படுகிறது.
2. அகண்ட தீப வழிபாடு
நவராத்திரியில் மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடாக கருதப்படுவது அகண்ட தீப வழிபாடு. ஒரு பெரிய மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றி, அந்த தீபம் அணையாமல் நவராத்திரியின் ஒன்பது அல்லது பத்து நாட்களும் தொடர்ந்து எரியும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். கடுமையான விரதம் கடைபிடித்து, அகண்ட தீபம் அணையாமல் கண்ணும் கருத்துமாக கவனித்து, நெய் அல்லது எண்ணெய் ஊற்றிக் கொண்டே இருப்பார்கள். இதனால் வீட்டில் நேர்மறை அதிர்வலைகள் ஏற்பட்டு, தெய்வீக சக்தியை ஈர்த்து வீட்டில் எப்போதும் இருக்க செய்யும் என நம்பப்படுகிறது. இது ஜோதிட ரீதியாகவும் குடும்பத்திற்கு சுபீட்சம் தரும்.
3. தேவிக்கு விதவிதமான அலங்காரங்கள்
நவராத்திரி கோலத்தில் அம்பிகையை விதவிதமாக அலங்கரிப்பது, அம்பிகையின் மீது நாம் கொண்டுள்ள பக்தியின் வெளிப்பாடாகும். இது தெய்வீக சக்தியுடன் நம்மை நெருக்கமாக்கிக் கொள்வதற்கான வழியாகும். விதவிதமான நகைகள், பூக்கள் வைத்து அலங்கரித்து, அம்பிகைக்கு மங்கள பொருட்களை படைத்து வழிபடும் போது தேவியின் அருளைப் பெற முடியும். அம்மனுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், மருதாணி, சிவப்பு நிற புடவை உள்ளிட்டவைகள் வழங்குவதால் அம்பிகையின் மனம் மகிழும் என கருதப்படுகிறது. இதனால் நமக்கு நல்வாழ்வு அளித்து, விருப்பங்களை நிறைவேற்றி அம்பிகை அருள்வாள் எனச் சொல்லப்படுகிறது.
4. சிவப்பு நிற பொருட்கள் பயன்படுத்துவது
சிவப்பு நிறம், மங்களத்தின் அடையாளமான நிறமாக கருதப்படுகிறது. அதனால் இது அம்பிகைக்கு விருப்பமான நிறமாகவும் கருதப்படுகிறது. இதனால் நவராத்திரியின் போது அம்பிகையை சிவப்பு நிற வஸ்திரம் விரித்த ஆசனத்தில் எழுந்தருள செய்வது, சிவப்பு நிற ஆடையால் அம்பிகைக்கு அலங்கரித்து, சிவப்பு நிற விரிப்பில் அமர்ந்து மந்திர ஜபம் செய்வது மிகவும் சிறப்பான பலன்களை தரும். இந்த எளிய செயல்பாடு நம்முடைய தியானம், மந்திர ஜபம், வழிபாடு ஆகியவற்றின் சக்தியை பல மடங்காக அதிகரிக்க செய்து, நன்மைகளையும் அதிகரிக்க செய்வதாக கருதப்படுகிறது. இவை அனைத்தும் தமிழ் கலாச்சாரத்தில் மிக முக்கியமான வழிபாடுகளாகும்.