ஒரு வருடத்தில் வரும் 24 அல்லது 25 ஏகாதசிகளில், ஆவணி மாதம் வரும் பரிவர்த்தினி ஏகாதசி, விஷ்ணுவின் வாமன அவதாரத்துடன் தொடர்புடைய ஒரு தனிச்சிறப்பு மிக்க விரதமாகும். இந்த புண்ணிய நாளில் விரதம் அனுஷ்டிப்பதன் மூலம் அளவற்ற பலன்களையும், பாவ விமோசனத்தையும் பெறலாம்.
ஏகாதசி விரதத்தின் சிறப்பு
ஏகாதசி விரதம் என்பது ஒரு வருடத்தில் 24 அல்லது சில வருடங்களில் 25 முறை வருவது உண்டு. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு முறை ஏகாதசி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஏகாதசி விரதம் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயரும், ஒவ்வொரு வகையான தனிச்சிறப்பும், தனித்தனியான பலனும் உண்டு. ஒரு வருடத்தில் வரும் 24 ஏகாதசிகளிலும் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது மிக மிக உயர்ந்தது. அப்படி முடியாதவர்கள் முக்கியமான ஒரு சில ஏகாதசிகளில் மட்டுமாவது கண்டிப்பாக விரதம் இருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.
பரிவர்த்தினி ஏகாதசி: தனிச்சிறப்பு மிக்க ஒரு விரதம்
அப்படி சிறப்பு வாய்ந்த விரதங்களில் ஒன்று ஆவணி மாதத்தில் வரும் பரிவர்த்தினி ஏகாதசி. ஏகாதசி விரதங்களிலேயே மகாவிஷ்ணுவின் அவதாரங்களுடன் தொடர்புடைய ஒரே விரதம் பரிவர்த்தினி ஏகாதசி விரதம் மட்டுமே. இந்த விரதத்திற்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு என்பதை தெரிந்து கொள்ளலாம். வாமன ஏகாதசி எனப்படும் பார்ஷ்வா பரிவர்த்தினி ஏகாதசி ஆவணி மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசியை குறிக்கிறது. இது பகவான் விஷ்ணுவின் வாமன அவதாரத்தின் மகிமையைக் கூறுகிறது. ஜல்ஜிலினி ஏகாதசி மற்றும் ஜெயந்தி ஏகாதசி என்றும் கூறப்படுகிறது. இந்த நாள் ஜோதிட ரீதியாகவும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
பார்ஷ்வா பரிவர்த்தினி ஏகாதசி வரும் நேரம் திருமால் பாற்கடலில் ஆதிசேஷன் மேல் உறங்கிக் கொண்டு இருக்கும் வேளை. இந்த நாளில் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் திரும்பிக் கொள்கிறார். இதனாலேயே இந்த ஏகாதசிக்கு இந்த பெயர் வந்தது. இப்போது உறங்குபவர் ஹரிபோதினி ஏகாதசி (கார்த்திகை மாதம் வருவது) வரை உறங்குகிறார். பார்ஷ்வா ஏகாதசி தக்ஷிணாயன புண்ணிய காலத்தில் வருவது. சாதுர்மாஸ்ய நேரமும் ஆகும். அதனால் மிகவும் புனிதமாக கருதப்படுவது. எல்லா பாவங்களையும் போக்க வல்லது.
பரிவர்த்தினி ஏகாதசி விரத முறை
பரிவர்த்தினி ஏகாதசி விரதம் அனுசரிப்பது மற்ற ஏகாதசி விரதம் போன்றது தான். இந்த நாளில் முப்பெரும் தேவர்களையும் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) வணங்குதல் வேண்டும். வாமன தேவரையும், திருவிக்ரமரையும் வணங்க வேண்டும். அன்னத்தில் தயிரை சேர்த்து அதனுடன் வெள்ளியும் ஒரு பிராமணருக்கு தானம் கொடுத்து இரவு முழுதும் கண்விழித்து இருந்தால் புண்ணிய பலன் ஏராளமாக அடையலாம்.
பரிவர்த்தினி ஏகாதசி விரத பலன்கள்
- இந்த விரதமிருந்தால் ஆயிரம் யானை தானம் செய்த பலன் கிடைக்கும்.
- இந்த விரதம் மூலம் வைகுண்ட பதம் கிடைக்கும்.
- இந்த விரதம் அனுஷ்டித்தால் வாழ்வில் செய்த தீவினைகளின் பலனிலிருந்து விடுபடலாம்.
- பாவ சுமையிலிருந்து விடுபடலாம்.
இந்த நாளில் முழு உபவாசமாக இருந்து பெருமாளை வழிபட முடியாதவர்கள், குறைந்தபட்சம் இந்த நாளில் பெருமாளுக்குரிய நாமங்களை உச்சரித்தோ, விஷ்ணு சகஸ்ரநாமம், ஏகாதசி கதைகள், விஷ்ணு புராணம் போன்ற நூல்களை படிப்பதோ அல்லது காதுகளால் கேட்பதோ கூட மிகவும் சிறந்த பலன்களை தரும் என சொல்லப்படுகிறது.