வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகத்தில் தினமும் மின்சார தேவை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கிடையில், மின்சார கட்டணமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதை ஈடு செய்வதற்காக பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் வந்துள்ள நிலையில், பொதுமக்களிடையே அதிகம் பிரபலமடைந்து வருவது சோலார் மின்சக்தி பயன்பாடு தான். பகலில் கிடைக்கும் சூரிய ஒளியை நமக்குத் தேவையான மின்சாரமாக மாற்றும் ஒரு சாதனமே சோலார் பேனல். இது சுற்றுச்சூழலைச் சேதப்படுத்தாத ஒரு சாதனமாகவும் உள்ளது. ஆனால், இந்த சோலார் மின் தகடுகளை அமைப்பதற்கு கொஞ்சம் செலவாகும். இது ஏழை, எளிய மக்களுக்கு சவாலானதாக இருக்கலாம். இதை கருத்தில் கொண்டே இந்திய அரசாங்கம் சோலார் மின் தகடுகள் அமைப்பதற்கு மானியம் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்து உள்ளது. தற்போது, இந்த திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, தகுதி வரம்புகள் என்னென்ன, மானியம் எவ்வளவு உள்ளிட்ட பல தகவல்களை இப்பதிவில் விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.
பிரதம மந்திரி சூர்ய கர் முஃப்ட் பிஜிலி யோஜனா திட்டம்
அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவின் (22 ஜனவரி 2024) போது, பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் சூர்யோதயா யோஜனா என்ற திட்டத்தை தொடங்க இருப்பதாக அறிவித்திருந்தார். பின்னர், அத்திட்டம் பிரதம மந்திரி சூர்ய கர் முஃப்ட் பிஜிலி யோஜனா திட்டம் என மறுபெயரிடப்பட்டு, 15 பிப்ரவரி 2024 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதற்காக வீடுகளின் மேற்கூரையில் சோலார் மின் தகடுகள் நிறுவுவதற்காக மானியங்கள் வழங்கப்படுகின்றன.
ரூ.3.5 லட்சம் மானியம் வழங்கும் தமிழ்நாடு அரசின் சூரிய ஒளி கூடார உலர்த்தி மானியத் திட்டம்..
பிரதம மந்திரி சோலார் மானியத் திட்டத்தின் நன்மைகள்
- நாடு முழுவதும் 1 கோடி வீடுகளில் சூரிய மின் தகடுகள் பொருத்துவதன் மூலம் இலவச மின்சாரம் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
- மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட உள்ளது.
- மின்சாரக் கட்டணத்திற்காக செலவிடும் பணத்தை மிச்சப்படுத்தலாம்.
- ரூ.30,000 முதல் ரூ.78,000 வரை அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.
- சூரிய மின்கலங்களை நிறுவுதல், உற்பத்தி செய்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றில் தொழில்நுட்ப திறன்களை கொண்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
- பாரம்பரிய எரிசக்தி ஆதாரங்களை சார்ந்திருப்பது குறைக்கப்பட்டு, சுத்தமான மற்றும் நிலையான எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.
- அரசாங்கத்திற்கு மின்சார உற்பத்தி செலவுகளும் குறைகிறது.
பிஎம் சூர்ய கர் திட்டத்தில் சோலார் பேனல்களுக்கு எவ்வளவு மானியம் கிடைக்கும்?
சூரிய மின் தகடுகளை நிறுவுவதில் ஆன் கிரிட் (ON Grid) மற்றும் ஆஃப் கிரிட் (OFF Grid) என இரு வகைகள் இருக்கின்றன. இதில் ஆஃப் கிரிட் வகைக்கு மானியங்கள் ஏதும் வழங்கப்பட மாட்டாது. அதேசமயம், இதற்கான செலவும் அதிகம், எப்போதும் மின் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமும் இருக்காது. ஆனால், ஆன் கிரிட் வகைக்கு மட்டுமே இத்திட்டத்தில் மானியங்கள் வழங்கப்படுகிறது. அந்தவகையில், சூரிய சக்தி மின் தகடுகளை நிறுவுவதற்கு எவ்வளவு செலவாகும் மற்றும் அரசாங்கம் வழங்கும் மானியத்தின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மானியங்கள் சோலார் பேனல் அமைப்பின் திறனை பொருத்து மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளவும். அதேபோல், மானியம் போக மீதமுள்ள தொகை விண்ணப்பதாரரின் செலவாகும்.
குடியிருப்பு வீடுகளுக்கான மானியம்:
| சோலார் பேனல் சிஸ்டத்தின் கொள்ளளவு (kW) | சோலார் பேனல் நிறுவுவதற்கு ஆகும் மொத்த செலவு | கிலோவாட் ஒன்றுக்கு அரசு வழங்கும் மானியம் |
|---|---|---|
| 1 கிலோவாட் | ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை | ரூ.30,000 |
| 2 கிலோவாட் | ரூ.80,000 முதல் ரூ.1,00,000 வரை | ரூ.60,000 |
| 3 கிலோவாட் | ரூ.1,20,000 முதல் ரூ.1,50,000 வரை | ரூ.78,000 |
| 4 கிலோவாட் | ரூ.1,60,000 முதல் ரூ.2,00,000 வரை | ரூ.78,000 |
| 5 கிலோவாட் | ரூ.2,00,000 முதல் ரூ.2,50,000 வரை | ரூ.78,000 |
குறிப்பு: அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பேனல்களின் விலைகள் எடுத்துக்காட்டிற்காக மட்டுமே. எனவே, ஒவ்வொரு பேனலின் உண்மையான விலையானது அவற்றின் பிராண்ட், தரம், இருப்பிடம், அமைப்பின் அளவு மற்றும் சந்தை நிலைமைகள் ஆகியவற்றை பொறுத்து மாறுபடலாம்.
GHS/RWA- க்கான மானியம்:
கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் (Group Housing Society) மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கும் (Resident Welfare Association) இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி, 1 கிலோவாட்டிற்கு ரூ.18,000 மானியமாக வழங்கப்படுகிறது. எனவே, EV சார்ஜிங் உட்பட பொதுவான வசதிகளுக்கு 500 கிலோவாட் வரை (ஒரு வீட்டிற்கு 3kW) விண்ணப்பிக்கலாம்.
75% மானியத்தில் சோலார் பம்புசெட்டு அமைக்கலாம்.. முதலமைச்சர் சோலார் பம்புசெட்டு மானியத் திட்டம்..
சோலார் பேனல் அமைப்பதால் இவ்வளவு லாபமா?
சோலார் பேனல்கள் அமைப்பதன் மூலம் மின்சார கட்டணத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். அதன்படி, நீங்கள் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதை ஒரு சிறிய கணக்கீடு மூலம் தெரிந்துக் கொள்ளலாம். ஒரு வீட்டில் 3 கிலோவாட் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டவுடன் சோலார் மீட்டர் ஒன்றும் பொருத்தப்படும். நாள் ஒன்றுக்கு 25 யூனிட் மின்சாரம் உற்பத்தியாகிறது என்று வைத்துக் கொண்டால், அதில் 13 யூனிட்டை மட்டும் பயன்படுத்தி விட்டு, மீதமுள்ள 12 யூனிட்டை சோலார் மீட்டர் வழியாக அரசுக்கு கொடுத்து விடலாம். பயன்படுத்திய அளவில் இருந்து கொடுக்கப்பட்ட அளவைக் கழித்தால் வரும் 1 யூனிட்டுக்கு மட்டும் மின் கட்டணம் செலுத்தினால் போதுமானது. ஒரு நாளைக்கு 1 யூனிட் என்றால் 30 நாட்களுக்கு 30 யூனிட் வரும். மாதந்தோறும் 300 யூனிட்டுகள் இலவசம் என்பதால் நீங்கள் பயன்படுத்தும் இந்த 30 யூனிட்டுகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமே இல்லை. ஒருவேளை இந்த யூனிட்டுகளின் அளவு 300ஐ தாண்டினால் அதற்கு மட்டும் மின் கட்டணம் செலுத்தினால் போதும். ஆகவே, சோலார் பேனல்களை நிறுவுவதன் மூலம் மின் கட்டணம் வெகுவாக குறைவதோடு, நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
பிரதம மந்திரி சோலார் மானியத்திற்கான தகுதி வரம்புகள்
- விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
- சூரிய மின் தகடுகளை நிறுவுவதற்கு ஏற்ற மொட்டை மாடியுடன் (மேற்கூரை) கூடிய சொந்த வீடு வைத்திருக்க வேண்டும்.
- வீட்டிற்கு DISCOM இலிருந்து செல்லுபடியாகும் மின்சார இணைப்பை பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் இதற்கு முன்பு எந்த அரசாங்க சூரிய மின்சக்தி மானியத்தையும் பெற்றிருக்கக்கூடாது.
- ஒரு வீட்டிற்கு சூரிய பேனல் சிஸ்டத்தின் திறன் 10 கிலோவாட்டுக்குள் மட்டுமே இருக்க வேண்டும்.
- கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் (Group Housing Society) மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்களும் (Resident Welfare Association) விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு சூரிய பேனல் சிஸ்டத்தின் உச்சவரம்பு 500 கிலோவாட் வரை ஆகும்.
- MNRE-எம்பனேல் செய்யப்பட்ட விற்பனையாளர்களால் மட்டுமே சோலார் பேனல்கள் நிறுவப்பட வேண்டும்.
பிரதம மந்திரி சோலார் மானியம் பெற தேவையான ஆவணங்கள்
இந்த திட்டத்தின் கீழ் சோலார் பேனல் மானியம் பெற விண்ணப்பதாரருக்கு அதிக ஆவணங்கள் தேவையில்லை. பின்வரும் ஆவணங்களை மட்டும் சமர்ப்பித்தாலே போதுமானது.
- ஆதார் கார்டு அல்லது பான் கார்டு
- சமீபத்திய மின்சார பில், ரேஷன் கார்டு அல்லது சொத்து வரி ரசீது
- சொத்துப் பத்திரம் அல்லது உரிமைச் சான்றிதழ் (சொந்த வீடு என்பதற்கான ஆதாரம்)
- வங்கி பாஸ்புக் நகல் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை (Cancelled Cheque)
இலவச சூரிய மின்சக்தியுடன் கூடிய வீடு கட்டித்தரும் முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம்..
பிரதம மந்திரி சோலார் மானியத்திற்கு விண்ணப்பிக்கும் முறை
- இத்திட்டத்தில் மானியம் பெற முதலில் பிரதம மந்திரி சூர்ய கர் யோஜனாவின் ( https://pmsuryaghar.gov.in/ ) அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்குச் செல்லவும்.
- 'நுகர்வோர்' விருப்பத்திற்கு சென்று 'இப்போது விண்ணப்பிக்கவும்' என்பதை தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது, மொபைல் எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, 'ஆம், நான் PM சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனாவின் அனைத்து வழிகாட்டுதல்களையும் படித்துவிட்டேன்' என்பதைத் தேர்ந்தெடுத்து, 'சரிபார்க்கவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.
- SMS மூலம் பெறப்பட்ட மொபைல் OTP-ஐ உள்ளிட்டு, 'லாக்இன்' என்பதைக் கிளிக் செய்யவும்.
- இப்போது, உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, மாநிலம், மாவட்டம் மற்றும் பின் குறியீடு போன்ற தேவையான விவரங்களை உள்ளிட்டு 'சேமி' என்பதைக் கிளிக் செய்யவும்.
- பின்னர், படிவத்தை நிரப்ப விற்பனையாளர் வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- 'சூரிய மின் தகடுக்கு விண்ணப்பிக்கவும்' என்பதை கிளிக் செய்து, தேவையான விவரங்களை உள்ளிட்டு படிவத்தை நிரப்பி, மின்சார பில், ஆதார் கார்டு, சொத்துப் பத்திரம் போன்ற தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.
- பதிவேற்றிய பிறகு, DISCOM-இன் ஒப்புதலுக்காகக் காத்திருக்கவும்.
- ஒப்புதல் பெற்ற பிறகு, உங்கள் வீட்டில் சூரிய மின் தகடுகளை அமைக்க DISCOM-இல் பதிவுசெய்யப்பட்ட விற்பனையாளரைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவுடன், சோலார் பேனல்கள் விற்பனையாளரால் உங்கள் வீட்டின் மேற்கூரையில் நிறுவப்படும். முடிந்ததும், பேனல்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றவும். அதை சரிபார்த்து DISCOM ஒரு ஆணையிடுதல் சான்றிதழை வழங்கும்.
- மானியத்தைப் பெற போர்ட்டலில் உங்களுடைய கணக்கில் மீண்டும் உள்நுழைந்து அந்த ஆணையிடுதல் சான்றிதழையும், வங்கி விவரங்களையும் பதிவேற்றவும். அடுத்த 30 நாட்களுக்குள் மானியம் பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக மாற்றப்படும்.