இந்துக்களுக்கு மிகவும் புனிதமான சாவன் மாதம், குறிப்பாக சிவ பக்தர்களுக்கு முக்கியமான காலம். 2025-ஆம் ஆண்டு சாவன் மாதம் ஜூலை 11-ல் தொடங்கி ஆகஸ்ட் 9-ல் முடிகிறது. இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிறப்பு வாய்ந்தது. திருமணமாகாத பெண்கள் நல்ல வாழ்க்கை துணையை வேண்டி விரதம் இருக்கிறார்கள். சிவபெருமான் நல்ல திருமண வாழ்க்கை, ஆரோக்கியம் மற்றும் மன அமைதியை அருள்கிறார். புனிதமான சாவன் மாதத்தில், சிவபெருமானின் பக்தர்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் விரதம் இருந்து அவரின் ஆசீர்வாதத்தை பெறுகிறார்கள். மகிழ்ச்சியான வாழ்க்கை, அன்பு, செழிப்பு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு பக்தர்கள் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள். சாவன் சோமவார விரதம் எப்படி இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை இங்கே விரிவாகப் பார்ப்போம்.
சாவன் சோமவார விரதத்தின் போது செய்ய வேண்டியவை
முன் தயாரிப்பு: முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து, பூஜைக்கு தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதிகாலை எழுதல்: அன்றைய தினம் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து உடலையும் மனதையும் சுத்தப்படுத்தவும்.
ஆடை: வெள்ளை அல்லது மஞ்சள் நிற ஆடைகளை அணியுங்கள். இது தூய்மை, மங்கலம் மற்றும் ஆன்மீகத்தை குறிக்கிறது.
பிரார்த்தனை: அமைதியான காலை நேரமானது சிவபெருமானுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்த உதவுகிறது. சிவன் படம் அல்லது லிங்கத்திற்கு முன் அமர்ந்து உங்களின் விருப்பங்கள், வேண்டுதல்கள், கோரிக்கைகளை சிவ பெருமானிடம் மன திறந்து சொல்லுங்கள். நீங்கள் செய்யும் இந்த எளிமையான பூஜையை ஏற்றுக்கொண்டு, உங்களின் விருப்பங்களை விரைவில் நிறைவேற்றித் தர வேண்டும் என சிவ பெருமானிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.
அபிஷேகம்: சிவபெருமானுக்கு பஞ்சாமிர்தத்தை அர்ப்பணிக்கவும். முதலில் சுத்தமான தண்ணீர், பால், தயிர், தேன், நெய் மற்றும் சர்க்கரை சேர்த்து அபிஷேகம் செய்யவும். "ஓம் நம சிவாய" அல்லது மகா மிருத்யுஞ்சய மந்திரத்தை உச்சரிக்கவும். இந்த அபிஷேகம் உங்கள் மனதையும் உடலையும் சுத்தப்படுத்துகிறது. மந்திரங்களை உச்சரிப்பது சிவபெருமானின் தெய்வீக சக்தியுடன் உங்களை இணைக்க உதவுகிறது.
விரத கதையை கேட்பது: சாவன் சோமவார விரத கதை பக்தியுடன் சிவபெருமானை மகிழ்வித்த ஒரு பக்தரின் கதையை கூறுகிறது. இது விரதத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளவும் சிவபெருமானுடன் உணர்வுபூர்வமாக தொடர்பு கொள்ளவும் உதவுகிறது. இந்த கதை நம்பிக்கை மற்றும் பக்தியின் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது. இது சிவ பெருமானை மகிழ்விக்க உதவுகிறது.
விரத வகைகள்: உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் நாள் முழுவதும் உபவாசமாக இருப்பது, ஒருவேளை மட்டும் சாப்பிடாமல் இருப்பது அல்லது பழங்கள் மற்றும் பால் மட்டும் சாப்பிட்டு என மூன்று வகைகளில் விரதம் இருக்கலாம். உங்கள் உடல்நலம் மற்றும் திறனுக்கு ஏற்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
முக்கிய குறிப்பு: சவான் சோமவார விரதத்தின் போது உப்பு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
மாலையில் செய்ய வேண்டிய பூஜை
மாலையில் ஒரு சிறிய பூஜை செய்து, விளக்குகளை ஏற்றி, பூக்கள் அல்லது வில்வ இலைகளை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கவும். சிவ ஆரத்தி பாடி, உங்கள் விரதத்தின் படி விரதத்தை நிறைவு செய்யவும். அன்றைய தினத்தின் கடைசியில் மாலை பூஜை செய்வது மிகவும் அவசியம்.
பல பக்தர்கள் சாவன் மாதத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்த விரதத்தை கடைபிடிக்கிறார்கள். முடிந்தவர்கள் அனைத்து திங்கட்கிழமைகளிலும் இந்த விரதத்தை இருக்கலாம். அப்படி முடியாதவர்கள் குறைந்தபட்சம் ஒரு திங்கட்கிழமையாவது இந்த விரதத்தை கடைபிடிப்பது சிறந்தது. இது சிவ பெருமானின் முழுமையான அருளை பெறுவதற்கான விரதமாக கருதப்படுகிறது. ஜோதிட ரீதியாக இந்த விரதங்கள் நல்ல பலன்களைத் தரும் என்று நம்பப்படுகிறது.