திருவண்ணாமலை திருத்தலத்தின் தனிச்சிறப்பான கிரிவல வழிபாட்டைப் பற்றிய அற்புதமான தகவல்கள், விதிகள், மற்றும் அதன் மகிமைகளை இங்கு காணலாம். ஜோதிட ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் கிரிவலம் தரும் பலன்களை அறிந்து கொள்வோம். தமிழ் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய பகுதியான இந்த கிரிவல முறைகளை சரியாகப் பின்பற்றி முழுப் பலனையும் பெறுங்கள்.
திருவண்ணாமலை கிரிவலம் ஒரு பார்வை
திருவண்ணாமலை என்றாலே நினைவிற்கு வருவது அண்ணாமலையார் கோவில் மற்றும் பௌர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை வலம் வந்து வழிபடுவதுதான். பௌர்ணமி மட்டுமல்லாமல், எந்த நாளில் சென்று பார்த்தாலும் பக்தர்கள் கிரிவலம் சென்றுகொண்டுதான் இருப்பார்கள். இருப்பினும், அதிகமான கூட்டத்தால் பௌர்ணமி கிரிவலமே பிரபலமாக அறியப்படுகிறது.
கடந்த 25 ஆண்டுகளில் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் வருவோரின் எண்ணிக்கை மாதந்தோறும் அதிகரித்து வருகிறது. ஒருமுறை கிரிவலம் வந்தவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வருடமும் கிரிவலம் செல்வதை வழக்கமாக்கிக் கொள்கின்றனர். கிரிவலம் சென்றால் துன்பங்கள் நீங்கி, நன்மைகள் அதிகரிக்கும் என்பதைத் தாண்டி சித்தர்களின் தரிசனம் பெறவும், அண்ணாமலையார் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாகவும் மீண்டும் மீண்டும் கிரிவலம் வருபவர்களே அதிகம்.
கிரிவலத்தால் கிடைக்கும் பலன்கள் மற்றும் அதன் வரலாறு
திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது நான்கு யுகங்களிலும் நடைபெற்று வருவதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. கிரிவல மகிமையை கலியுகத்தில் முதன்முதலாக பாண்டிய மன்னன் வஜ்ராங்கதன் அறிந்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஒருமுறை மன்னன் வேட்டையாடச் சென்றபோது, புனுகுப் பூனையை விரட்டிச் சென்றான். அது மலையை 5 முறை சுற்றி வந்தது. இவ்வாறாக பூனையும், குதிரையும் சுற்றி வர, மன்னனும் குதிரை மீது அமர்ந்து சுற்றி வந்தான்.
5 முறை சுற்றி முடிந்ததும் கோயிலுக்கு எதிரே வந்தபோது பூனையும், குதிரையும் கீழே விழுந்து உயிரை விட்டன. அப்போது, உயிரிழந்த பூனையும், குதிரையும் கந்தர்வர்களாக மாறி விண்ணுலகம் சென்றன. அவை கைலாயத்தில் சிவ பூஜை செய்த கந்தர்வர்கள் என்றும், சாபத்தின் காரணமாக பூனையாகவும், குதிரையாகவும் மாறியதாகவும், கிரிவலத்தால் சாப விமோசனம் பெற்றதாகவும் மன்னனிடம் தெரிவித்தன. "நாங்கள் இன்று இந்த புண்ணிய மலையை ஐந்து முறை வலம் வந்ததால், சாப விமோசனம் பெற்று கைலாயம் செல்கிறோம். ஆனால், நீ குதிரை மீதிருந்தபடி கிரிவலம் வந்ததால், உனக்கு பலன் கிடைக்கவில்லை. இந்த மலையை நீயும் வலம் வந்தால் ஒவ்வொரு அடிக்கும், ஒரு அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவாய்" என்று கூறி விண்ணுலகம் சென்றார்கள்.
இவ்வாறாக பல்வேறு மகிமைகளை கொண்டதாக திருவண்ணாமலை இருப்பதன் காரணமாகவே, கிரிவலம் செல்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.
எவ்வளவு நேரத்தில் கிரிவலம் வர வேண்டும்?
பார்வதி தேவி, சிவபெருமானை எப்போதும் பிரியாமல் இருப்பதற்காக, அவரது உடலில் சரி பாதியாக பெறுவதற்காக கடும் தவம் புரிந்தார். சிவனின் அருளைப் பெற்று, அவரது உடலில் சரி பாதியைப் பெற வேண்டும் என வேண்டிக் கொண்டாள். அதற்கு சிவபெருமானும், "எனது பிரமாண்ட வடிவத்தை அதிகாலை நேரத்தில் 2 நாழிகைக்குள் (48 நிமிடங்கள்) நீ சுற்றிவர வேண்டும். அவ்வாறு சுற்றி வந்தால், என்னில் சரி பாதி வழங்குவேன்" என்று கூறினார். அதன்பேரில், பார்வதியும், சிவபெருமானே மலையாக இருப்பதை அறிந்து, திருவண்ணாமலையை இறைவனாக கருதி கிரிவலம் வந்தாள்.
முதன்முதலாக கிரிவலம் வந்த அன்னைக்கு, சிவபெருமான் கிரிவல பாதையில் நேர் அண்ணாமலை கோயிலுக்கு அருகே நந்தி வாகனத்திலும், ஈசான்ய லிங்கத்துக்கு அருகே ஒளி ரூபத்திலும் காட்சி கொடுத்து அருள் செய்தார். அதையடுத்து, கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில் தன்னுடைய உடலில் சரி பாதி வழங்கி அர்த்தநாரீஸ்வர வடிவம் கொண்டார். இதனால் பெரும் மகிழ்ச்சியடைந்த பார்வதி, இறைவன் தனக்கு அருள்புரிந்ததை போன்றே, இங்கு வந்து கிரிவலம் செய்யும் அனைத்து உயிர்களுக்கும் அருள் வழங்க வேண்டும் என்று வேண்டினாள். பார்வதி தேவியின் கோரிக்கைக்கு அண்ணாமலையாரும் சம்மதித்தார்.
கிரிவலம் வரும் சரியான முறை மற்றும் நேரம்
பார்வதி தேவியைப் போல அனைவராலும் 48 நிமிடங்களில் மலையை வலம் வந்துவிட முடியாது. திருவண்ணாமலை கிரிவலப் பாதை என்பது 14 கி.மீ. தூரம் கொண்டது. அதாவது 14 உலகங்களையும் குறிப்பதாக இது கருதப்படுகிறது. கிழக்கு கோபுரத்திற்கு அருகில் துவங்கி, அதே இடத்திலேயே கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும். கிரிவலத்தை நிறைவு செய்ய பக்தர்களின் நடையின் வேகத்தைப் பொறுத்து 3 முதல் 4 மணி நேரம் ஆகலாம்.
சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கிரிவலத்தைத் துவக்கி, சூரிய உதயத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும் என்பதே விதி.
இரவு நேரத்திலேயே ஆன்மிக அதிர்வலைகள் அதிகம் இருக்கும் என்பதால், கிரிவலம் செல்ல சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகான நேரமும், பிரம்ம முகூர்த்த நேரமுமே சரியானதாகக் கருதப்படுகிறது. இந்த ஜோதிட ரீதியான வழிபாட்டு முறை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சிறப்பு பெறுகிறது.