வைகாசி விசாகம் முருகப் பெருமான் அவதரித்த தினமாகும். இது நம்முடைய வீட்டிலும், வாழ்வில் செல்வ செழிப்பு, மகிழ்ச்சி, நேர்மறை ஆற்றல்கள் ஆகியவற்றை அதிகரிக்க செய்வதற்கான மிக முக்கியமான நாளாகும். முருகப் பெருமான், ஆறுபடை வீடுகளிலும் ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இந்த ஒவ்வொரு முருகன் ஆலயத்திலும் வழிபட்டால் ஒவ்வொரு விதமான பலன் கிடைக்கும். திருமண தடை அகல பழமுதிர்சோலை, உயர்ந்த ஞானம் கிடைக்க, தொழில் சிறக்க சுவாமிமலை, வாழ்வில் அனைத்து விதமான மங்களங்களும் சேருவதற்கு திருச்செந்தூர் ஆகிய தலங்களில் வழிபடலாம். அதே போல் வாழ்க்கையில் செல்வம், செல்வாக்கு, வருமானம் பெருக வேண்டும் என்றால் பழனி முருகனை தான் வழிபட வேண்டும். இந்த வைகாசி விசாகம் நாள் ஜோதிட ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
வைகாசி விசாகத்தன்று செய்ய வேண்டியவை:
- முருகப் பெருமான் தரிசனம்: வாய்ப்பு இருப்பவர்கள் வைகாசி விசாகம் நாளன்று பழனிக்கு சென்று முருகப் பெருமானை தரிசனம் செய்து விட்டு வரலாம்.
- வீட்டில் விரதம்: முடியாதவர்கள் வீட்டிலேயே எளிமையாக விரதம் இருந்து, முருகனை வழிபடலாம். காலையில் ஒரு பொழுது உணவு சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் எடுத்துக் கொண்டு, மதியம் சர்க்கரை பொங்கல் செய்து முருகனுக்கு படைத்து விட்டு, அதை நாமும் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.
- கவச பாராயணம்: வைகாசி விசாகத்தன்று கந்த சஷ்டி கவசத்துடன் சேர்த்து, கந்தகுரு கவசம் பாராயணம் செய்வது மிக மிக சிறப்பானது. கந்தகுரு கவசத்தை கேட்பது, பாராயணம் செய்வது இரண்டுமே சிறப்பானது.
- மந்திர ஜெபம்: இது எதுவும் சொல்ல முடியாதவர்கள் முருகனின் ஏதாவது ஒரு மந்திரத்தை சொல்லலாம். "ஓம் சரவண பவ" என்ற மந்திரத்தை சொல்லலாம்.
- வேண்டுதல்கள் எழுதுதல்: முருக மந்திரங்களையும், நம்முடைய தேவைகள் அல்லது வேண்டுதல்களை ஒரு காகிதத்தில் எழுதலாம். இது ஜாதகத்தில் 3வது இடத்தை வலுப்படுத்தும். மூன்றாம் இடம் என்பது தைரியம், வீரியம், உடன் பிறப்புகள், எழுத்து, பேச்சு, தகவல் தொடர்பு ஆகியவற்றை குறிக்கும் இடமாகும்.
- நெய் தீப வழிபாடு: வைகாசி விசாகம் அன்று துவரம் பருப்பின் மீது சிவப்பு திரி போட்டு 6 நெய் தீபங்கள் ஏற்றி முருகனை வழிபடுவது சிறப்பு. இது வீட்டில் செல்வ வளத்தை பெருக செய்யும். செவ்வாய் மற்றும் செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானின் அருளை பெற உதவும்.
வைகாசி விசாகம் அன்று வாங்க வேண்டிய பொருட்கள்:
வைகாசி விசாகம் அன்று மாலையில் குறிப்பிட்ட சில பொருட்களை சிறிதளவாவது வாங்கி வீட்டில் வைப்பதால் வீட்டில் நன்மைகள் அதிகம் நடைபெற துவங்கும். வீட்டில் உள்ள சக்திகள் பெருக துவங்கும்:
- கல் உப்பு: மகாலட்சுமி அம்சம்
- துவரம் பருப்பு
- நாட்டுச் சர்க்கரை: குரு அம்சம்
- வெள்ளை சர்க்கரை: சுக்கிர அம்சம்
- பால்
- பூஜை பொருட்கள்: குறிப்பாக சந்தனம், பச்சை கற்பூரம், ஏலக்காய், விரலி மஞ்சள், கிராம்பு
- இந்த 10 பொருட்கள் தவிர முடியும் என்பவர்கள் 8 கிராம் வெள்ளி வாங்கி வீட்டில் வைக்கலாம். இது சுக்கிரனை வசியம் செய்யும் முறையாகும்.
- அதோடு 6 வெற்றிலைகள், 3 பாக்கு ஆகியவற்றை முருகனை படைத்து வழிபடலாம். இது அதிர்ஷ்டத்தை தரக் கூடியதாகும்.
அதே சமயம் வைகாசி விசாகம் அன்று எண்ணெய் வகைகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.