ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை வணங்கி அவர்களின் ஆசியைப் பெற உதவும் ஒரு சக்திவாய்ந்த நாள். தமிழ் மாதமான ஆடி மாதத்தில் வரும் இந்த அமாவாசை, பித்ரு லோகத்தில் இருந்து முன்னோர்கள் பூமிக்கு வரும் ஒரு புனிதமான தினமாக ஜோதிடம் மற்றும் ஆன்மிக ரீதியாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் விரதமிருந்து வழிபாடுகள் செய்வதன் மூலம் குடும்பத்தில் நன்மைகள் பெருகும், துன்பங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
ஆடி அமாவாசை என்றால் என்ன?
தமிழ் மாதமான ஆடி மாதத்தில் வரும் அமாவாசை நாள் ஆடி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் முன்னோர்களை வணங்கி அவர்களின் ஆசியைப் பெறுவது மிக முக்கியமானதாக சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி அமாவாசை ஜூலை 24ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது. அன்று, முன்னோர்களுக்குச் சிறப்பு பூஜைகள் செய்து, உணவு படைத்து வணங்கினால், அவர்கள் சந்தோஷமாக ஆசி வழங்குவார்கள் என்பது நம்பிக்கை. இதனால் குடும்பத்தில் நன்மை நடக்கும். தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசைக்கு தனிச்சிறப்பு உண்டு.
ஆடி அமாவாசையின் முக்கியத்துவம்
பித்ருலோகத்தில் இருக்கும் முன்னோர்கள், ஆடி அமாவாசை அன்று பூமிக்கு புறப்பட்டு வருவதாகவும், இவர்கள் மகாளய அமாவாசை வரை பூமியிலேயே தங்கி இருந்து தங்களின் சந்ததியினருக்கு ஆசி வழங்கி, அவர்களின் வாழ்வில் இருக்கும் துன்பங்களை தீர்த்து வைப்பதாக ஜோதிடம் மற்றும் ஆன்மிக ஐதீகம் கூறுகிறது. ஆன்மிக ரீதியாகவும் ஆடி அமாவாசை என்பது மிகவும் சக்தி வாய்ந்த மாதமாகும். இந்த நாளில் விரதம் இருந்து அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் தலையெழுத்தே மாறும் என்பது நம்பிக்கை.
ஆடி அமாவாசையில் என்ன செய்ய வேண்டும்?
- ஆடி அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து புனித நதிகளில் நீராட வேண்டும்.
- ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளின் அருகில் "தர்ப்பணம்" செய்து முன்னோர்களுக்கான பித்ரு கடனை நிறைவேற்ற வேண்டும்.
- ஆற்றங்கரை, கடற்கரை அல்லது கோயில் குளக்கரைகளில் எள், தர்ப்பை புல், தண்ணீர் மற்றும் சமைத்த சாத உருண்டைகளை (பிண்டம்) முன்னோர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.
- இந்த பொருட்களை கொடுக்கும் போது, இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய மந்திரங்கள் சொல்ல வேண்டும்.
- பொதுவாக அமாவாசை என்பது முன்னோர்களுக்கு உரிய நாள். அன்று அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து படையல் இட்டு வணங்குவது வழக்கம்.
- அன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்யலாம். இதனால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.
புண்ணியம் சேர செய்ய வேண்டியவை
- முன்னோர்களுக்கு பகல் நேரத்தில் படையல் இட்டு வழிபடும் போது கண்டிப்பாக காகத்திற்கு சாதம் வைக்க வேண்டும்.
- ஏழைகளுக்கும், அந்தணர்களுக்கும் உணவு, உடை, குடை, காலணி போன்றவற்றை தானம் அளிக்க வேண்டும்.
- குறிப்பாக பசு மாட்டிற்கு அகத்திக்கீரை சாப்பிடக் கொடுக்க வேண்டும்.
- காலையில் தர்ப்பணம் கொடுத்து முடித்த உடனேயோ அல்லது மாலை நேரத்திலோ சிவன் கோவிலுக்கு சென்று நம்முடைய முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டிக் கொண்டு, அவர்களுக்காக விளக்கேற்றி வைக்க வேண்டும். இது அவர்களுக்கு மோட்சத்தை கொடுக்கும் என நம்பப்படுகிறது.
- ஒரு வேளை, பித்ருலோகத்தில் பல விதமான துன்பங்களை நம்முடைய முன்னோர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தால், நாம் செய்யும் வழிபாடுகளால் அவர்களுக்கு மோட்சம் கிடைக்கும். இது நம்முடைய சந்ததிக்கே புண்ணியத்தை தரும்.
இத்தகைய வழிபாடுகளால், ஜோதிடம் ரீதியாகக் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் பித்ரு தோஷங்கள் நீங்கி, முருகன் மற்றும் பிற தெய்வங்களின் ஆசியும் பெற்று, வாழ்வில் வளம் பெருகும். தமிழ் கலாச்சாரத்தில் ஆடி அமாவாசை முக்கியப் பங்கு வகிக்கிறது.