ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை முருகப் பெருமானுக்கு உகந்த ஒரு மிக முக்கியமான நாள். 2025 ஆம் ஆண்டில் ஆடிக் கிருத்திகை இரண்டு நாட்கள் வருவதால், எந்த நாளில் விரதம் இருப்பது என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது. முருகனின் அருள் பெற எந்த நாளில், எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதை இந்த கட்டுரையில் விரிவாகக் காணலாம். இந்த ஆன்மீக வழிகாட்டியைப் படித்து முருகனின் அருளைப் பெறுங்கள்.
ஆடி மாத கிருத்திகை விரதத்தின் சிறப்பு
அம்பாளுக்கு உரிய ஆடி மாதத்தில் முருகப் பெருமானின் அருளை பெறுவதற்குரிய மிக முக்கியமான நாள் தான் ஆடிக் கிருத்திகை. வழக்கமாக குழந்தை வரம் வேண்டும், திருமணம் நடைபெற வேண்டும் என்பவர்கள் கிருத்திகையில் முருகப் பெருமானை வேண்டி விரதம் இருந்தால் விரைவில் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதிலும் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகையில் விரதம் இருந்து வழிபட்டால் அம்பிகையின் அருளும், முருகப் பெருமானின் அருளும் சேர்ந்தே கிடைக்கும். அதனால் இரட்டிப்பு பலனை தரக் கூடிய திருநாளாக ஆடிக் கிருத்திகை கொண்டாடப்படுகிறது. முருகன் ஆலயங்கள் மற்றும் ஆறுபடை வீடுகள் அனைத்திலும் இந்த விரதம் விசேஷமாக கொண்டாடப்படும்.
2025 ஆடிக் கிருத்திகை தேதிகள்: ஒரு தெளிவு
2025 ஆம் ஆண்டின் ஆடி மாதத்தில் இரண்டு கிருத்திகை நட்சத்திரங்கள் வருவதால் எந்த நாளில் முருகனுக்கு விரதம் இருப்பது என பலருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முருகன் கோவில்களிலும் ஒவ்வொரு நாளில் ஆடிக் கிருத்திகை விழா கொண்டாட போவதாக அறிவித்திருக்கிறார்கள். இதில் எந்த நாளில், எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த ஆண்டு ஜூலை 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆகஸ்ட் 16ம் தேதி சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் கிருத்திகை நட்சத்திரம் வருகிறது. பொதுவாக ஒரு மாதத்தில் இரண்டு முறை ஒரு நட்சத்திரம் வந்தால் இரண்டாவதாக வரும் நட்சத்திரத்தை தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என பஞ்சாங்க சாஸ்திரம் சொல்கிறது. அதன் படி பார்த்தால் ஆகஸ்ட் 16ம் தேதி தான் ஆடிக் கிருத்திகை.
எந்த நாளில் ஆடி கிருத்திகை விரதம் இருப்பது உகந்தது?
ஜூலை 20ம் தேதி வரும் கிருத்திகை தான் ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. இதனால் விரதம் இருக்க, பூஜை செய்ய, கோவிலுக்கு செல்ல வசதியாக இருக்கும் என பலர் நினைப்பதுண்டு. ஜூலை 20, ஆகஸ்ட் 16 இரண்டுமே கிருத்திகை நட்சத்திரம் தான். அதனால் இரண்டில் எந்த நாளில் விரதம் இருந்தாலும் முருகப் பெருமானின் அருள் கிடைக்கும். சாதாரணமாக கிருத்திகை விரதம் இருப்பவர் ஜூலை 20ம் தேதியும், குழந்தை மற்றும் திருமணத்திற்காக வேண்டி பட்டினியாக இருந்து கிருத்திகை விரதம் இருப்பவர்கள் ஆகஸ்ட் 16ம் தேதியும் விரதம் இருப்பது சிறப்பு. இரண்டுமே சிறப்புக்குரிய நாள் என்பதால் எந்த நாளில் முடிகிறதோ அந்த நாளிலோ அல்லது இரண்டு நாட்களிளுமோ விரதம் இருக்கலாம். இந்த ஜோதிடம் மற்றும் பஞ்சாங்க ரீதியிலான விளக்கம் விரத நாட்களைப் புரிந்து கொள்ள உதவும்.
ஆகஸ்ட் 16 அன்று விரதம் இருப்பவர்களுக்கு கிடைக்கும் பலன்கள்
கடன் பிரச்சனையால், தாங்க முடியாத சிக்கல்கள், பிரச்சனையில் இருப்பவர்கள் ஆகஸ்ட் 16ம் தேதி விரதம் இருந்து வழிபடலாம். காரணம், அன்றைய தினம் தேய்பிறை அஷ்டமியுடன் இணைந்து வருகிறது. அன்றைய தினம் அதிகாலை 01.16 மணிக்கே அஷ்டமி திதி துவங்கி, நாள் முழுவதும் அஷ்டமி உள்ளது. அன்று கிருஷ்ணர் அவதரித்த கோகுலாஷ்டமி நாளும் கூட. இந்த நாளில் கால பைரவரையும், முருகப் பெருமான்னையும், அம்பிகையை வழிபட்டால் இரண்டு மடங்கு பலன் கிடைக்கும். இந்த நாளில் விரதம் இருந்தால் கிருத்திகை விரதம் இருந்த பலனும், தேய்பிறை அஷ்டமி இருந்த பலனும் கிடைக்கும். ஒரு விஷயம் கண்டிப்பாக நடந்தே தீர வேண்டும் என்பவர்கள் ஆடிக் கிருத்திகை அன்று முழு நேரம் பட்டினியாக இருந்து விரதம் இருக்கலாம்.
ஆடிக் கிருத்திகை விரத முறை மற்றும் பூஜை சடங்குகள்
ஜூலை 20ம் தேதி அதிகாலை 12.14 மணி துவங்கி, இரவு 10.36 வரை கிருத்திகை நட்சத்திரம் உள்ளது. அதே போல் ஆகஸ்ட் 16ம் தேதி காலை 08.27 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் 17ம் தேதி காலை 06.48 மணி வரை கிருத்திகை நட்சத்திரம் உள்ளது. இதனால் ஆடிக் கிருத்திகை விரதம் இருப்பவர்கள் அதிகாலையிலேயே எழுந்து, குளித்து விட்டு விரதத்தை துவக்கி விடலாம். முடிந்தவர்கள் முழு உபவாசமாகவும், முடியாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டும் விரதம் இருக்கலாம். முருகப் பெருமானுக்கு சிவப்பு நிற மலர்கள் சூட்டி, ஷட்கோண கோலமிட்டு, அதன் மீது ஆறு அகல் விளக்குகளில் விளக்கேற்ற வேண்டும். நைவேத்தியமாக காய்ச்சி பால் தேன் கலந்து வைத்து படைக்கலாம். கந்தசஷ்டி கவசம், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், திருப்புகழ் என எது தெரியுமோ அதை படித்து வழிபடலாம். முருகப் பெருமானுக்குரிய மந்திரங்கள் தெரியும் என்றால் அதை சொல்லியும் வழிபடலாம். எதுவும் தெரியாது என்றால் "ஓம் சரவண பவ" என்ற மந்திரத்தை 1008 முறையோ அல்லது 108 முறையோ சொல்லி வழிபடலாம். இந்த தமிழ் வழிபாட்டு முறைகள் முருகனின் அருளைப் பெற உதவும்.
விரத நிறைவு மற்றும் தானத்தின் மகத்துவம்
முடிந்தவர்கள் அருகில் உள்ள முருகன் கோவில்களுக்கு சென்று வழிபடலாம். முருகப் பெருமானுக்கு அபிஷேகத்திற்கு பால் வாங்கிக் கொடுக்கலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே வழிபடலாம். அன்றைய தினம் யாருக்காவது தானம் அளிப்பது சிறந்தது. அன்றைய தினம் முருகப் பெருமானை வழிபடுவதுடன் அம்பிகையையும் மனதார நினைத்து வழிபட வேண்டும். காலையில் வழிபட்டதை போலவே மாலையிலும் ஷட்கோண தீபம் ஏற்றி வழிபட வேண்டும். முருகனுக்குரிய பாடல்கள், மந்திரங்களை சொல்லி வழிபட்ட பிறகு விரதத்தை நிறைவு செய்யலாம். இந்த முறையில் ஆடிக் கிருத்திகை விரதம் இருந்தால் முருகப் பெருமானின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
ஆடிக் கிருத்திகை விரதத்தின் முக்கிய அம்சங்கள்
- 2025 தேதிகள்: ஜூலை 20 மற்றும் ஆகஸ்ட் 16. பஞ்சாங்கப்படி ஆகஸ்ட் 16 முக்கியம்.
- பலன்கள்: குழந்தை வரம், திருமணத் தடை நீங்கும், கடன் பிரச்சனைகள் தீரும். முருகன் அருள் கிடைக்கும்.
- இரட்டிப்பு பலன்: ஆடி கிருத்திகை அம்பிகையின் அருளையும், முருகனின் அருளையும் சேர்த்து தரும்.
- ஆகஸ்ட் 16 சிறப்பு: தேய்பிறை அஷ்டமி மற்றும் கோகுலாஷ்டமியுடன் இணைந்து வரும் நாள். கால பைரவர், அம்பிகை வழிபாடும் உகந்தது. ஜோதிடம் ரீதியாக இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
- விரத முறை: அதிகாலையில் எழுந்து, உபவாசம், பால், பழம் மட்டும் அருந்தி, முருகனை சிவப்பு மலர்களால் அர்ச்சித்து வழிபடலாம்.
- மந்திரங்கள்: கந்தசஷ்டி கவசம், திருப்புகழ், "ஓம் சரவண பவ" மந்திரம் ஓதுவது சிறப்பு.
- நிறைவு: முருகன் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது, தானம் அளிப்பது, மாலையில் மீண்டும் தீபம் ஏற்றி வழிபடுவது.