தீபங்களின் வகைகள்: ஓர் ஆன்மீக பார்வை
தீபாவளி மற்றும் திருக்கார்த்திகை போன்ற பண்டிகைகளில் தீபங்கள் ஏற்றி வழிபடுவது நம் தமிழ் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகும். ஜோதிட ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் தீபங்கள் நம் வாழ்வில் ஒளியேற்றுவதுடன், பல்வேறு நன்மைகளையும் அள்ளித் தருகின்றன. பொதுவாக அகல் விளக்குகள் பற்றி நாம் அறிந்திருப்போம். ஆனால், பலருக்கும் தெரியாத பல்வேறு வகையான தீபங்களும், அவற்றின் தனித்துவமான ஆன்மீக முக்கியத்துவமும் உள்ளன. அவை பற்றி இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் `தீபலட்சுமியே நமோ நம' என்று கூறி வணங்குவது அவசியம். தீபத்தை பல வகையாகச் சொல்லி விளக்குகின்றன ஞானநூல்கள். அவற்றில் சில:
சித்ர தீபம்:
தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபங்கள்.
மாலா தீபம்:
அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படுவது.
ஆகாச தீபம்:
வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படுவது, ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதி நாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், யம பயம் நீங்கும்.
ஜல தீபம்:
நதி நீரில் மிதக்க விடப்படும் தீபங்கள் ஜல தீபம் ஆகும்.
நௌகா (படகு) தீபம்:
கங்கை கரையோரங்களில் வாழும் மக்கள், புண்ணிய யாத்திரையாக கங்கை தீர்த்துக்குச் செல்பவர்கள், கங்கை நதிக்கு மாலை வேளையில் ஆரத்தி செய்து, வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றி வைத்து, அதை கங்கையில் மிதக்கவிடுவர். படகு போன்ற வடிவங்களில் தீபங்கள் தயார் செய்தும் மிதக்க விடுவார்கள். இவற்றையே நெளகா தீபங்கள் என்று அழைப்பர். சம்ஸ்கிருதத்தில் `நௌகா' என்றால் `படகு' எனப் பொருள்.
சர்வ தீபம்:
வீட்டின் அனைத்து பாகங்களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகும்.
மோட்ச தீபம்:
முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, ஆலய கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படுவது.
சர்வாலய தீபம்:
கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று, மாலை வேளையில் சிவாலயங்களில் ஏற்றப்படுவது. அதாவது, பனை ஓலைகளால் கூடுபோல் பெரிதாகச் செய்து, அதற்கு பூஜை செய்து தீபாராதனை காட்டி, கற்பூரத்தின் ஜோதியை அதில் ஏற்றுவது, சர்வாலய தீபம் ஆகும்.
அகண்ட தீபம்:
மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம். திருவண்ணாமலை, பழநிமலை, திருப்பரங்குன்றம் முதலான திருத்தலங்களில், இந்த முருகன் ஆலயங்கள் அமைந்துள்ள இடங்களிலும் அகண்ட தீபத்தைத் தரிசிக்கலாம். குறிப்பாக ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழநிமலையில் இது சிறப்புடன் நடைபெறும்.
லட்ச தீபம்:
ஒரு லட்சம் விளக்குகளால் ஆலயத்தை அலங்கரிப்பது லட்சதீபமாகும். திருமயிலை, திருக்கழுக்குன்றம் (12 ஆண்டுகளுக்கு ஒருமுறை) முதலான பல ஆலயங்களில் லட்சதீபம் ஏற்றுவது உண்டு.
மாவிளக்கு தீபம்:
அம்மன் ஆலயங்களில் நோய் தீர வேண்டிக்கொண்டு மாவிளக்கு ஏற்றுவார்கள். அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரி போட்டு ஏற்றுவது மாவிளக்கு ஆகும். காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு கச்சபேஸ்வரர் ஆலயத்தில், கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில், இவ்வகை தீபத்தை தலையில் வைத்துக் கொண்டு ஆலயத்தை வலம் வந்து வழிபடும் வழக்கம் உண்டு. இதை, `மண்டை விளக்கு பிரார்த்தனை' என்கிறார்கள்.
விருட்ச தீபம்:
ஒரு மரத்தைப் போன்று கிளைகளுடன் அடுக்கடுக்காக அமைக்கப்படும் தீப ஸ்தம்பங்களில் விளக்கேற்றும்போது, விருட்சத்தைப் போன்று காட்சித் தரும். சிதம்பரம், திருவண்ணாமலை, குருவாயூர் ஆலயங்களில் விருட்ச தீபத்தைக் காணலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதாக ஞானநூல்கள் கூறுகின்றன. தீபம் ஏற்றுவது யம பயம் நீங்கவும், முன்னோர்களுக்கு நற்கதி கிடைக்கவும் உதவுகிறது. மேலும், இது நம் வாழ்வில் ஒளியையும் நேர்மறை ஆற்றலையும் கொண்டு வரும்.
அகண்ட தீபம் என்பது மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படும் ஒரு தீப வகையாகும். திருவண்ணாமலை, முருகன் ஆலயங்கள் அமைந்துள்ள பழநிமலை, திருப்பரங்குன்றம் போன்ற ஆறுபடை வீடுகள் திருத்தலங்களில் இந்த அகண்ட தீபத்தைத் தரிசிக்கலாம்.
அம்மன் ஆலயங்களில் நோய் தீர வேண்டிக்கொண்டு மாவிளக்கு தீபங்கள் ஏற்றப்படுகின்றன. அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரி போட்டு ஏற்றுவது மாவிளக்கு ஆகும்.