Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

குரு பூர்ணிமா: மகரிஷி வேத வியாசரின் பெருமைகள் மற்றும் ஞானப் போதனைகள்

இந்து, பௌத்த, சமண மதங்களில் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் குரு பூர்ணிமா. மகாபாரதத்தை அருளிய மகரிஷி வேத வியாசரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படும் இந்த தினத்தில், குருவின் மகத்துவத்தையும், அவரது அளப்பரிய ஞானப் பங்களிப்புகளையும் விரிவாகக் காண்போம். குரு பூர்ணிமா, சீடர்கள் தங்கள் குருக்களின் ஆசிகளைப் பெற்று மரியாதை செலுத்தும் ஒரு புனிதமான தருணம். இந்த நாள் வேத வியாசர் மற்றும் ஜோதிட ஞானத்தின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்துகிறது.

குரு பூர்ணிமா என்றால் என்ன?

ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமி "குரு பூர்ணிமா" அல்லது "வியாச பூர்ணிமா" என்று அழைக்கப்படுகிறது. ஒரு வருடத்தில் வரும் மிக முக்கியமான பௌர்ணமிகளில் ஆனி மாதத்தில் வரும் குரு பூர்ணிமாவும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பௌர்ணமி மட்டும் குருவிற்கு மரியாதை செலுத்தும் குரு பூர்ணிமாவாக கொண்டாடப்படுவதற்கு மிக முக்கியமான காரணம் சொல்லப்படுகிறது. வியாசர் அவதரித்த திருநாளையே குரு பூர்ணிமாவாக கொண்டாடுகிறோம். இப்படி போற்றும் அளவிற்கு வியாசர் அப்படி என்ன செய்தார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

சன்னியாசிகளின் வாழ்க்கை முறை மற்றும் முக்கியத்துவம்

சன்னியாச ஆசிரமத்தில், ஒவ்வொரு சன்னியாசியும் ஒவ்வொரு விதமான முறையில் துறவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். "குடீசகர்கள்" என்று அழைக்கப்படும் சன்னியாசிகள் ஒரு குடிசையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். "பஹுதகர்கள்" என்று அழைக்கப்படும் இன்னொரு விதமான துறவிகள், அதிக நீர் உள்ள நதிக்கரையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். "பரிவ்ராஜகர்கள்" என்று அழைக்கப்படும் ஒரு விதமானவர்கள், பயணம் செய்து கொண்டே இருப்பார்கள். ஒரு இடத்தில் (ஊரில்) மூன்று அல்லது சில குறிப்பிட்ட நாட்கள் தான் தங்குவார்கள்.

சன்னியாச பற்றின்மை: பரிவ்ராஜகர்கள் ஞானத்தை அடைந்திருப்பார்கள். குரு-சிஷ்ய பரம்பரையில் வந்திருப்பார்கள். தாங்கள் தங்கும் கிராமத்திலோ நகரத்திலோ பிச்சை எடுத்து தான் உணவு உட்கொள்வார்கள். சன்னியாசிகளுக்குப் பற்றின்மை எனும் பண்பு மிகவும் முக்கியமானது. ஒரே இடத்தில் அதிக நாட்கள் தங்கினால் அந்த இடத்திலோ, அங்கு வாழும் மக்களின் மேலோ மற்றும் அங்கு வாழும் மக்களுக்கு இவர்கள் மீதோ பற்று வந்துவிடும். அதனால் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சஞ்சாரம் செய்து கொண்டே இருப்பார்கள்.

மழைக்கால வாசம்: ஆனால் மழைக்காலத்திலோ ஊர் ஊராக சஞ்சரிக்க முடியாது. ஏனெனில் மழைக்காலத்தில் புதிதாகப் புட்கள், செடிகள் துளிர் விடும்; புழு பூச்சிகள் மண்ணிலிருந்து வெளி வரத் தொடங்கும். துறவிகளுக்கு அகிம்சை என்ற பண்பும் மிகவும் முக்கியமானது. புட்களையும், செடிகளையும், புழு பூச்சிகளையும் மிதியாமல் சஞ்சரிப்பது கடினம் என்பதால், மழைக்காலம் தொடங்கி, முடியும் வரை (நான்கு மாதங்கள்) ஒரே இடத்தில் தங்கி விடுவார்கள். குறிப்பாக இயற்கை சீர் கெடாமல் இருந்த பண்டைக் காலத்தில், ஆனி மாத பவுர்ணமி அன்று தான் மழைக்காலமும் தொடங்கும். அவர்கள் எந்த ஊரில் மழைக்காலம் தொடங்கும் பொழுது இருக்கிறார்களோ அதே ஊரிலேயே நான்கு மாதங்களும் தங்கி விடுவார்கள். அவ்வூரில் வாழும் மக்கள் சன்னியாசிகளிடம் நான்கு மாதங்களில் வேதாந்த உபதேசம் செய்யுமாறு வேண்டிக் கொள்வார்கள். அந்தந்த ஊர் மக்களே அவருக்குத் தேவையான குடிசையை அமைத்து கொடுத்து பிச்சைக்கும் ஏற்பாடு செய்வார்கள். ஜோதிட ரீதியாகவும் இந்த மாதங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

யார் இந்த மகரிஷி வேத வியாசர்?

வாழ்க்கை முழுவதும் ஒவ்வொருவரும் வேதாந்தத்தில் ஈடுபட்டு, குரு மற்றும் ஈஸ்வரனை வழிபட வேண்டும். சன்னியாசி தான் ஞானத்தை பெற்றதற்கு நன்றியை வெளிபடுத்தும் வகையிலும், "தான் துவங்க இருக்கும் வேதாந்த உபதேசம் தடையில்லாமல் முடிவடையவும், வியாச பகவானை ஆராதித்துப் பூஜை செய்யும் இந்நாள், குரு பவுர்ணமி என்றும் வியாச பவுர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் துறவிகள் மட்டுமில்லாமல், ஞான மற்றும் மோட்ச சாஸ்திரத்தை அறிய முற்படும் அனைவரும் தங்களது குருவையும், வியாச பகவானையும் ஆராதிக்க வேண்டும். வியாச பகவானை நிமித்தமாக வைத்து, (சிவ பெருமான் அல்லது ஸ்ரீமன் நாராயணன்) தொடங்கி, தங்களுடைய இப்பொழுதைய குரு வரை குரு பரம்பரையில் உள்ள அனைவரையும் இந்நாளில் வழிபட வேண்டும்.

தாறுமாறாக இருந்த வேதத்தை ஒழுங்கு படுத்தி, ரிக், யஜுர், ஸாம, அதர்வ என்ற சதுர் மறைகளாக்கி, ரிக் வேதத்தை பைல முனிவரிடமும், யஜுர் வேதத்தை வைசம்பாயன முனிவரிடமும், ஸாம வேதத்தை ஜைமினி முனிவரிடமும், அதர்வண வேதத்தை ஸுமந்த் முனிவரிடமும் ஒப்படைத்து, இன்றளவும் நின்று நிலைபெறச் செய்தவர் என்பதால் அவர் வேத வியாசர் என்றே அழைக்கப்படுகிறார். வியாசர் என்றால் தொகுப்பாளர் என்று பொருள். வியாசர் வசிஷ்டரின் கொள்ளுப் பேரனும், சக்தி முனிவரின் பேரனும், பராசர முனிவரின் மகனும், சுக முனிவரின் தந்தையும் ஆவார்.

"வ்யாஸம் வஸிஷ்ட நஃதாரம் சக்தேஃ பௌத்ரம் அகல்மஷம்। பராசராத்மஜம் வந்தே சுகதாதம் தபோநிதிம்"

வியாசரை விஷ்ணுவின் மறுவடிவம் எனக் கூறுவர். இவர் வேறு அவர் வேறு அல்ல என்று பொருள்படுமாறு அமைந்தது இந்த ஸ்லோகம்:

"வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணவே। நமோவை ப்ரஹ்ம நிதயே வாசி'ஷ்டாய நமோ நம:।۔"

வியாசரின் அளப்பரிய ஞானப் பங்களிப்புகள்

வியாசர் க்ருஷ்ண த்வீபம்‌ என்ற இடத்தில் பிறந்ததால் இவரை "க்ருஷ்ண த்வைபாயனர்" "த்வைபாயனர்" என்றும் அழைப்பர். வசிஷ்டரின் குலத் தோன்றல் என்பதால் வாசிஷ்டர் என்ற‌ பெயரும் உண்டு. இன்றும் சிரஞ்ஜீவியாக வாழும் இவர் பதரிகாஸ்ரமத்தில் இருப்பவர். பாதராயணர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.

வேதங்கள் மற்றும் புராணங்களின் தொகுப்பு: வியாசர், நான்கு வேதங்களையும் தொகுத்தது மட்டுமின்றி, வேத ஸாரங்களை ஸ்ம்ருதிகளாகவும் ஆக்கி உதவியுள்ளார். பதினெட்டுப் புராணங்களை இயற்றியவரும் இவரே.‌ அப்புராணங்களைப் பராமரிக்கும் பணியை ஸூத பௌராணிகர் வசம் ஒப்படைத்தார். நம் நாட்டு இரட்டை இதிகாசங்களான ராமாயணம் வால்மீகி முனிவராலும், மகாபாரதம் வியாச முனிவராலும் இயற்றப்பட்டவை. ராமாயணம் 24,000 ஸ்லோகங்களைக் கொண்டது என்றால், மகாபாரதம் (அதில் அடங்கியுள்ள பகவத்கீதை (ம) விஷ்ணு ஸஹஸ்ர நாமம் உட்பட) 100,000 ஸ்லோகங்களைக் கொண்டது. ப்ரஹ்ம ஸூத்ரம் என்ற இவரது நூல் தான் நம் நாட்டின் அத்வைத, விசிஷ்டாத்வைத, த்வைத வேதாந்தங்களின் தோற்றமாகும்.

குருவாக வியாசர்: வியாசர் முனிவர்களுக்கெல்லாம் முனிவர்; ரிஷிகளுக்கெல்லாம் ரிஷி. அதனால் தான் வியாச பூஜை, எந்த வேதாந்தத்தைப் பின்பற்றும் ஸ்வாமிகளும் கடைப்பிடிக்க வேண்டிய நோன்பாக நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. வியாசரை பகவான் வ்யாஸர் என்று அழைப்பதுடன், அவரை "ஒரு தலை உடைய பிரம்மா ; இரு கை உடைய விஷ்ணு , நெற்றிக்கண் இல்லாத சிவன்" என்று போற்றுகின்றனர்:

"அசதுர்முகயத் ப்ரஹ்மா அசதுர்புஜ விஷ்ணவே அபால லோசனஃ சம்பு பகவான் பாதராயண:"

குரு பூர்ணிமா அன்று வியாசரை வணங்குவதன் மூலம், நாம் ஞானத்தையும் அருளையும் பெறலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

குரு பூர்ணிமா என்பது மகாபாரதத்தை இயற்றிய மகரிஷி வேத வியாசரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சீடர்கள் தங்கள் குருமார்களுக்கு மரியாதை செலுத்தி, அவர்களின் ஆசிகளைப் பெறுகிறார்கள்.

வேத வியாசர் நான்கு வேதங்களையும் தொகுத்ததுடன், பதினெட்டு புராணங்கள், மகாபாரதம் மற்றும் ப்ரஹ்ம ஸூத்ரம் ஆகியவற்றை இயற்றி, இந்திய ஆன்மீக மற்றும் ஞான மரபுக்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்துள்ளார்.

சன்னியாசிகள் பற்றின்மையை வளர்ப்பதற்காகவும், ஒரே இடத்தில் தங்குவதால் ஏற்படும் பற்றுகளைத் தவிர்ப்பதற்காகவும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பயணம் செய்து கொண்டே இருப்பார்கள். மழைக்காலத்தில் மட்டும் புழு பூச்சிகளுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க ஒரு இடத்தில் தங்குவார்கள்.

Our Other Services