ஜோதிடம்360 தளத்திற்கு வருக! இங்கே ஆரோக்கியக் குறிப்புகள் முதல் ஆன்மீக தகவல்கள் வரை பல்வேறு பயனுள்ள கட்டுரைகளை வழங்குகிறோம். இன்றைய கட்டுரை, டாக்டர் சிவா சுந்தர் அவர்கள் நாவல் பழத்தின் மகத்துவத்தை பற்றி விளக்குகிறார். நீரிழிவு நோயாளிகளுக்கு நாவல் பழம் ஒரு வரப்பிரசாதம். இதன் அற்புதமான நன்மைகளை விரிவாகக் காண்போம்.
நாவல் பழத்தின் சிறப்பம்சங்கள்
நாவல் பழம் லேசான இனிப்பு சுவையும் துவர்ப்பு சுவையும் கலந்த ஒரு பழம். கோடைகாலங்களில் தான் அதன் சீசன் தொடங்கும். கிட்டதட்ட 3-4 மாதங்கள் வரையிலும் கிடைக்கும். அந்த சமயத்தில் இந்த பழத்தை நிறைய வாங்கி சாப்பிடலாம். குறிப்பாக மற்ற பழங்களை சாப்பிட யோசிக்கும் அளவுக்கு நீரிழிவு நோயாளிகள் நாவல் பழம் சாப்பிட யோசிக்கவும் பயப்படவும் தேவையில்லை.
நாவல் பழம் மற்றும் கொட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
நாவல் பழத்திலும் அதன் கொட்டையிலும் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. குறிப்பாக, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் ஆகியவை அதிகமாக இருக்கின்றன.
ஏன் நாவல் பழம் அதிகமாக சாப்பிடலாம்?
கொய்யா, பப்பாளி உள்ளிட்ட சில பழங்களை மட்டுமே நீரிழிவு நோயாளிகள் பயம் இல்லாமல் மிதமாக அளவில் சாப்பிடுவார்கள். மற்ற பழங்களை சர்க்கரை அளவு கூடிவிடும் என்கிற பயத்தோடு தான் சாப்பிடுவார்கள். ஆனால் நாவல் பழம் அப்படியல்ல. தாராளமாகவே சாப்பிடலாம். அதற்கான காரணங்கள் இதோ...
- நீரிழிவு வளர்சிதை மாற்றக் கோளாறு தான். அதை சரிசெய்து உடல் பருமன் ஆகாமலும் எடையை கட்டுப்படுத்தவும் உதவும்.
- நாவல் பழத்தில் கலோரிகள் மிகக் குறைவு. கிளைசெமிக் இண்டெக்ஸ் மிக மிகக் குறைவு. அதனால் தாராளமாக இதை நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம். ரத்த சர்க்கரை அளவை உயர்த்தாது.
- ப்ளூபெர்ரிக்கு இணையான இதிலுள்ள ஆந்தோசயனின் என்னும் ஆன்டி ஆக்சிடண்ட் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் கொண்டவை.
- நார்ச்சத்துக்கள் நிறைய இருப்பதால் நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு அடிக்கடி ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சினையும் கட்டுக்குள் வரும்.
- இதிலுள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தி அதிகரித்து சருமம் இளமையாக இருக்கும். இதில் ஆன்டி - ஏஜிங் பண்புகள் இருக்கின்றன.
நாவல் விதை பொடி ரத்த சர்க்கரையை குறைக்குமா?
நாவல் பழத்துக்கு இணையாகவும் அதைவிட அதிகமாகவும் கூட அதன் விதைகளில் ஊட்டச்சத்துக்களும் நன்மைகளும் அதிகம். இந்த நாவல் விதைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை வேகமாகக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். ரத்த சர்க்கரை சீராக கட்டுப்பாட்டில் இருந்தால் இது HBA1C அளவைக் குறைக்க உதவி செய்யும். இதற்கு நிறைய அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளும் இருக்கின்றன என்று குறிப்பிடுகிறார் டாக்டர் சிவா சுந்தர்.
நாவல் விதை பொடி தயாரிக்கும் முறை
நாவல் பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் விதைகளைத் தூக்கி வீசாதீங்க. அவ்வப்போது அதை ஈரப்பதம் இல்லாமல் சேகரித்து வைத்து, 100 கிராம் அளவு வந்ததும் அதை எடுத்து நன்கு 4-5 நாட்கள் வரை வெயிலில் காய வைத்து எடுங்கள். சுத்தமாக ஈரப்பதம் இல்லாமல் இருக்க வேண்டும். அந்த அளவு காய்ந்ததும் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து பொடியாக்கி அதை ஒரு காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
நீரிழிவு நோயாளிகள் நாவல் விதை பொடி எடுக்கும் முறை
நாவல் விதை பொடியை நீரிழிவு நோயாளிகள் அவர்களுடைய ரத்த சர்க்கரை அளவைப் பொருத்து ஒரு வேளை அல்லது இரண்டு வேளை எடுத்துக் கொள்ளலாம். அரைத்து வைத்திருக்கும் நாவல் விதை பொடியில் இருந்து ஐந்து கிராம் அளவு மட்டும் எடுத்து (1 ஸ்பூன்) வெதுவெதுப்பான நீர் அல்லது வெதுவெதுப்பான பாலிலோ கலந்து குடித்து வர வேண்டும். இதை காலை, இரவு உணவுக்கு அரை மணி நேரத்துக்கு முன்பாகவும் எடுக்கலாம் அல்லது சாப்பிட்டு அரை மணி நேரத்திற்கு பிறகும் எடுக்கலாம்.
நாவல் விதை பொடி எடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டியது என்ன?
ஏற்கனவே ரத்த சர்க்கரை அதிகமாக இருக்கிறது என்று மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருப்பவர்கள் இந்த பொடியை எடுத்துக் கொள்ளும் போது மிகவும் குறைவாக ஆகலாம். அதனால் அதில் கவனமாக இருங்கள். ஒருவேளை இந்த பொடி இரண்டு வேளை எடுப்பதால் ரத்த சர்க்கரை அளவு குறைந்து லோ சுகர் பிரச்சினை வந்தால் ஒரு வேளை எடுத்துப் பாருங்கள். அப்போதும் லோ சுகர் ஆனால் உங்கள் மருத்துவரை அணுகி இதை விளக்கி சொல்லுங்கள். உங்கள் மருந்தின் அளவை மருத்துவர் குறைக்கக்கூடும் என்கிறார் டாக்டர் சிவா சுந்தர்.
இறுதியாக, டாக்டர் சிவா சுந்தர் சொன்னது போல இந்த நாவல் பழ சீசனில் நிறைய நாவல் பழங்களை சாப்பிடுவதோடு அதன் விதைகளைச் சேகரித்து வைத்து பொடி செய்து எடுத்துக் கொண்டு வாருங்கள். ரத்த சர்க்கரை அளவு வேகமாகக் கட்டுக்குள் வரும்.
பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம், செயல்திறன் ஆகியவற்றுககு சமயம் தமிழ் பொறுப்பாகாது.