மகாளய அமாவாசை அன்று முன்னோர்களை வழிபட்டு, படையல் வைக்கும் போது சில குறிப்பிட்ட காய்கறிகளை கண்டிப்பாக சமைக்கக் கூடாது. இந்த நாளில் சமைக்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய காய்கறிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். மகாளய அமாவாசை அன்று வேறு என்னவெல்லாம் செய்தால் முன்னோர்களின் அருள் கிடைக்கும் என்பதை அறிந்து, பித்ரு தோஷ நிவர்த்தி பெறுவோம்.
மறந்தவருக்கு மகாளய அமாவாசை ஏன்?
மறந்தவருக்கு மகாளய அமாவாசை என்பார்கள். இதற்கு பொருள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மறந்தவர்கள் மகாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட வேண்டும் என்பது மட்டும் கிடையாது. நம்முடைய முன்னோர்களை நம்மால் மறக்க முடியாது தான். அவர்கள் இறந்த மாதமும் தேதியும் கூட மறக்க முடியாது தான். ஆனால் அவர்கள் எந்த திதியில், எந்த நட்சத்திரத்தில் இறந்தார்கள், அது வளர்பிறையா அல்லது தேய்பிறை என்பது போன்ற விபரங்கள் நினைவில் இருக்காது. இதனால் பொதுவாக அமாவாசையில் தர்ப்பணம் கொடுத்து, அவர்கள் இறந்த மாதத்தில் திதி கொடுத்து வழிபடுவதை வழக்கமாக கடைபிடிக்கிறோம்.
மகாளய பட்ச தர்ப்பணத்தின் சிறப்புகள்
மற்ற அமாவாசைகலோ அல்லது வருடத்திற்கு ஒருமுறை திவசம் கொடுப்பதோ நம்முடைய முன்னோர்களை சென்று சேர்கிறதா? அவர்களின் ஆத்மா அதை ஏற்றுக் கொண்டு சாந்தி அடைகிறதா? என்பது நமக்கு தெரியாது. இதன் காரணமாக சில சமயங்களில் முன்னோர்களின் மனம் வருந்துவதால் நமக்கு பித்ருதோஷம் போன்றவை ஏற்பட்டு விடுகிறது. அப்படி எந்த திதி, நட்சத்திரத்தில் இறந்தார்கள் என தெரியாத நம்முடைய முன்னோர்களுக்கு மகாளய அமாவாசையில் தர்ப்பணம் அளித்தால் அவர்கள் அனைவரும் சேர்ந்து வந்து அதை ஏற்றுக் கொள்வார்கள் என சொல்லப்படுகிறது. அதனால் தான் மகாளய பட்சத்தின் 15 நாட்களும் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு என வலியுறுத்தப்படுகிறது.
மகாளய அமாவாசை வழிபாடு
மகாளய அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து நீர் நிலைகளின் கரைகளில் தர்ப்பணம் செய்வது சிறப்பு. முடியாதவர்கள், வீட்டிலேயே எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்து, முன்னோர்களை நினைத்து வழிபடலாம். பகல் வேளையில் முன்னோர்களுக்கு இலை போட்டு படையிட்டு வழிபட வேண்டும். பிறகு அந்த படையலில் இருந்து சிறிது உணவை எடுத்துச் சென்று, கிழக்கு நோக்கி இருக்கும் படி பார்த்து காகத்திற்கு வைக்க வேண்டும். காகங்களின் வடிவிலேயே முன்னோர்கள் வருவார்கள் என சொல்லப்படுவதால், முன்னோர்களை நினைத்து காகங்களுக்கு உணவு வைக்க வேண்டும். காகங்கள் சாப்பிட்ட பிறகு, வீட்டில் உள்ள பெரியவர்கள் முதலில் உணவு சாப்பிட வேண்டும். அப்படி பெரியவர்கள் யாரும் இல்லை என்றால் எவர் அமாவாசை விரதம் இருக்கிறாரோ அவர் முதலில் சாப்பிடலாம்.
மகாளய அமாவாசை அன்று சமைக்க வேண்டிய காய்கறிகள்
மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்கு படையல் இடுவதற்காக சமைக்கும் போது சில காய்கறிகளை கண்டிப்பாக சமைக்கக் கூடாது. அதே சமயம் சில காய்கறிகளை சமையல் செய்து முன்னோர்களுக்கு படைத்து வழிபடுவதால், நம்முடைய பல ஜென்ம பாவங்கள் நீங்கும் என சொல்லப்படுகிறது.
- அவரைக்காய்
- புடலங்காய்
- கொத்தவரங்காய்
- பூசணிக்காய்
- வாழைத்தண்டு
- வாழைப்பூ
- வாழைக்காய்
- சேனைக்கிழங்கு
- சேப்பங்கிழங்கு
- பிரண்டை
- மாங்காய்
- இஞ்சி
- நெல்லிக்காய்
- பாசிப்பருப்பு பாயசம்
- அப்பளம்
- உளுந்து வடை
- கோதுமை வெல்லம் சேர்த்து சமைப்பது
மறந்தும் சமைக்க கூடாத காய்கறிகள்
அதே சமயம் மகாளய அமாவாசை அன்று மறந்தும் கூட சில காய்கறிகளை சமைக்கவோ, முன்னோர்களுக்கு படையலில் இட்டு வழிபடவோ கூடாது. இது முன்னோர்களை மட்டுமல்ல மகாலட்சுமியையும் கோபப்படுத்தி விடும் என சொல்லப்படுகிறது.
- முட்டைக்கோஸ்
- முள்ளங்கி
- நூக்கல்
- கீரை
- பீன்ஸ்
- உருளைக்கிழங்கு
- கேரட்
- கத்தரிக்காய்
- முருங்கைக்காய்
- வெண்டைக்காய்
- காலிபிளவர்
- வெங்காயம்
- பூண்டு
- அசைவ உணவுகள்
மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசிகளை பெறுவதற்கு மற்றவர்களுக்கு தானம் அளிப்பது, உணவு தானம் அளிப்பது சிறந்தது. இது முன்னோர்களின் ஆசிகளை பெறுவதற்கு மிகச் சிறந்த எளிமையான வழியாகும்.
வேறு என்ன செய்யலாம்?
தர்ப்பணம், படையல் இட எதுவும் செய்ய முடியாதவர்கள் மகாளய அமாவாசை அன்று தெய்வீக மரங்களை வழிபடலாம். ஆலமரம், அரச மரம், வேப்ப மரம், நெல்லிக்காய் மரம், வில்வ மரம் ஆகிய மரங்கள் தெய்வீக சக்தி கொண்டவை. இவைகளுக்கு தோஷம் கிடையாது. அதே சமயம் தன்னை தேடி வந்து வழிபடுபவர்களுக்கு நன்மையை தந்து, காக்கக் கூடியவையாகும். மகாளய அமாவாசை அன்று இந்த மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி, மரத்தடியில் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு. முடிந்தால் மரத்தடியில் சிறிது நேரம் அமர்ந்து முன்னோர்களை நினைத்து தியானம் செய்யலாம். வில்வ மரத்திற்கு அடியில் அமர்ந்து தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பானதாகும். "ஓம் பித்ரு தேவாய நமஹ" என்ற மந்திரத்தை சொல்லி முன்னோர்களை வழிபடலாம்.
ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் குறித்த மேலும் பல தமிழ் வழிகாட்டிகளுக்கு, jothidam360.in உடன் இணைந்திருங்கள். தமிழ் கலாச்சாரத்தின் ஆழமான அறிவுடன் உங்கள் வாழ்வை வளமாக்குங்கள்!