நவராத்திரியின் ஒன்பதாம் நாள் கலைகளின் தெய்வமான சரஸ்வதி தேவியை முழுமையாக வழிபடுவதற்கு உகந்த நாளாகும். பலரும் சரஸ்வதியை படிப்புக்குரிய தெய்வம் என்று மட்டுமே கருதுகிறார்கள். ஆனால், சரியான பேச்சுத்திறன், நிர்வாகத்திறன், புத்திசாலித்தனம், தெளிவான சிந்தனை, பிரச்சனைகளில் இருந்து மீளும் மனத்தெளிவு போன்ற அனைத்து நற்பண்புகளுக்கும் சரஸ்வதி தேவியின் அருள் அவசியம். எந்த ஒரு கலையைக் கற்பவர்களுக்கும் அவர்களின் சிந்தனை மற்றும் நினைவாற்றல் மேம்பட்டு, திறமைகள் வளர்ந்து புகழும் பெருமையும் அடைய சரஸ்வதி தேவியின் கருணை தேவை.
நாம் எதிர்ப்பார்க்கும் உதவி கிடைப்பதற்கு ஏற்ற வகையில் நம்முடைய பேச்சும், வார்த்தைகளும் அமையவும் சரஸ்வதி தேவியின் அருள் துணைபுரியும். வழக்கமாக நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு நவராத்திரி மொத்தம் 10 நாட்கள் கொண்டாடப்படுவதால், ஒன்பதாவது நாளில் சரஸ்வதி தேவியை முழுமையாக வழிபடுவது சிறப்பானது. பத்தாவது நாளில் சரஸ்வதி பூஜையும், பதினோராம் நாளில் விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. எனவே, நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் ஞானத்தின் கடவுளான சரஸ்வதி தேவியின் அருளைப் பெறுவதற்கான பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்.
நவராத்திரி 9ம் நாள் சரஸ்வதி தேவி வழிபாடு விபரங்கள்:
நவராத்திரியின் 9ம் நாளில் சரஸ்வதி தேவியை எப்படி வழிபட வேண்டும், என்ன மலர், நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும் என இங்கு தெரிந்து கொள்ளலாம்:
- அம்பிகையின் பெயர்: பரமேஸ்வரி
- கோலம்: தாமரை வகை கோலம்
- மலர்: தாமரை
- இலை: மரிக்கொழுந்து
- நைவேத்தியம்: சர்க்கரை பொங்கல்
- சுண்டல்: கொண்டைக்கடலை சுண்டல்
- பழம்: நாவல் பழம்
- ராகம்: வசந்தா
- நிறம்: வெந்தயம் நிறம்
சரஸ்வதி தேவிக்குரிய மந்திரங்கள்:
மூல மந்திரம்:
"சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா"
காயத்ரி மந்திரம்:
"ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே காமராஜாய தீமஹி தன்னோ தேவி பிரச்சோதயாத்"
இந்த மந்திரங்களை பக்தியோடு உச்சரிப்பதன் மூலம் கல்வி, கலை மற்றும் ஞானத்தில் சிறந்து விளங்கலாம். மேலும், சரஸ்வதி தேவியின் அருளை பெறுவதற்கு நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சரஸ்வதி தேவியிக்கு மிகவும் பிரியமான சகலகலாவல்லி மாலை, சரஸ்வதி அந்தாதி ஆகிய பாடல்களை பாடி வழிபடலாம். சரஸ்வதியின் 108 போற்றி மந்திரங்களை சொல்லி அர்ச்சனை செய்து வழிபடுவதும் சிறப்பானதாகும்.