ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையின் 13வது நாளில் அனுசரிக்கப்படும் பிரதோஷ விரதம், சிவனுக்கும், பார்வதிக்கும் உகந்த ஒரு புனிதமான நாளாகும். ஜோதிடம் சார்ந்த ஆன்மீக வழிபாடுகளில் இது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த விரதத்தின் மகத்துவம், கடைபிடிக்கும் முறைகள் மற்றும் வாழ்வில் ஏற்படும் நன்மைகளை இங்கு விரிவாகக் காணலாம்.
பிரதோஷ விரதம் என்றால் என்ன?
பிரதோஷ விரதம் என்பது சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வழிபடும் ஒரு சிறப்பு விரதமாகும். இது ஒவ்வொரு மாதமும் வரும் திரயோதசி திதியில் மாலை நேரத்தில் அனுசரிக்கப்படுகிறது. இந்த புனிதமான நேரத்தில் சிவபெருமான், நந்தி மற்றும் பார்வதி தேவியை வழிபடுவது சகல நன்மைகளையும் தரும்.
குறிப்பாக, இந்த ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி சனி பிரதோஷ விரதம் அனுசரிக்கப்படுகிறது. சனி பிரதோஷம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அன்று பக்தர்கள் உபவாசம் இருந்து சிவபெருமான், நந்தி மற்றும் பார்வதி தேவியை வழிபடுவது அவர்களின் வாழ்வில் அமைதி, செல்வம் மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
பிரதோஷ விரதத்தின் முக்கியத்துவம்
- ஆன்மீக வளர்ச்சி: பிரதோஷ நேரத்தில் செய்யும் பூஜைகள் ஆன்மீக தூய்மைக்கும் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
- இஷ்ட சித்திகள்: இது விருப்பங்களை நிறைவேற்ற உதவுகிறது.
- உள் அமைதி: மன அமைதி, செல்வம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தை தருகிறது.
- கர்ம வினை நீக்கம்: கெட்ட கர்மாவை நீக்கி, நல்ல வாழ்க்கை வாழ வழிகாட்டுகிறது.
- மோட்சம்: இந்த விரதத்தில் முழுமையாக பங்கேற்பது உலக பந்தங்களில் இருந்து விடுபட்டு, பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுதலை பெறலாம்.
பிரதோஷ விரதம் என்பது தெய்வீகத்துடன் ஒன்றிணைந்து, நிலையான ஆனந்தத்தை அடைய ஒரு ஆன்மீக நுழைவாயில் ஆகும். தமிழ் மக்கள் இடையே இந்த விரதம் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படுகிறது.
பிரதோஷ விரத சடங்குகள்
பூஜை மற்றும் வழிபாடு
- மாலை நேரத்தில் சிவன், நந்தி, பார்வதி மற்றும் விநாயகரை வழிபட வேண்டும்.
- சிவலிங்கத்திற்கு பால் மற்றும் தண்ணீர் அபிஷேகம் செய்வது தூய்மை மற்றும் பக்தியின் அடையாளம்.
- நந்திக்கு அருகம்புல் மாலை சாற்றியும், சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்தும் வழிபடுவது உண்டு.
- பூக்கள், வெற்றிலை, பாக்கு, நாணயங்கள் மற்றும் அரிசி போன்றவற்றை கடவுளுக்கு படைக்கலாம்.
மந்திர ஜபம் & இதர சடங்குகள்
- சிவபெருமானின் சக்திவாய்ந்த 'மஹா மிருத்யுஞ்சய மந்திரத்தை ' 108 முறை ஜெபிக்கலாம்.
- பிரதோஷ நேரத்தில் விளக்கு ஏற்றுவது அதிர்ஷ்டம் தரும்.
- 'ஓம் நமசிவாய' மந்திரத்தை மனதார சொல்வதும், சிவனுக்கு விபூதி, சந்தனம், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வதும் சிவனின் மனதை குளிரச் செய்யும்.
- கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள், பிரதோஷ வேளையில் அமைதியாக சிவனை மனதார நினைத்து தியானம் செய்யலாம்.
இத்தகைய சடங்குகளை பக்தி நிறைந்த மனதுடன் செய்வதன் மூலம், ஜோதிட ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். சிவனிடம் முழுவதுமாக மனதை செலுத்தி சரணடைபவர்கள், அவருக்கு நெருக்கமானவர்களாக மாறுவார்கள் என்பது நம்பிக்கை.