புத்ரதா ஏகாதசி விரதம் என்பது குழந்தை வரம், ஆன்மிக வளர்ச்சி மற்றும் பாவ விமோசனம் ஆகியவற்றை அருளும் ஒரு சக்தி வாய்ந்த விரதமாகும். ஆடி மாதத்தின் வளர்பிறையில் வரும் இந்த ஏகாதசி, ஸ்ரவன புத்ரதா ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இந்த நாளில் பக்தி சிரத்தையுடன் விரதம் இருந்து வழிபட்டால், அவர்களுக்கு நிச்சயம் குழந்தை வரம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஜோதிட ரீதியாகவும், இந்த விரதம் சந்ததி விருத்திக்கு துணை புரியும் என நம்பப்படுகிறது. இந்த சிறப்புமிக்க விரதம் குறித்த முழுமையான தகவல்களை இங்கு காணலாம்.
புத்ரதா ஏகாதசி விரதத்தின் முக்கியத்துவம்
ஆடி மாதத்தின் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு புத்ரதா ஏகாதசி என்றும், ஸ்ரவன மாதத்தில் வரும் ஏகாதசி என்பதால் ஸ்ரவன புத்ரதா ஏகாதசி என்றும் பெயர். குழந்தை வரம் தரும் ஏகாதசி என்பதால் புத்ரதா ஏகாதசி என சொல்லப்படுகிறது. ஆன்மிக வளர்ச்சி மற்றும் தெய்வ ஆசீர்வாதத்தையும் வாரி வழங்கும் விரதமாக இந்த ஏகாதசி விரதம் தமிழ் கலாச்சாரத்தில் சிறப்பிக்கப்படுகிறது.
பாவிஷ்ய புராணத்தின் படி, இந்த விரதத்தின் சிறப்புகள் மற்றும் விரதம் கடைபிடிக்கும் முறையையும் யுதிஷ்டிரருக்கு பகவான் கிருஷ்ணர் எடுத்துரைக்கிறார்.
மகிஜித் மன்னன் கதை
மகிஜித் என்ற மன்னன் தனக்கு இருக்கும் நீண்ட காலமாக குழந்தை இல்லாத குறை நீங்க வழி சொல்லும் படி ரிஷிகள், முனிவர்கள் உள்ளிட்ட பலரையும் அழைத்துக் கேட்டார். இறுதியாக லோமேஷ் என்ற ரிஷி மன்னருக்கு வழிகாட்டினார். முந்தைய பிறவியில் தாகத்துடன் தண்ணீர் குடிக்க வந்த பசுவை கொன்று, கன்றுக்குட்டியிடம் இருந்து தாயை பிரித்த பாவத்தின் காரணமாகவே இந்த பிறவியில் மகிஜித் மன்னருக்கு குழந்தை இல்லாமல் இருப்பதாக தெரிவித்தார். பசுவை கொன்ற பாவம் நீங்கவும், குழந்தை வரம் கிடைக்கவும் கணவன்-மனைவி இருவருமாக சேர்ந்து, பக்தியுடன் புத்ரதா ஏகாதசி விரதத்தை கடைபிடிக்கும் படி கூறினார். ரிஷியின் வழிகாட்டுதலின் படி, மன்னரும் அவரது மனைவியும் ஏகாதசி விரதம் இருந்து குழந்தை வரம் பெற்றனர்.
இந்த கதை புத்ரதா ஏகாதசி விரதத்தின் முக்கியத்துவத்தையும், அதன் பலனையும் தெளிவாக உணர்த்துகிறது.
விரதத்தின் பலன்கள்
- குழந்தை வரம்: குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் அருளும்.
- பாவ விமோசனம்: முந்தைய பிறவி பாவங்கள் அனைத்தையும் போக்கி அருள் புரியும்.
- ஆன்மிக வளர்ச்சி: ஆன்மிகத்தில் உயர்ந்த நிலையை அடைய வழி வகுக்கும்.
- மகிழ்ச்சி மற்றும் செல்வ வளம்: பக்தி சிரத்தையுடன் விரதத்தை கடைபிடித்தால் மகிழ்ச்சி, அமைதி, செல்வ வளம் ஆகியவை கிடைக்கும்.
- தெய்வீக அருள்: விரதம் இருப்பவர்கள் மட்டுமின்றி அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்க்கையில் சரியான பாதையை காட்டி, தெய்வீக அருளையும், மோட்சம் அடைவதற்கான வழியையும் காட்டும் உன்னதமான விரதம் ஆகும்.
புத்ரதா ஏகாதசி விரதம் கடைபிடிக்கும் முறை
இந்த ஆண்டு புத்ரதா ஏகாதசி விரதம் ஆகஸ்ட் 05ம் தேதி கடைபிடிக்கப்பட உள்ளது.
திதி நேரம்:
- ஆகஸ்ட் 04ம் தேதி காலை 11.34 மணிக்கு துவங்கி
- ஆகஸ்ட் 05ம் தேதி பகல் 01.03 மணி வரை ஏகாதசி திதி உள்ளது.
விரத விதிமுறைகள்:
- விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, விரதத்தை துவக்க வேண்டும்.
- உபவாசமாக இருக்க முடிந்தவர்கள் முழுமையாக விரதம் இருக்கலாம். அப்படி இருக்க முடியாதவர்கள் தானியங்கள், அரிசி, வெங்காயம், அசைவம் ஆகியவை சேர்க்காமல் எளிமையான உணவுகளை சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
- பொதுவாக ஏகாதசி திதியை தசமி திதியில் துவங்கி, துவாதசியில் நிறைவு செய்ய வேண்டும் என்பார்கள். அதனால் ஆகஸ்ட் 04ம் தேதியன்று பகல் பொழுதே விரதத்தை துவக்கி, ஆகஸ்ட் 06ம் தேதி காலை 05.45 முதல் 08.26 வரையிலான நேரத்தில் பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம்.
வழிபாட்டு முறைகள்:
- ஏகாதசி அன்று பெருமாளின் சிலைக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தோ அல்லது பெருமாளின் படத்திற்கு பஞ்சாமிர்தம் படைத்தோ வழிபட வேண்டும்.
- மஞ்சள் நிற மலர்கள், பழங்கள் ஆகியவை படைத்து பெருமாளை வழிபட வேண்டும்.
- பெருமாளின் திருநாமங்களையும், விஷ்ணு சகஸ்ரநாமத்தையும் பாராயணம் செய்து வழிபட வேண்டும்.
- மாலையில் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பு.
- இது கோகுலாஷ்டமிக்கு முன்பு வரக் கூடிய ஏகாதசி விரதம் என்பதால் ராதா, கிருஷ்ணரையும் இந்த நாளில் வழிபடுவது சிறப்பு.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
ஆடி மாதத்தின் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு புத்ரதா ஏகாதசி என்று பெயர். குழந்தை வரம் அருளும் உன்னத விரதம் இது.
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள், ஆன்மிக வளர்ச்சி மற்றும் பாவ விமோசனம் வேண்டுபவர்கள் அனைவரும் இந்த விரதத்தை பக்தி சிரத்தையுடன் கடைபிடிக்கலாம்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 05ம் தேதி புத்ரதா ஏகாதசி விரதம் அனுசரிக்கப்பட உள்ளது. ஏகாதசி திதி ஆகஸ்ட் 04ம் தேதி காலை 11.34 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் 05ம் தேதி பகல் 01.03 மணி வரை உள்ளது.
அதிகாலையில் குளித்துவிட்டு விரதத்தை துவக்க வேண்டும். உபவாசமாக இருக்க முடியாதவர்கள் தானியங்கள், அரிசி, வெங்காயம், அசைவம் சேர்க்காமல் எளிமையான உணவுகளை உட்கொள்ளலாம். பெருமாளை பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து, மஞ்சள் மலர்கள், பழங்கள் படைத்து வழிபட வேண்டும். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும், அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவதும் சிறப்பு.