இந்தியாவில் இன்றைக்கும் ஓ.பி.சி., இ.பி.சி. மற்றும் டி.என்.டி. மாணவ, மாணவிகள் சமூக பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். அதுமட்டுமன்றி, தரமான கல்வி கிடைக்காமலும் போராடுகின்றனர். இது அவர்களின் எதிர்காலத்தை நோக்கிய முன்னோக்கப் பாதைக்கு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறது. எனவே, ஒவ்வொருவரும் வாழ்க்கையில் கட்டாயம் பெற வேண்டிய கல்வியை பெறுவதில் நிதி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக, மத்திய அரசு பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை என்ற கல்வி நிதியுதவி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி மற்றும் உயர் கல்வி பெறுவதற்காக நிதியுதவி வழங்கப்படுகிறது. தற்போது, இந்த திட்டத்தின் நன்மைகள் என்னென்ன? உதவித்தொகை எவ்வளவு? விண்ணப்பிக்கும் முறை என்ன? தகுதி நிபந்தனைகள் என்ன? உள்ளிட்ட பல தகவல்களை விரிவாக இப்பதிவில் தெரிந்துக் கொள்வோம்.
திட்டத்தின் கண்ணோட்டம்
பிரதமர் யசஸ்வி (PM YASASVI) என்பது துடிப்பான இந்தியாவிற்கான பிரதம மந்திரியின் இளம் சாதனையாளர் உதவித்தொகைத் திட்டம் (PM Young Achievers Scholarship Award Scheme for Vibrant India) என்பதன் சுருக்கமாகும். இது சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த திறமையான மாணவ, மாணவிகள் உயர் கல்வி படிப்பதற்கு உதவித்தொகை வழங்குவதற்காக மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் 1998-99 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த கல்வி உதவித்தொகை திட்டமாகும். இந்த ஒரே ஒரு திட்டத்தின் கீழ், ஓ.பி.சி., இ.பி.சி., மற்றும் டி.என்.டி. பிரிவுகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு 5 வகையான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.
பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டத்தின் நோக்கம்
இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம், நிதித் தடைகளை நீக்கி, சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகளும் நாட்டின் சிறந்த பள்ளி மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி பெற வேண்டும் என்பது தான். இது பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களை மீண்டும் பள்ளிக்குக் கொண்டு வர உதவுகிறது.
பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகைக்கான தகுதி நிபந்தனைகள்
- இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினர் (EBC), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), மற்றும் சீர்மரபினர், நாடோடி பழங்குடியினர் வகுப்பினரைச் (DNT/SNT) சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
- மேலும், உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் போது மாணவ, மாணவிகள் அரசு பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் அல்லது தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு அல்லது பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரரின் பாதுகாவலர் அல்லது பெற்றோரின் ஒட்டுமொத்த குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஏனெனில், உண்மையில் நிதியுதவி தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே உதவி வழங்கப்பட வேண்டும் என்பதே இதற்கு காரணம்.
- விண்ணப்பிக்கும் நேரத்தில் மாணவர் 14 முதல் 20 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் கட்டாயம் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும்.
- மேலும், மாணவ, மாணவிகள் 8 அல்லது 10 ஆம் வகுப்பில் 60% அல்லது அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்.
பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
- ஆதார் அட்டை
- வருமானச் சான்றிதழ்
- சாதிச் சான்றிதழ்
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
- பேங்க் பாஸ்புக்கின் முதல் பக்க நகல்
- 10, 12 ஆம் வகுப்பு சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள்
- மருத்துவரிடமிருந்து ஊனமுற்றோர் சான்றிதழ் (விண்ணப்பதாரர் ஊனமுற்றோராக இருந்தால்)
பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை வகைகள்
இந்த ஒரு திட்டத்தின் கீழ், பல்வேறு திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 5 விதமான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன:
- ஓ.பி.சி., இ.பி.சி., மற்றும் டி.என்.டி. மாணவர்களுக்கு ப்ரீ-மெட்ரிக் உதவித்தொகை
- ஓபிசி, இபிசி மற்றும் டிஎன்டி மாணவர்களுக்கு போஸ்ட்-மெட்ரிக் உதவித்தொகை
- ஓ.பி.சி., இ.பி.சி., மற்றும் டி.என்.டி. மாணவர்களுக்கு உயர்தர பள்ளிக் கல்வி உதவித்தொகை
- ஓ.பி.சி., இ.பி.சி., மற்றும் டி.என்.டி. மாணவர்களுக்கு உயர்தர கல்லூரி கல்வி உதவித்தொகை
- ஓ.பி.சி. வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கான விடுதி கட்டுதலுக்கான உதவித்தொகை
பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை எவ்வளவு?
ப்ரீ-மெட்ரிக் உதவித்தொகை (Pre-Matric Scholarship for OBC, EBC and DNT Students)
திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயிலும் 9 ஆம் மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
போஸ்ட்-மெட்ரிக் உதவித்தொகை (Post-Matric Scholarship for OBC, EBC and DNT Students)
திட்டத்தின் கீழ் இன்ஜினியரிங், டெக்னாலஜி, ஆர்கிடெக், டிசைன், ஃபேஷன் டெக்னாலஜி, அக்ரிகல்சர், வெட்னரி, மேனேஜ்மென்ட், அலைடு சைன்ஸ், M.Phil., Ph.D., D.Lit., D.Sc., L.L.B., L.L.M., கமெர்சியல் பைலெட் லைசென்ஸ் போன்று தொழில்முறை படிப்புகள் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரமும்; எம்.எட்/எம்.பார்மா, டிப்ளமோ, பார்மசி (பி பார்மா), நர்சிங், பிஎஃப்எஸ், ஹோட்டல் மேனெஜ்மெண்ட், கேட்டரிங், ஐடிஐ, பாலிடெக்னிக் போன்ற பட்டம், டிப்ளமோ, சான்றிதழ் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.13 ஆயிரமும்; பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம். போன்ற படிப்புகள் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.8 ஆயிரமும்; அனைத்து போஸ்ட் மெட்ரிகுலேஷன் பட்டப்படிப்பு அல்லாத படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது.
உயர்தர பள்ளிக் கல்வி உதவித்தொகை (Top Class School Education for OBC, EBC and DNT Students)
திட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம், விடுதி கட்டணம் மற்றும் இதர செலவினம் உட்பட அதிகபட்சமாக ரூ.75 ஆயிரமும்; 11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
உயர்தர கல்லூரி கல்வி உதவித்தொகை (Top Class College Education for OBC, EBC and DNT Students)
திட்டத்தின் கீழ், தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சமும்; புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் வாங்க ஆண்டுக்கு ரூ.5 ஆயிரமும்; இதர செலவுகளுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரமும்; கணினி/மடிக்கணினி போன்ற துணைக்கருவிகள் வாங்க ஒரு மாணவருக்கு ரூ.45 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இதில் கல்விக் கட்டணமாக வழங்கப்படும் ரூ.2 லட்சம் மத்திய அரசு நேரடிப் பலன் பரிமாற்றம் மூலமாக மாணவர்கள் படிக்கும் நிறுவனத்திற்கே செலுத்திவிடும். மீதமுள்ள புத்தகங்கள், எழுதுபொருட்கள், துணைக்கருவிகள் மற்றும் இதர செலவுகள் ஆகியவற்றின் முழுத் தொகையும் நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT) மாணவரின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
விடுதி கட்டுதலுக்கான உதவித்தொகை (Construction of Hostel for OBC Boys and Girls)
திட்டத்தின் கீழ், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு 100 இருக்கைகள் கொண்ட விடுதிகளை கட்டுவதற்காக நிதியுதவி வழங்கப்படுகிறது.
பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகையை பெற மாணவர்கள் https://scholarships.gov.in/ApplicationForm/login என்ற தேசிய உதவித்தொகை போர்ட்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். வழிமுறைகள்:
- முதலில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து ஒரு கணக்கை உருவாக்கவும்.
- பின்னர், உதவித்தொகைக்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
- தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து, விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கவும்.
- ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, தகுதிப் பட்டியலில் இடம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.