சங்கடஹர சதுர்த்தி நாளில் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் நிதி நெருக்கடிகள் நீங்கி, வாழ்வில் செல்வ வளம் பெருகும். ஜோதிட ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாளில், விநாயகருக்கு சில குறிப்பிட்ட பொருட்களை படைத்து வழிபடுவது எப்படி என்று இங்கே காணலாம். இந்த ஆன்மீகப் பரிகாரங்கள் உங்கள் வாழ்க்கையில் அமைதியையும், செல்வத்தையும் கொண்டு வரும்.
சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டின் முக்கியத்துவம்
சங்கடஹர சதுர்த்தி என்பது விநாயகப் பெருமானுக்குரிய சிறப்பு வாய்ந்த வழிபாட்டு நாளாகும். ஐப்பசி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தியை கணாதிபத சங்கடஹர சதுர்த்தி என்பார்கள். கணங்கள் அனைத்திற்கும் தலைவன் விநாயகர். இந்த நாளில் விநாயகரை வழிபட்டு, விரதம் இருந்தால் தடைகள், பிரச்சனைகள், துரதிர்ஷ்டம் ஆகியவற்றில் இருந்து விடுபட முடியும். சனிக்கிழமையில் வரும் இந்த சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை வழிபடுவதால் அதிர்ஷ்டம், செல்வ வளம், மன அமைதி ஆகியவை ஏற்படும். வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் நீங்கி, வீட்டில் அமைதி, விருப்பங்கள் நிறைவேறுவது, செல்வம் சேருவது ஆகிய பலன்களை தரும். நிதி தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்கள் சங்கடஹர சதுர்த்தி நாளில் சில குறிப்பிட்ட விஷயங்களை செய்வதன் மூலம் அவர்களின் கஷ்டங்கள் முடிவிற்கு வரும்.
நிதி நெருக்கடியிலிருந்து விடுபட விநாயகருக்கு படைக்க வேண்டிய 5 விஷயங்கள்
- 1. குங்குமம் படைப்பது
விநாயகருக்கு இந்த நாளில் சிவப்பு நிற குங்குமம் படைத்து வழிபடுவது மிகவும் சிறப்பானது. விநாயகரின் நெற்றியில் குங்குமம் வைத்து, "சிந்தூரம் சோபனம் ரக்தம் செளபாக்யம் சுக்வரதனம் சுபதம் கம்தம் சைவ சிந்தூரம் பிரதிக்ரிஹயதம்", "ஓம் கம் கணபதியே நம" ஆகிய மந்திரங்களைச் சொல்லி வழிபட வேண்டும். இது விநாயகரின் அருளைப் பெற்றுத் தருவதுடன், பொருளாதாரத்தில் ஏற்றத்தையும், குடும்பத்தில் ஆரோக்கியம், மகிழ்ச்சி ஆகியவற்றையும் ஏற்படுத்தும்.
- 2. அருகம்புல் சாற்றுதல்
விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்த அருகம்புல்லை இந்த நாளில் அவருக்கு அணிவித்து வழிபட வேண்டும். சுத்தமான ஆடைகளை உடுத்திக் கொண்டு, அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று, 11 முடிச்சுகள் கொண்ட அருகம்புல்லை விநாயகருக்கு அணிவிக்க வேண்டும். வீட்டிலுள்ள விநாயகர் சிலை அல்லது படத்திற்கும் அருகம்புல் அணிவிக்கலாம். அருகம்புல்லை சாற்றி விட்டு, "ஓம் கம் கணபதியே நமஹ" மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும். இது விநாயகரின் அருளைப் பெற்றுத் தருவதுடன், பாதியில் நின்ற உங்களது பணிகள் வெற்றிகரமாக நிறைவடையும்.
- 3. விநாயகருக்கு லட்டு படைப்பது
விநாயகருக்கு மிகவும் விருப்பமான கொழுக்கட்டை, மோதகம், லட்டு ஆகியவற்றை 5 என்ற எண்ணிக்கையில் படைத்து வழிபட வேண்டும். வாசனையான மலர்கள் சாற்றி பூஜை செய்து வழிபட வேண்டும். விநாயகருக்கு லட்டு படைத்து குடும்பத்தின் நலனுக்காகவும், வீட்டில் செல்வம் சேர வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ள வேண்டும். பூஜை முடித்த பிறகு விநாயகருக்கு படைத்த லட்டுகளை ஏழைகளுக்கோ அல்லது குழந்தைகளுக்கோ கொடுக்கலாம். இப்படி வழிபடுவதால் வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள், நெருக்கடிகளில் இருந்து விடுபட முடியும்.
- 4. அக்ஷதை அர்ப்பணிப்பு
சங்கடஹர சதுர்த்தி நாளில் முனை உடையாத பச்சரிசியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அக்ஷதையை விநாயகருக்கு படைத்து வழிபடுவது மிகவும் சிறப்பு. மஞ்சள் கலந்த அக்ஷதை அரிசியை விநாயகரின் பாதத்தில் வைத்து வழிபட வேண்டும். சாதாரண அரிசியையும் படைக்கலாம். பிறகு, "இதம் அக்ஷதம் ஓம் கம் கணபதியே நமஹ" என்ற மந்திரத்தை மூன்று முறை சொல்லி, விநாயகரின் பாதத்தில் அந்த அக்ஷதையை கொஞ்சம் கொஞ்சமாக சமர்ப்பித்து வழிபட வேண்டும்.
- 5. பச்சை பயிறு தானம்
சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட்ட பிறகு 250 கிராம் அளவிற்கு பச்சை பயிறை தானமாக அளிக்க வேண்டும். இதை ஏழைகள், கோவில், அல்லது கோ சாலைகள் ஆகிய யாருக்காவது தானமாக கொடுக்கலாம். தானம் செய்த பிறகு விநாயகரை மனதார வழிபட்டு, வீட்டில் உள்ள நிதி தொடர்பான பிரச்சனைகள் தீர்ந்து செல்வ வளம் பெருக வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும். பச்சை பயிறு, புதன் பகவானுக்குரிய தானியமாகும். இதை தானமாக அளிப்பதால் விநாயகப் பெருமானின் அருளும், புதன் பகவானின் அருளும் கிடைக்கும். ஞானகாரகன் என சொல்லப்படும் புதன் பகவானின் அருளும், ஜாதகத்தில் அவரின் நிலையும் சரியாக இருந்தால் மட்டுமே வியாபாரம், தொழில் சிறப்பாக அமைந்து, வருமானம் பெருகும். இதனால் பச்சை பயிறை தானம் செய்வதால் பொருளாதாரத்தில் இருக்கும் தேக்க நிலை மாறி, செல்வ வளம் பெருகும்.