வணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப் பெருமான். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவை தான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். இதை மேற்கொண்டு கணபதியை பூஜிப்பவர்ளுக்கு எந்தக் குறையும் இருக்காது என்றே சொல்லப்படுகிறது. சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக் கூடிய இந்த சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் வேண்டியது மட்டுமல்ல, நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் நமக்கு கிடைத்து விடும்.
சங்கடஹர சதுர்த்தி: முக்கியத்துவம் & பலன்கள்
பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி. சங்கட என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே மாத சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. இந்த சிறப்பான விரதத்தை அனுஷ்டித்தே அங்காரகன் என்ற செவ்வாய், நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை அடைந்தார். ஜோதிடம் ரீதியாக செவ்வாய் கிரகத்தின் அருளைப் பெற இது ஒரு சிறந்த விரதம். கிருஷ்ணர், புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹரசதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றனர். சிவனைப் பிரிந்த சக்தி இந்த விரதத்தை மேற்கொண்டு தான் சிவனை அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. கிருதவீரியன் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொண்டு தான் கார்த்தவீரியன் என்ற மகனைப் பெற்றான். பாண்டவர்கள் கூட இந்த விரதம் இருந்தே வெற்றி பெற்றனர் என்றும் தமிழ் புராணங்கள் கூறுகின்றன.
விரத வழிபாட்டு முறை
- அதிகாலை தரிசனம்: சங்கடஹர சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்து வீட்டில் உள்ள விநாயகரை முதலில் தரிசித்து விட வேண்டும்.
- பூஜை: குளித்து முடித்து விநாயகருக்கு விளக்கேற்றி, அருகம்புல் அல்லது கிடைத்த மலர்களை வைத்து பூஜிக்கலாம். தூப தீப ஆராதனை, நைவேத்தியம் செய்வது சிறப்பானது.
- உபவாசம்: அன்று முழுவதும் அதாவது மாலை வரை உபவாசம் இருப்பது நல்லது.
- கோவில் வழிபாடு: மாலை வேளையில் அருகில் உள்ள கணபதி கோயிலுக்குச் சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். வசதி இருந்தால் அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம். பிரசாதமும் அளிக்கலாம்.
- சந்திரன் தரிசனம்: வழிபட்டு வீடு திரும்பும் போது அந்த நாளைய சந்திரனை தரிசித்து வேண்ட வேண்டும்.
- விரத பூர்த்தி: அதன் பிறகு உணவு முடித்து விரதத்தை பூர்த்தி செய்யலாம்.
சங்கடஹர சதுர்த்தி விரத பலன்கள்
தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று வரும் சதுர்த்தி திதியில் துவங்கி ஓர் ஆண்டு முழுமையாக இந்த விரதம் இருந்தால் எண்ணியது எண்ணியவாறே நடக்கும். எல்லா காரியமும் தடையின்றி நடக்கும் என்று சொல்லப்படுகிறது.
- தீராத நோய் தீரும்.
- நிலையான இன்பம் கிட்டும்.
- கல்வி அறிவு, புத்திக் கூர்மை, காரியங்களில் வெற்றி, நீண்ட ஆயுள், நிலையான ஆரோக்கியம், நன்மக்கட் பேறு, பெருமைக்கு உரிய புகழ் என எல்லா நன்மைகளையும் அடைய முடியும்.
- சனி தோஷத்திற்கு ஆட்பட்டு கஷ்டம் அனுபவிப்பவர்களுக்கு இந்த விரதம் ஒரு நல்ல விடிவு. சனி பிடிக்காத ஒரே தெய்வம் விநாயகர் மட்டுமே என்பதால் சனியின் பாதிப்புக்களில் இருந்தும், பெரும் துன்பங்களில் இருந்தும் விடுபட நினைப்பவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து வழிபடலாம். இது ஜோதிடம் ரீதியாக மிகவும் முக்கியமான விரதம்.