ஓம விதைகள், அதாவது அஜ்வைன், நமது பாரம்பரிய மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக செரிமானக் கோளாறுகள், சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த வீட்டு வைத்தியமாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்திய ஆய்வுகள் மற்றும் டாக்டர் பிரகாஷ் மூர்த்தியின் விளக்கங்கள் ஓமத் திரவத்தின் அறிவியல் பூர்வமான நன்மைகளை உறுதிப்படுத்துகின்றன.
ஓமத் திரவம் தயாரிக்கும் முறை
ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் ஓம விதைகளைச் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு இதை வடிகட்டி எடுத்துக்கொண்டால் ஓமத் திரவம் தயார். இது பாரம்பரியமாகவே நம் முன்னோர்களால் பயன்படுத்தப்படும் எளிய கைவைத்தியம் ஆகும்.
ஓமத் திரவத்தின் பொதுவான நன்மைகள்
- வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு, குறிப்பாக அஜீரண கோளாறுகள், வயிறு உப்புசம், மற்றும் வயிற்றுப் புண்களுக்கு ஒரு சிறந்த தீர்வு.
- பசியின்மையை நீக்கி, பசி உணர்வைத் தூண்டும். இதனால் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் ஓமம் அத்தியாவசிய பொருளாக உள்ளது.
- டாக்டர் பிரகாஷ் மூர்த்தியின் கூற்றுப்படி, இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் கொண்டவர்களுக்கும் நன்மை செய்யக்கூடியது.
குழந்தைகளுக்கு ஓமத் திரவம்
பொதுவாக குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் இருக்கும் போது கற்பூரவல்லி இலையை இடித்து சாறெடுத்து தேனில் கலந்து கொடுப்பது வழக்கம். ஓம விதைகள் கொதிக்கும் போது கற்பூரவல்லி இலை வாசம் வருவதாக டாக்டர் பிரகாஷ் மூர்த்தி குறிப்பிடுகிறார். கற்பூரவல்லி இலைக்கு ஏற்ற மருத்துவ குணங்களை ஓமம் கொண்டுள்ளது. குழந்தைகளுக்கு இந்த ஓமத் தண்ணீரை கொடுக்கும் போது அவர்களுக்கு மூச்சு அழற்சி அறிகுறிகள் வெகுவாக குறையும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
வறட்டு இருமலுக்கு ஓமத் திரவம்
வறட்டு இருமல் மிகவும் மோசமான உபாதையை அளிக்கும், குறிப்பாக இரவு நேரங்களில் தூங்க விடாது. டாக்டர் பிரகாஷ் மூர்த்தியின் கூற்றுப்படி, வறட்டு இருமலுக்கும் ஓமத் திரவம் கைகொடுக்கும். வைரஸ் தொற்றுக்கு பிறகு வரக்கூடிய bronchoconstriction எனப்படும் மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் தொற்று நீங்கிய பிறகும் தொடரும் இருமலுக்கு (3 முதல் 8 வாரங்கள் வரை நீடிக்கும்) இந்த ஓமத் திரவம் பயனளிக்கும்.
ஆஸ்துமா பிரச்சனை அறிகுறிகளை நிர்வகிக்கும் ஓமம்
ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களுக்கு அறிகுறிகள் தீவிரமாகும் போது காற்றுப்பாதைகள் குறுகி, சுவாசிப்பது கடினமாகிறது. ஆய்வுகளின் படி, ஓமத் திரவம் ஆஸ்துமா மருந்து போன்ற குணங்களை கொண்டுள்ளது. ஓமம் விதைகளை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம் ஆஸ்துமா அறிகுறிகளை நிர்வகிக்க உதவுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு ஓமத் திரவத்தின் அளவு
2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 5 மில்லி வரை நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை கொடுத்து வரலாம். தற்போது சளி, இருமல் அதிகரிக்கும் மழைக்காலத்தில், பாதிப்பு இருந்தால் நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை இந்த அளவில் கொடுக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. இது சளி, இருமல் தொற்று அதிகம் தாக்காமல் தடுக்கும் மருந்தாகவும் உதவும்.
பொறுப்பு துறப்பு
இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. இந்த கட்டுரை இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவை அடிப்படையாகக் கொண்டது. இது மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. மேலும் விவரங்களுக்கு எப்போதும் மருத்துவரை அணுகவும். இங்கு வழங்கப்பட்ட தகவலின் துல்லியம், நம்பகத்தன்மைக்கு jothidam360.in பொறுப்பேற்காது.