கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கும் முருகப் பெருமானின் அருளைப் பெற, செவ்வாய் கிழமையில் வரும் சஷ்டி விரதம் ஒரு சிறந்த வழியாகும். இந்த அற்புதமான விரதத்தை மேற்கொள்வதன் மூலம் நம் தலையெழுத்தையே மாற்றி, வாழ்வில் நன்மைகளை பெற்று, துன்பங்களில் இருந்து விடுபடலாம். இந்த சிறப்புமிக்க செவ்வாய் சஷ்டி விரதத்தின் மகிமையையும், அதன் பலன்களையும், விரத முறைகளையும் இக்கட்டுரையில் காண்போம்.
சஷ்டி விரதத்தின் முக்கியத்துவம்
செவ்வாய் கிழமையில் வரும் சஷ்டியில் விரதம் இருந்தோ அல்லது விரதம் இல்லாமலோ முருகப் பெருமானை வழிபட்டால் தலையெழுத்து மாறும். விதியையும் மாற்றி, நமக்கு நன்மைகளை தரக் கூடிய, துன்பங்களை போக்கக் கூடிய கலியுக தெய்வமாக திகழ்பவர் முருகன். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடி விடும். அத்தனை சிறப்பு வாய்ந்த தமிழ் கடவுள் முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கிய விரதங்களுள் ஒன்று சஷ்டி விரதம். இந்த சஷ்டி விரதம் மங்களகரமான செவ்வாய்க்கிழமையில் வருவது மிகவும் சிறப்பு.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி திதியிலிருந்து ஆறாம் நாள் வருவது தேய்பிறை சஷ்டி ஆகும். அமாவாசையை அடுத்து வரும் சஷ்டியை சுக்லபட்ச சஷ்டி அல்லது வளர்பிறை சஷ்டி என்றும், பௌர்ணமியை அடுத்து வரும் சஷ்டியை கிருஷ்ணபட்ச சஷ்டி அல்லது தேய்பிறை சஷ்டி என்றும் அழைக்கக்கிறோம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஜோதிடத்தில் ஐஸ்வர்யத்தை தரக்கூடியது 6 என்ற வழக்கு உள்ளது. 6ஆம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார்.
சஷ்டி விரத பலன்கள்:
வாழ்க்கையில் நமக்கு எந்த துன்பம் வந்தாலும் சரி, அந்த துன்பத்தில் இருந்து வெளி வருவதற்கு தேவையான மன தைரியத்தை கொடுக்கக்கூடிய வழிபாடு தான் முருகப்பெருமானின் வழிபாடு. விதியை மாற்றக்கூடிய சக்தி சஷ்டி வழிபாட்டிற்கு இருக்கின்றது. உங்களுக்கு திருமணம் நடக்கவில்லையா? ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய சஷ்டி திதி அன்று முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று முல்லைப் பூ அல்லது செவ்வரளி பூ மாலை சூட்டி, 2 நெய் தீபங்களை ஏற்றி முருகப்பெருமானை வழிபாடு செய்துவர நல்ல மணவாழ்க்கை அமையும். இதேபோல திருமணமான தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்றாலும் இந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்ளலாம்.
செவ்வாய்கிழமை விரதம் மற்றும் முருகப் பெருமான்:
வாரம்தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்து வர வாழ்வில் இருக்கக்கூடிய அத்தனை தடைகளும் விலகும். குறிப்பாக ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களால் வாழ்க்கையில் முன்னேற தடை ஏற்பட்டால் அவர்களுக்கு செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடு மிக மிக உகந்தது. செவ்வாய்க்கிழமை தோறும் வீட்டில் முருகப்பெருமானின் திருவுருவ படத்திற்கு செவ்வரளி பூக்களால் அலங்காரம் செய்து, 6 நெய் தீபங்கள் ஏற்றி மனமுருகி வேண்டிக் கொண்டால் சுபிட்சம் கிடைக்கும். முருகப்பெருமானுக்கு உகந்த கிழமை செவ்வாய்க்கிழமை. முருகப்பெருமானுக்கு உகந்த திதி சஷ்டி. இந்த இரண்டும் இணைந்து வருவது இன்னும் மகத்துவம் மிக்க பலன்களை தந்தருளும் என்பது ஐதீகம்.
சஷ்டி விரதம் இருப்பது எப்படி?
- வீட்டிலேயே சஷ்டி விரதத்தை கடைபிடிப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை தொடங்கி அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று வரலாம்.
- பூஜையறையில் முருகன் படத்தின் முன்பு நெய் விளக்கு அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற வேண்டும்.
- முருகனுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மலர் மாலை சாற்றி அலங்காரம் செய்து வழிபடலாம்.
- அவருக்கு இஷ்ட நைவேத்தியமான அவல் உணவுகளை படைக்கலாம்.
- இவ்விரதத்தை முழு நேரமும் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிடலாம்.
- வேலைக்கு செல்பவர்கள் காலையில் பூஜையை முடித்துவிட்டு விளக்கை மலை ஏற்றிவிட்டு பின்னர் வேலைக்கு தாராளமாக செல்லலாம். மீண்டும் மாலையில் இதேபோல் பூஜை செய்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
- வீட்டிலேயே இருப்பவர்கள் விரதம் முடியும் வரை முருகனுக்கு விளக்கு ஏற்றி வைப்பது மிகவும் நல்லது.
என்ன மந்திரம் சொல்ல வேண்டும்?
வீட்டிலேயே முருகனின் பாமாலைகளைப் பாடலாம். குறிப்பாக கந்தசஷ்டி, திருப்புகழ் உள்ளிட்ட முருகனின் சிறப்புகளை உணர்த்தும் பாடலை படிக்கலாம். மேலும் குழந்தை வரம் வேண்டுபவர்கள் விரதத்தின் போது சொல்ல வேண்டிய திருப்புகழை பாராயணம் செய்யலாம். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், வேல் மாறல் போன்ற சக்தி வாய்ந்த பாடல்களை பாடலாம். இது எதுவும் தெரியாதவர்கள், "ஓம் சரவண பவ" என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபடலாம். குழந்தை பாக்கியத்தை அருளும் இந்த சஷ்டி விரதத்தை எளிமையாக கோவிலிலும் கடைபிடிக்கலாம். முடிந்த வரை முருகன் கோவிலில் விரதம் இருப்பது விசேஷமானது. அதுவும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் விரதம் இருப்பது கூடுதல் சிறப்பு வாய்ந்தது.
செவ்வாய் சஷ்டி விரதத்தின் முக்கிய பலன்கள்
- ✓குழந்தை பாக்கியம்: குழந்தை இல்லாதவர்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும்.
- ✓திருமணத் தடை நீங்கும்: விரைவில் நல்ல மணவாழ்க்கை அமையும்.
- ✓செல்வ வளம் பெருகும்: வறுமை நீங்கி செல்வம் செழிக்கும்.
- ✓நினைத்த காரியங்கள் நிறைவேறும்: எண்ணிய காரியங்கள் அனைத்தும் கைகூடும்.
- ✓மன அமைதி: எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் தீர்ந்து, மன நிம்மதி கிடைக்கும்.
- ✓தீராத நோய்கள் தீரும்: உடல் ஆரோக்கியம் மேம்படும்.
- ✓பகை விலகி வெற்றி: வாழ்வில் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.