Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

வேளாண் மதிப்புக் கூட்டு மையங்கள் மானியத் திட்டம்

தமிழக விவசாயிகளின் நன்மைக்காகவும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காகவும் தமிழ்நாடு அரசு பல்வேறு சலுகைகள், உதவிகள் மற்றும் நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அந்தவகையில், வேளாண், தோட்டக்கலை விளைப்பொருட்களின் மதிப்பைக் கூட்டுதல் மற்றும் அவற்றை பதப்படுத்துதல் உள்ளிட்ட தொழில்களை தொடங்க நினைக்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு வேளாண் மதிப்புக் கூட்டு மையங்கள் மானியத் திட்டம் என்ற ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. தற்போது, இந்த திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது, யாருக்கு மானியம் கிடைக்கும், எவ்வளவு மானியம் உள்ளிட்ட பல தகவல்களை இந்த பதிவில் விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

விவசாயிகளின் நலனைக் காத்து வேளாண் உற்பத்தியினை உயர்த்துவதோடு, விளைப்பொருட்கள் வீணாகாமல் தடுத்து அவற்றின் மதிப்பைக் கூட்டி அதிக வருவாய் பெற்றிட வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு வேளாண் மதிப்புக் கூட்டும் மையங்கள் மானியத் திட்டத்தை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 100 வேளாண் மதிப்புக் கூட்டும் மையங்கள் அமைப்பதற்காக ஒவ்வொருவருக்கும் ஒரு கோடியே 50 லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

வேளாண் மதிப்புக் கூட்டு மையங்கள் அமைக்கும் திட்டத்தின் நோக்கம் என்ன?

2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுவதற்கான இலக்கினை அடைவதில் வேளாண் விளைப்பொருட்களின் மதிப்புக் கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல் ஆகியவை இன்றியமையாததாக அமைகிறது. எனவே, இந்த வகையான தொழில்களை தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்த மானியம் வழங்கி அதன் மூலம் 100 புதிய வேளாண் மதிப்புக் கூட்டும் மையங்களை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும். அதுமட்டுமல்லாமல், அறுவடைக்குப் பிறகு ஏற்படும் இழப்புகளை குறைப்பது மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதும் இத்திட்டத்தின் மற்றொரு நோக்கமாக இருக்கிறது.

வேளாண் மதிப்புக் கூட்டு மையங்கள் மானியத் திட்டத்தின் நன்மைகள்

  • மகசூல் காலங்களில் வேளாண் விளைப்பொருட்கள் விலை வீழ்ச்சி அடையும்போது, விளைப்பொருட்களை வீணாகாமல் சேமித்து வைத்து, அதன் மதிப்பைக் கூட்டி விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படுவதுடன், வாழை, மா, முருங்கை, மிளகாய், மல்லிகை, பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் விளைப்பொருட்களுக்குத் தகுந்த மதிப்புக் கூட்டுதல் மையங்கள் அமைக்க வழிவகுத்துக் கொடுக்கப்படும்.
  • வேளாண்மையில் மதிப்புக் கூட்டும் மையங்களை உருவாக்குவதன் மூலம் பதப்படுத்துபவர்கள் மற்றும் நுகர்வோருடன் சந்தை இணைப்புகள் உயர்வதோடு மட்டுமல்லாமல், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே வேலைவாய்ப்புகளை உருவாக்குவதால் அப்பகுதியின் பொருளாதார நிலை மேம்படும்.
  • இத்திட்டத்தில் ரூ.10 கோடி வரையிலான வேளாண் விளைப்பொருட்கள் மதிப்புக் கூட்டும் தொழில் செய்ய விரும்புவோருக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் (ரூ.1.5 கோடி) மானியமாக வழங்கப்படுகிறது. இருப்பினும், மதுரை மாவட்டத்தை சேர்ந்த வேளாண் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மட்டும் ரூபாய் இரண்டு கோடி (ரூ.2 கோடி) வரை மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
  • இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் தொழில் முனைவோர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்புகளுக்கான பயிற்சி மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அத்துடன், மதிப்புக் கூட்டும் மையங்கள் அமைப்பதற்கு உரிய சான்றிதழ்கள் மற்றும் உரிமங்கள் ஒற்றைச் சாளர அனுமதி (Single Window Clearance) முறையின் கீழ் பெற்றுத் தரப்படும்.
  • மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களின் கீழ் ஏற்கனவே நிதியுதவி பெற்ற பயனாளிகளும் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியுண்டு. இது தவிர அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத வட்டி மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
  • மதிப்புக் கூட்டும் மையங்கள் வங்கியில் கடன் பெற்று அமைக்கப்படுவதால், வங்கிக் கடன் பெற தேவையான விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report) தயாரிக்கவும், வங்கிகளில் கடன் உதவி பெறுவதற்கான வழிமுறைகளையும் மாவட்ட அளவில் உள்ள ஆலோசகர்கள் மூலமாக அரசு சார்பில் உதவி செய்து தரப்படும்.

வேளாண் மதிப்புக் கூட்டு மைய மானியத்திற்கான தகுதிகள்

  • இந்த திட்டத்தின் கீழ் மானியம் பெற விண்ணப்பதாரருக்கு நிறுவன உரிமை இருக்க வேண்டும்.
  • அதேபோல், ஒரு நபர், நிறுவனம், குடும்பம் இந்த திட்டத்தின் கீழ் ஒரு முறை மட்டுமே மானியம் பெற இயலும்.
  • மேலும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், விவசாயிகள், தனியார் தொழில் முனைவோர்கள், கூட்டுறவு நிறுவனங்கள் இத்திட்டத்தின் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

எந்தெந்த தொழில்களுக்கு இத்திட்டத்தில் மானியம் பெறலாம்?

இந்த திட்டத்தில் கீழ்க்கண்ட வேளாண், தோட்டக்கலை விளைபொருட்களின் இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை பதப்படுத்தும் தொழில்களில் புதிய மதிப்புக் கூட்டும் மையங்களை அமைப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது:

  • நவீன அரிசி ஆலைகள்
  • வேர்கடலை மதிப்புக் கூட்டும் ஆலைகள்
  • சமையல் எண்ணெய் தயாரிக்கும் ஆலைகள்
  • பழக்கூழ் குழைமங்கள் தயாரிக்கும் ஆலைகள்
  • காய்கறிகள் பதப்படுத்தும் கூடங்கள்
  • ஜவ்வரிசி ஆலைகள்
  • சமையல் மசாலாக்கள் தயாரிக்கும் ஆலைகள்

வேளாண் மதிப்புக் கூட்டு மையங்களுக்கான மானியம் எவ்வளவு?

இத்திட்டத்தின் மூலம், ஒரு மதிப்புக் கூட்டும் மையத்திற்கான மொத்த மதிப்பீடு ரூ.10 கோடி மிகாமல் இருந்தால் பொதுப்பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் முதலீட்டு மானியமாக வழங்கப்படும். அதுவே, தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய வட்டாரங்களில் துவக்கப்படும் தொழில்களுக்கு (சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அட்டவணைப்படி), பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, கூடுதலாக 10 சதவீதம் என மொத்தம் 35 சதவீதம் மானியம் வழங்கப்படும். அதாவது, அதிகபட்சமாக தலா ரூ.1.50 கோடி வரை மானியம் வழங்கப்படும்.

மேலும், திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதம் பயனாளிகளின் சுயமுதலீடாக இருக்க வேண்டும் மற்றும் மீதமுள்ள தொகை வங்கிக் கடனாகப் பெறப்பட வேண்டும். மையங்கள் அமைப்பதற்கான மொத்த திட்டச் செலவில் இயந்திரங்கள் மற்றும் கட்டிடத்திற்கான செலவையும் சேர்த்துக் கொள்ளலாம். மேலும், மத்திய அரசின் வேளாண்மை உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் பதிவு செய்தால், கூடுதலாக 3 சதவீதம் வட்டி மானியம் 7 ஆண்டுகள் வரை பெறலாம்.

வேளாண் மதிப்புக் கூட்டு மைய மானியத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

இத்திட்டத்தின் மானியம் தொடர்பாக முன்னணி நாளிதழ்கள் அல்லது வேளாண்மை துறையின் வலைத்தளம் மற்றும் பிற மின்னணு தளங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படும். அந்த சமயத்தில் இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள, வேளாண் தொழில் முனைவோர் விரிவான திட்ட அறிக்கையுடன் அந்தந்த மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். அவர்களே, வங்கிக் கடன் பெறவும் உதவுவார்கள்.

மேலும் விண்ணப்பதாரரின் விண்ணப்பங்கள் வேளாண்மை துணை இயக்குநர் மூலம் முன்மொழியப்பட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான தொழில்நுட்ப குழுவினரால் கூர்ந்தாய்வு செய்யப்படும். பின்னர் அவை மாநில அளவிலான திட்ட ஒப்புதல் குழுவிற்கு பரிந்துரை செய்யப்படும். மீண்டும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் தலைமையில் இயங்கும் திட்ட ஒப்புதல் குழுவினரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.

மானியம் வழங்கும் முறை

புதிய மதிப்புக் கூட்டும் மையங்கள் நிறுவுவதற்கு பயனாளியின் 5 சதவீத சுயமுதலீடு போக, மீதமுள்ள தொகையை வங்கிகளில் கடனாக பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னர், இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு, மையங்கள் அமைப்பதற்கான மானியம் தவணை முறையில் (60% மற்றும் 40% ஆகிய இரண்டு தவணைகளில்) வங்கிகளுக்கு பின்னேற்பு மானியமாக செலுத்தப்படும். வங்கிகளில் பெறப்படும் கடனுக்கு ஒன்றிய அரசின் Credit Guarantee fund Trust for Micro and small Enterprises (CGTMSE) திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி வரை கடன் உத்திரவாதம் (Credit Guarantee) வழங்கப்படும். மீதமுள்ள கடன் தொகைக்கு, பயனாளிகள், வங்கிகள் கோரியபடி ஈட்டுறுதி (Collateral Security) வழங்க வேண்டும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அறுவடைக்குப் பிறகு ஏற்படும் இழப்புகளை குறைப்பது மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதாகும்.

வேளாண் விளைப்பொருட்களின் மதிப்பைக் கூட்டுதல், பதப்படுத்துதல் போன்ற தொழில்களில் ஆர்வம் உள்ள வேளாண் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.1.50 கோடி வரை மானியம் வழங்கப்படுகிறது.

வேளாண் மதிப்புக் கூட்டு மைய மானியத்துக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

Our Other Services