தடைகளை அகற்றி, ஞானத்தையும் செல்வ வளத்தையும் அள்ளித்தரும் விநாயகப் பெருமானின் அவதார தினமான விநாயகர் சதுர்த்தி திருநாள், ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த மங்களகரமான தினத்தில் விநாயகரை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகளையும், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட வேண்டிய சரியான நாள் மற்றும் நேரத்தையும் விரிவாக அறிந்துகொள்வோம்.
விநாயகர் சதுர்த்தியின் முக்கியத்துவம் மற்றும் வழிபாட்டு நன்மைகள்
சதுர்த்தி என்பது திதிகளில் நான்காவது திதியாகும். பொதுவாக எந்த ஒரு காரியத்தை துவங்குவதற்கு முன்பும் விநாயகரை வழிபட்டு விட்டு தான் துவங்குவது இந்துக்களின் வழக்கம். இதனால் விநாயகரின் அருளால் அந்தக் காரியத்தில் வெற்றி, லாபம் ஆகியவை கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதுவும் விநாயகர் அவதரித்த விநாயகர் சதுர்த்தி நாளில் அவரை மனதார வழிபட்டால் வளர்ச்சி, புதிய துவக்கம் ஆகியவை ஏற்படுவதுடன், வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள், துன்பங்கள், சவால்கள், சிக்கல்கள் ஆகியவற்றில் இருந்து விடுபட முடியும் என்று நம்பப்படுகிறது. இதனால் விநாயகர் சதுர்த்தி, அனைத்து தரப்பினராலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது.
விநாயகர் சதுர்த்தி 2024: தேதி குழப்பமும் தெளிவும்
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27ம் தேதி புதன்கிழமை வருவதாக பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 26ம் தேதி பகல் 02:22 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் 27ம் தேதி பகல் 03:52 வரை சதுர்த்தி திதி உள்ளது. அதற்கு பிறகு பஞ்சமி திதி துவங்கி விடுகிறது. பொதுவாக மற்ற திதி, வழிபாடுகள் அனைத்தும் சூரிய உதயத்தை அடிப்படையாக வைத்து தான் கணக்கிடப்படுவது வழக்கம். ஆனால் விநாயகப் பெருமானுக்குரிய சதுர்த்தி வழிபாடு என்பது சந்திரனை அடிப்படையாக வைத்து வழிபடப்படும் வழிபாடாகும். சங்கடஹர சதுர்த்தி வழிபாடு தோன்றியதற்கு காரணமானவரே சந்திரன் தான். அதனால் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினை ஆகஸ்ட் 26ம் தேதி மேற்கொள்ள வேண்டுமா அல்லது ஆகஸ்ட் 27ம் தேதி மேற்கொள்ள வேண்டுமா என்ற குழப்பம் ஏற்பட்டது.
ஆகஸ்ட் 26ம் தேதியன்று தான் மாலை சந்திர உதய நேரத்தில் சதுர்த்தி திதி உள்ளது. அதே சமயம் ஆகஸ்ட் 27ம் தேதியன்று மாலை 4 மணிக்கு முன்பாகவே சதுர்த்தி திதி நிறைவடைந்து விடுவதால் இந்த குழப்பம் ஏற்பட்டது. தேய்பிறை சதுர்த்தியான சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மட்டுமே சந்திர உதயத்தை அடிப்படையாக வைத்து வழிபட வேண்டியதாகும். வளர்பிறை சதுர்த்தி வழிபாடு என்பது சதுர்த்தி திதியை அடிப்படையாக வைத்து செய்யப்படும் வழிபாடு ஆகும். அதனால் ஆகஸ்ட் 27ம் தேதி தான் சூரிய உதய நேரத்தில் சதுர்த்தி உள்ளது. ஆகஸ்ட் 26ம் தேதி பிற்பகலுக்கு பிறகே சதுர்த்தி திதி துவங்குகிறது. இதனால் ஆகஸ்ட் 27ம் தேதியை தான் விநாயகர் சதுர்த்தியாக கணக்கில் எடுத்துக் கொண்டு வழிபட வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கான சுப முகூர்த்த நேரம்
இந்த வழிபாட்டை மாலையில் தான் செய்ய வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. ஆகஸ்ட் 27ம் தேதி காலை 11 மணி முதல் பகல் 01:40 வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினை செய்யலாம். இதுவே விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கான சுப முகூர்த்த நேரமாக குறிப்பிடப்படுகிறது. அன்றைய தினம் மாலையில் சதுர்த்தி திதி இருக்காது என்பதால் காலை முதல் பகல் வரையிலான நேரத்திற்குள் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினை நிறைவு செய்து கொள்வது நல்லது. சதுர்த்தி வழிபாட்டினை மாலையில் செய்யும் வழக்கம் உள்ளவர்கள் ஆகஸ்ட் 26ம் தேதி மாலை வழிபடலாம். விநாயகர் சதுர்த்தி வட மாநிலங்களில் 10 நாள் விழாவாக கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் வழிபடுவதில் தவறு ஏதும் கிடையாது.