முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானை வழிபட்ட பிறகு தான் அனைத்து காரியங்களையும் துவங்குவது இந்துக்களின் மரபாகும். விநாயகரை வணங்கி விட்டு துவங்கும் எந்த காரியமும் தடையில்லாமல் நடைபெறுவதுடன், அது வெற்றியாகவும் முடியும் என்பது ஆழமான நம்பிக்கை. மற்ற தெய்வங்களை போல் அல்லாமல் விநாயகரை வழிபடும் முறை தனித்துவமானது. குறிப்பாக, விநாயகரை வழிபடும் போது தலையில் குட்டிக் கொண்டும், தோப்புக்கரணம் போட்டும் வணங்குவது வழக்கம். இந்த விநாயகர் வழிபாடு முறைகளுக்கு ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் பல காரணங்களும், விளக்கங்களும் உள்ளன.
தோப்புக்கரணத்தின் ஆன்மீக மற்றும் அறிவியல் நன்மைகள்
புராணத்தின்படி, கஜமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களைத் தோப்புக்கரணம் போடச் சொன்னான். அவனை விநாயகர் அழித்த பிறகு, தேவர்கள் விநாயகருக்குத் தோப்புக்கரணம் போட்டு தங்கள் நன்றியைத் தெரிவித்தனர். இதுவே விநாயகர் வழிபாட்டில் தோப்புக்கரணத்தின் முக்கியத்துவத்திற்கு ஒரு காரணம்.
அறிவியல் பூர்வமாக, தோப்புக்கரணம் மூளையைத் தூண்டி, மனதை ஒருமுகப்படுத்தி ஞாபகசக்தியை அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் விநாயகரை மகிழ்விப்பதற்காகவும், நமது உடல் மற்றும் மன நலனுக்காகவும் நாமும் தோப்புக்கரணம் போட்டு அவரை வழிபட வேண்டும்.
தலையில் குட்டி வணங்குவதன் பின்னணி
அதே போல் விநாயகரை தலையில் குட்டிக் கொண்டு வழிபடுவதற்கும் ஒரு சுவாரஸ்யமான காரணம் உள்ளது. புராணக் கதைகளின்படி, அகத்தியர் கமண்டலத்தில் இருந்த நீரை காக உருவத்தில் வந்த விநாயகர் கவிழ்த்தபோது, அகத்தியர் கோபமடைந்து விநாயகரின் தலையில் குட்டினார். இது உலக நன்மைக்காக விநாயகர் செய்த ஒரு செயல் என்று பின்னர் அறியப்பட்டது. அதே போல் நமக்கு நன்மைகள் அதிகம் கிடைப்பதற்கு விநாயகரை தலையில் குட்டிக் கொண்டு வழிபடுவதாக நம்பப்படுகிறது.
விநாயகரை சரியாக வழிபடும் முறை - தலையில் எத்தனை முறை குட்ட வேண்டும்?
விநாயகருக்கு முன் தலையில் குட்டிக் கொண்டு வணங்க வேண்டும் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியும், ஆனால் எத்தனை முறை தலையில் குட்டிக் கொள்ள வேண்டும் என்பது பலருக்குத் தெரியாது. பெரும்பாலானவர்கள் 3 முறையும், சிலர் ஒரு முறையும் தலையில் குட்டிக் கொள்வது உண்டு. ஆனால், விநாயகருக்கு முன் தலையில் குட்டிக் கொள்வதற்கு என்று ஒரு சரியான முறை உள்ளது.
மொத்தம் ஐந்து முறை தலையில் குட்டிக் கொண்டு வணங்க வேண்டும். அப்படி குட்டிக் கொள்ளும் போது, பின்வரும் கணபதி மந்திரம் ஒன்றை சொல்லிக் கொண்டு தான் குட்டிக் கொள்ள வேண்டும்:
"சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தய"
இந்த கணேச மந்திரத்தில், கணேசரை வர்ணிக்க ஐந்து வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒரு குட்டுக்கான முக்கியத்துவத்தைக் குறிக்கிறது:
- சுக்லாம்பரதரம்: வெள்ளை வஸ்த்ரம் கட்டிக் கொண்டிருப்பவர்.
- விஷ்ணும்: எல்லா இடத்திலேயும் பரவி இருப்பவர்.
- சசிவர்ணம்: நிலா மாதிரி பால் போன்ற நிறமுடையவர்.
- சதுர்புஜ: நான்கு கைகள் உள்ளவர்.
- ப்ரஸந்ந வதநம்: நல்ல மலர்ந்த முகம் உள்ளவர்.
இந்த ஐந்து வார்த்தைகளில் ஒவ்வொன்றும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும். வலக்கையை இடக்கையின் முன் வைத்து வலக்கையால் இடப்புறத்திலும், இடக்கையால் வலப்புறத்திலும் மண்டையில் குட்டி கொள்வது முறை. இதுவே விநாயகரை வழிபடும் சரியான முறையாகும். இந்த முறையில் வழிபட்டால் மட்டுமே விநாயகரை வழிபட்ட முழு பலனும் நமக்கு கிடைக்கும்.