இந்துக்களின் முக்கிய விரத தினங்களில் ஒன்றான ஏகாதசிக்கு தனிச்சிறப்புகள் உண்டு. ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் வரும் யோகினி ஏகாதசி விரதம், அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடவும், தீராத நோய்களை நீக்கவும் அருள்புரியும் சக்திவாய்ந்த விரதமாகும். இந்த நாளில் பெருமாளை வழிபடுவதன் மூலம் அளவற்ற புண்ணிய பலன்களைப் பெறலாம்.
யோகினி ஏகாதசி விரதத்தின் சிறப்பு
ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு விதமான சிறப்புகளும், ஒவ்வொரு விதமான பலன்களும் உண்டு. அப்படி சிறப்பான ஏகாதசி விரதங்களில் ஒன்று யோகினி ஏகாதசி விரதம் ஆகும். ஆண்டுதோறும் இந்துக்கள் தமிழ் மாதமான ஆனி மாதத்தில் யோகினி ஏகாதசி விரதத்தைக் கடைபிடிக்கின்றனர். இது ஆஷாட மாதத்தின் கிருஷ்ண பக்ஷ ஏகாதசி திதியில் அனுசரிக்கப்படுகிறது.
இஸ்கான் துவாரகாவின் கூற்றுப்படி, "பிரம்மா வைவர்த்த புராணம் யோகினி ஏகாதசி விரத கதையை குறிப்பிடுகிறது. வட இந்திய இந்தி நாட்காட்டிகளின்படி, ஆஷாட மாதத்தின் கிருஷ்ண பக்ஷத்தில் வரும் யோகினி ஏகாதசி, நோய்கள் மற்றும் உபாதைகளை நீக்கும் மிக முக்கியமான ஏகாதசி விரதமாகும்." இந்த நாளில் யோகினி ஏகாதசி விரதம் கடைபிடிப்பதன் மூலம் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடலாம் என பக்தர்கள் நம்புகின்றனர். ஒரு வருடத்தில் தவற விடக் கூடாது ஏகாதசிகளில் ஒன்றாக யோகினி ஏகாதசி கருதப்படுகிறது.
இந்த நாளில் பெருமாளின் மந்திரங்கள் அல்லது விஷ்ணு சகஸ்ரநாமம் போன்ற உயர்ந்த புண்ணிய பலன்களை தரும் மந்திரங்களை உச்சரிப்பதால் அனைத்து விதமான பாவங்கள், தீராத நோய்கள் ஆகியவற்றில் இருந்து விடுபட முடியும்.
யோகினி ஏகாதசி 2025 தேதி மற்றும் விரத நேரம்
யோகினி ஏகாதசியானது இந்த ஆண்டு ஜூன் 21ம் தேதி சனிக்கிழமை வருகிறது. பெருமாள் வழிபாட்டிற்கு மிகவும் ஏற்ற சனிக்கிழமையில் ஏகாதசி விரதம் வருவது மிகவும் சிறப்புக்குரியதாகும். ஜூன் 21ம் தேதி அதிகாலை 03.34 மணிக்கு துவங்கி, ஜூன் 22ம் தேதி அதிகாலை 01.52 வரை ஏகாதசி திதி உள்ளது. அன்று இரவு 11.25 வரை துவாதசி திதி உள்ளது.
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஜூன் 21ம் தேதி நாள் முழுவதும் விரதம் கடைபிடித்து, ஜூன் 22ம் தேதி காலை 7 மணிக்கு பிறகு பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.
யோகினி ஏகாதசி அன்று செய்ய வேண்டியவை
- துளசி பூஜை: யோகினி ஏகாதசி அன்று காலையில் குளித்த பிறகு, விஷ்ணு பகவானையும், துளசி தேவியையும் முறையாக வழிபட வேண்டும். பின்னர் துளசிக்கு நீர் ஊற்றி, தூப தீபம் ஏற்றி, 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்ற மந்திரத்தை உச்சரித்து 7 முறை பிரதட்சணம் செய்ய வேண்டும்.
- துளசி இலைகள்: யோகினி ஏகாதசி அன்று விஷ்ணு பகவானுக்கு நைவேத்தியம் படைக்கும் போது, அதில் மறக்காமல் இரண்டு துளசி இலைகளையாவது சேர்க்க வேண்டும். ஏனெனில் துளசி இலைகள் இல்லாமல் விஷ்ணு பகவான் நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்வதில்லை. இவ்வாறு செய்வதன் மூலம் கடவுள் உள்ளம் மகிழ்ந்து அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவார்.
- துளசி மாலை: யோகினி ஏகாதசி அன்று துளசி மாலையை அணியலாம் அல்லது பூஜையின் போது துளசி மாலையை வைத்துக் கொண்டு மந்திரங்கள் ஜெபிக்கலாம்.
- துளசி செடி நடுதல்: உங்கள் வீட்டில் துளசி செடி இல்லையென்றால், யோகினி ஏகாதசி அன்று ஒரு புதிய துளசி செடியை வாங்கி வந்து வீட்டில் நடுங்கள்.