துர்கா தேவியின் சக்தியை கொண்டாடும் ஒரு முக்கியமான பண்டிகை தான் அஷாடா குப்த நவராத்திரி. ஜோதிடம் மற்றும் ஆன்மீக ரீதியாக மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த நவராத்திரி, பொதுவாக ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் வரும். வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் வருவதுண்டு. இவற்றில் ஆனி மாத வளர்பிறையில் வரக் கூடியதை, அதாவது ஆஷாட மாதத்தில் வரக் கூடியதை ஆஷாட குப்த நவராத்திரியாக கொண்டாடுகிறோம். "குப்த" என்றால் "மறைக்கப்பட்ட" அல்லது "ரகசியமாக வைக்கப்பட்டது" என்று அர்த்தம். இந்த நவராத்திரி, தந்திரிகள் மற்றும் சக்தியை வழிபடுபவர்களிடையே மிகவும் பிரபலம். இந்த ஆண்டு, இந்த 9 நாள் பண்டிகை ஜூன் 26-ல் தொடங்கி ஜூலை 4 வரை நடக்கும். இந்த 9 நாட்களும் அம்பிகையின் வெவ்வேறு வடிவங்கள் வணங்கப்படுவது உண்டு. ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனியான சடங்குகள் உள்ளது. தமிழ் மக்களுக்கு இந்த நவராத்திரி வழிபாடு மிகவும் முக்கியம்.
ஆஷாட குப்த நவராத்திரி 2025: நாள் வாரியான வழிபாடு
இந்த ஆஷாட குப்த நவராத்திரி பண்டிகையில் துர்கா தேவியின் 9 வடிவங்களை வழிபடுவதன் மூலம் அளவற்ற அருள் பெறலாம். துர்கா தேவியின் அருள் கிடைக்கும் இந்த நாட்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
முதல் நாள்: பிரதிபதா - காளி தேவி வழிபாடு
இந்த நாள் காளி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. காளி தேவி நேரம், மாற்றம் மற்றும் தீய சக்திகளை அழிப்பவள். இந்த நாளில் கலசம் அமைத்து வழிபடுவார்கள். கலசம் வைக்க நல்ல நேரம் காலை 5:25 மணி முதல் 6:58 மணி வரை. அபிஜித் முகூர்த்தம் காலை 11:56 மணி முதல் 12:52 மணி வரை உள்ளது.
இரண்டாம் நாள்: துவிதியை - தாரா மகாவித்யா
இந்த நாள் தாரா மகாவித்யாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தாரா தேவி கருணைக்கு பெயர் போனவள். அவங்க பக்தர்களுக்கு இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வரவும், ஆன்மீக பாதையில் உள்ள தடைகளைத் தாண்டி வரவும் உதவுவாள்.
மூன்றாம் நாள்: திரிதியை - திரிபுர சுந்தரி (ஷோடஷி)
இந்த நாள் திரிபுர சுந்தரிக்கு (ஷோடஷி) அர்ப்பணிக்கப்பட்டது. திரிபுர சுந்தரி அழகு, அன்பு மற்றும் தெய்வீகத்தின் வடிவமாக இருப்பவள்.
நான்காம் நாள்: சதுர்த்தி - புவனேஸ்வரி தேவி
இந்த நாள் புவனேஸ்வரி தேவியை வணங்குவதற்கு உகந்தது. புவனேஸ்வரி தேவி இந்த உலகிற்கே ராணியாக கருதப்படுபவள். ஞானமும், விழிப்புணர்வும் அதிகம் கொண்டவள்.
ஐந்தாம் நாள்: பஞ்சமி - பைரவி தேவி
இந்த நாள் பைரவி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. பைரவி தேவி மிகவும் வீரமானவள். அவளை வணங்குவதன் மூலம் தைரியம், தெளிவு மற்றும் உள் மற்றும் வெளிப்புற சண்டைகளை சமாளிக்க சக்தி கிடைக்கும்.
ஆறாம் நாள்: சஷ்டி - சின்னமஸ்தா தேவி
இந்த நாளில் பக்தர்கள் சின்னமஸ்தா தேவியை வணங்க வேண்டும். சுய தியாகம், அகங்காரத்தை விட்டு விலகுதல் மற்றும் விடுதலையை குறிக்கும் தேவி இவள்.
ஏழாம் நாள்: சப்தமி - துமாவதி தேவி
இந்த நாள் துமாவதி தேவியை வணங்குவதற்கு உகந்தது. துமாவதி தேவி கைம்பெண் தேவதை. அவள் பற்றின்மை, அமைதி மற்றும் இழப்பு மற்றும் தனிமையின் மூலம் கிடைக்கும் ஞானத்தை குறிப்பவள்.
எட்டாம் நாள்: அஷ்டமி - பகளாமுகி தேவி
இந்த நாள் பகளாமுகி தேவியை வணங்குறதுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. பகளாமுகி தேவி பக்தர்களுக்கு எதிரிகள் மேல் வெற்றி பெற உதவுவாள். இந்த தேவி அமைதியையும், மௌனத்தையும் விரும்புபவள்.
ஒன்பதாம் நாள்: நவமி - மாதாங்கி தேவி
இந்த நாள் மாதாங்கி தேவியை வணங்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்டது. மாதாங்கி தேவி சரஸ்வதி தேவியின் ஒரு வடிவமாக கருதப்படுபவள். அவள் இசை, பேச்சு மற்றும் உள் அமைதியை குறிப்பவள்.