பருக்கள் என்பது ஆண், பெண் இருவருக்குமே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வரும் பொதுவான சருமப் பிரச்சினை. குறிப்பாக டீன்ஏஜ் மற்றும் வளரிளம் பருவத்தில் இவை அதிகமாக ஏற்படும். ஒவ்வொரு வகையான பருக்களுக்கும் வெவ்வேறு காரணங்கள் உள்ளன. டயட்டீஷியன் டாக்டர் மன்ப்ரீத் அவர்கள் ஐந்து வகை பருக்களையும் அவற்றின் காரணங்களையும், இயற்கையான தீர்வுகள் பற்றியும் விளக்குகிறார்.
தாடை மற்றும் கன்னங்களில் வரும் பருக்கள் (Jawline and Cheek Acne)
சிலருக்கு தாடை பகுதி மற்றும் தாடையை ஒட்டிய கன்னப்பகுதிகளில் பருக்கள் ஏற்படும். இத்தகைய பருக்கள் பெரும்பாலும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படுகின்றன, குறிப்பாக டெஸ்டோஸ்டீரோன் உள்ளிட்ட ஆண்ட்ரோஜன் ஹார்மோன்களால். இந்த ஹார்மோன் சமநிலையின்மை அதிகப்படியான எண்ணெய் (சீபம்) உற்பத்தியை தூண்டி, சருமத்தின் துளைகளை அடைத்து பருக்களை உண்டாக்கும்.
தீர்வு:
- ஆளி விதை மற்றும் பூசணி விதைகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
- ஆன்டி-ஆண்ட்ரோஜன் பண்புகள் கொண்ட புதினா டீ குடித்து வரவும். புதினாவின் சாற்றை நேரடியாக பருக்கள் மீது தடவலாம்.
ப்ரீ மென்சூரல் அறிகுறியால் வரும் பருக்கள் (Pre-menstrual Acne)
இந்த வகை பருக்களுக்கும் ஹார்மோன் சமநிலையின்மை தான் முக்கிய காரணமாக இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி அதிகரித்து, டெஸ்டோஸ்டீரோன் உற்பத்தி குறையும் போது இந்த வகை பருக்கள் உண்டாகின்றன. இவை சீபம் சுரப்பை அதிகரிக்கும்.
தீர்வு:
- மன அமைதி மற்றும் மன அழுத்தத்தைக் குறைப்பது முக்கியம். யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
- உணவில் சூரியகாந்தி விதை மற்றும் எள் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.
கன்னங்களில் வரும் பருக்கள் (General Cheek Acne)
கன்னங்களில் வரும் பருக்கள் ஆண், பெண் இருவருக்குமே அதிக அளவில் ஏற்படும். இதற்கு முக்கிய காரணமே நம்முடைய குடல் மற்றும் கல்லீரலில் கழிவுகள் தேங்கி, அதிக டாக்ஸின்கள் இருப்பதனால் ஏற்படுவதுதான். ரத்தத்தில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகமாகும் போதும் இந்த பிரச்சனை ஏற்படும்.
தீர்வு:
- முதலில் உங்களுடைய குடல் மற்றும் கல்லீரலை டீடாக்ஸ் செய்ய வேண்டும்.
- ஆளி விதை உள்ளிட்ட நார்ச்சத்து நிறைந்த உணவுகளையும், நிறைய காய்கறிகளையும் எடுத்துக் கொள்ளும் போது டாக்ஸின்கள் வெளியேறி பருக்கள் உருவாவது குறையும்.
நெற்றியில் உண்டாகும் பருக்கள் (Forehead Acne)
நெற்றியில் உண்டாகும் பருக்களுக்கு முக்கியமான காரணம் மிக அதிகப்படியான மன அழுத்தம் தான். அதிகமான மன அழுத்தமும் கார்டிசால் ஹார்மோன் உற்பத்தி அதிகரிப்பும் நெற்றியில் பருக்கள் உண்டாவதற்கு வழிவகுக்கும். கார்டிசால் உற்பத்தி அதிகரிக்கும் போது முதலில் பாதிக்கப்படுவது உங்களுடைய தூக்கம் தான்.
தீர்வு:
- போதிய அளவு தூக்கம் மிக முக்கியம்.
- மதியம் 2 மணிக்கு மேல் காபி, டீ எடுத்துக் கொள்வதைத் தவிர்த்து வந்தால் பருக்களை குறைத்து விட முடியும், தூக்கமும் நன்றாக வரும்.
மற்ற மோசமான பருக்கள் மற்றும் கொப்புளங்கள் (Severe Acne and Boils)
முகத்தில் ஏற்படும் சில வகை பருக்கள் பெரிதாகி கொப்புளங்களாக உடைய ஆரம்பிக்கும். அந்த இடம் முழுவதும் சிவப்பாக மாறும். இது போன்ற மோசமான பருக்கள் உண்டாவதற்கு முக்கிய காரணம் தூக்கமின்மை, மன அழுத்தம் அதனால் ஏற்படக்கூடிய இன்ஃப்ளமேஷன் (அழற்சி) மற்றும் இன்சுலின் சகிப்புத்தன்மை ஆகியவைதான். இது ரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்கும்.
தீர்வு:
- அதிக புரதங்கள் கொண்ட உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- ஒவ்வொரு வேலை உணவுக்கு முன்பும் லவங்கப்பட்டை, ஆப்பிள் சிடார் வினிகர் சேர்த்த பானத்தை எடுத்துக் கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.
டாக்டர் மன்ப்ரீத் அவர்களின் இறுதி ஆலோசனை
டயட்டீஷியன் டாக்டர் மன்ப்ரீத் குறிப்பிட்டது போல, எல்லா வகைப் பருக்களும் ஒன்று அல்ல. அதேபோல் எல்லா வகை பருக்களுக்கும் காரணங்களும் ஒன்றல்ல. ஒவ்வொரு பருக்களுக்கும் வெவ்வேறு காரணங்கள் உண்டு. அவற்றை சரியாக அடையாளம் கண்டு, உணவின் மூலமும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமும் சரி செய்யும் பொழுது பருக்கள் உண்டாகாமல் தடுக்க முடியும். அதற்கான மூலக் காரணத்தையும் சரிசெய்ய முடியும்.