விநாயகப் பெருமானை வழிபடுவது சிறந்த பலன்களைத் தரும் என்றாலும், பஞ்சமுக விநாயகரை வழிபடுவது ஜோதிடம் ரீதியாக பல மடங்கு நன்மைகளை அள்ளித் தரும் என தமிழ் ஆன்மீக நூல்கள் கூறுகின்றன. ஐந்து முகங்களைக் கொண்ட இந்த தெய்வீக வடிவம், நம் வாழ்வின் பல்வேறு அம்சங்களை சீர்படுத்தி நிலையான ஆனந்தத்தை அளிக்க வல்லது.
பஞ்சமுக கணபதி: ஒரு அறிமுகம்
சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் அது நீங்கி விடும். விநாயகர் வடிவங்களில் இரட்டை விநாயகர் மற்றும் வலம்புரி விநாயகர் மிகவும் விசேஷமானது என்பார்கள். பெரும்பாலும் ஒரு முகத்துடன் இருக்கும் விநாயகரை தான் நாம் தரிசித்திருப்போம். ஆனால், விநாயகர் ஒரு முகத்தோடு நமக்கு அருள் புரிவதோடு ஐந்து முகங்களோடு பஞ்சமுக கணபதியாக சில கோயில்களில் காட்சி அளிக்கிறார். சில வீடுகளிலும் பஞ்சமுக தோற்றமுள்ள கணபதி சிலையை வணங்கி வழிபடுகிறார்கள். "பஞ்ச" என்றால் ஐந்து. "முகி" என்றால் முகமுடையவர். ஐந்து முகங்களை கொண்ட கணபதியை பஞ்சமுக கணபதி என்கிறோம். இந்த ஐந்து முகங்களும் வெவ்வேறு திசைகளை நோக்கி உள்ளன.
பிள்ளையாரின் பஞ்ச முகங்களின் அர்த்தம் மற்றும் உடல் இயக்கங்கள்
கணபதியின் ஐந்து முகங்களும் நம் உடலின் ஐந்து பிரிவுகளை குறிக்கின்றன. இவை யாவும் கணபதியின் ஆளுகைக்கு உட்பட்டவை. இறுதியில் சச்சிதானந்த நிலைக்கு நம்மை அழைத்துச் செல்கிறார், விநாயகர். நமது உடலில் உள்ள அன்னமய பிரிவு, பிராணமய பிரிவு, மனோமய பிரிவு, விஞ்ஞானமய பிரிவு மற்றும் ஆனந்தமய பிரிவு ஆகியவற்றை விநாயகரின் ஒவ்வொரு முகங்கள் கட்டுப்படுத்துகின்றன. அதன் விளக்கங்கள் இதோ:
- அன்னமய பிரிவு: அன்னம் உணவை குறிப்பது. இது நமது உடல் இயக்கத்தை குறிக்கிறது.
- பிராணமய பிரிவு: பிராணன் நமது உயிர் மூச்சை குறிக்கிறது. நமது வாழ்வு இயங்கத் தேவையான ஆதார சக்தியை குறிக்கிறது.
- மனோமய பிரிவு: மனோ என்றால் மனது. நமது எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியவற்றை குறிக்கும்.
- விஞ்ஞானமய பிரிவு: விஞ்ஞானம் அறிவை குறிக்கும். எதையும் அலசி சரியான முடிவெடுக்கும் புத்தியை குறிக்கும்.
- ஆனந்தமய பிரிவு: எல்லையில்லா ஆனந்தம் அளிப்பவன் இறைவன். அவனின் திருவடி நிழலே ஆனந்தமாகும். இதுவே மனிதனுக்கு கடைசி நிலை ஆகும்.
பஞ்சமுக கணபதியை வழிபடுவோர் இறுதியில் ஆனந்த நிலை அடைகிறார்கள் என்பதே இதன் பொருளாகும். இந்த விநாயகர் வழிபாடு நிலையான மன அமைதியையும், வெற்றிகளையும் தரவல்லது.
யாரெல்லாம் பஞ்சமுக விநாயகரை வழிபடலாம்?
விநாயகப் பெருமான் இந்த உலகில் இன்பமாக வாழ்வதற்குரிய வழிகளையும், இறுதியில் நிலையான ஆனந்த நிலையை அடைவதற்கான வழியையும் அருளக் கூடியவர் என்பதை உணர்த்துவதே பஞ்சமுக விநாயகர் உருவத்தின் சிறப்பாகும். நோய்கள், பிரச்சனைகள், குழப்பங்கள் இல்லாத சீரான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பவர்கள் பஞ்சமுக விநாயகர் வடிவத்தை வழிபடலாம். விநாயகரின் பரிபூரண அருளை பெற வேண்டும் என்பவர்கள் பஞ்சமுக விநாயகரை தொடர்ந்து வழிபட்டு வரலாம். ஜோதிட ரீதியாக தடைகளை சந்திப்பவர்களும், வாழ்க்கையில் தெளிவு தேடுபவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
தமிழகத்தில் பஞ்சமுக விநாயகர் கோவில்கள்
இந்தியாவின் பல பகுதிகளில் பஞ்சமுக விநாயகர் கோவில்கள் இருந்தாலும், தமிழ்நாட்டில் சில முக்கிய கோவில்கள் உள்ளன:
- சென்னை பெரம்பூரில் வினைதீர்த்த பஞ்சமுக விநாயகர்
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் ஹேரம்ப பஞ்சமுக விநாயகர்
- சேலம் ஏற்காடு அடிவாரத்தில் பஞ்சமுக விநாயகர்
- திருச்சி பிச்சாண்டார் கோவிலில் ஐந்தடி உயரத்தில் பஞ்சமுக விநாயகரை தரிசிக்கலாம்.
இந்த விநாயகர் ஆலயங்கள் சென்று தரிசிப்பது மன அமைதியைத் தரும்.