ஜோதிட ரீதியாக அமாவாசை திதி என்பது சூரியன் மற்றும் சந்திரன் ஒரே ராசியில் சந்திக்கும் ஒரு முக்கியமான நாள். இந்த புனித தினத்தில் பிறக்கும் குழந்தைகளின் இயல்பு, தனிப்பட்ட குணங்கள், செயல்பாடுகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை அம்சங்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாகக் காணலாம். ஜோதிடம் மற்றும் பிறப்புத் திதியின் தாக்கம் குறித்த ஆழமான புரிதலைப் பெறுங்கள்.
அமாவாசை திதி மற்றும் திதி செளம்ய தோஷம்
பொதுவாக, ஆத்ம காரகனான சூரிய பகவானும், மனோகாரகனான சந்திரனும் ஒரே ராசியில் சந்திக்கும் நாள் தான் அமாவாசை திதி ஆகும். அமாவாசை திதி அன்று பிறக்கக்கூடிய குழந்தைகள் அதிக திறமை நிறைந்ததாக இருப்பார்கள், ஏனெனில் இந்த திதியில் தான் 9 கிரகங்களும் வலுவடைகின்றன. மேலும், இந்த திதியில் திதி செளம்ய தோஷம் இருக்காது என்பது ஒரு சிறப்பு அம்சமாகும்.
திதி செளம்ய தோஷம் என்றால் என்ன? ஜோதிட அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட திதியில் ஒரு குழந்தை பிறந்தால், அந்த தினத்தில் சில கிரகங்கள் வலுவிழக்கும். அந்த திதிக்கு பெயர் தான் திதி செளம்ய தோஷம். ஆனால் சூரியன் - சந்திரன் இணைந்திருக்கும் அமாவாசை திதியில் திதி செளம்ய தோஷம் இருக்காது. இதன் காரணமாக, அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் பிறக்கும் குழந்தைகளின் மூளை பலம் அதிகமாக இருக்கும் வாய்ப்புகள் உண்டு. அவர்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்காமல், அதை உருவாக்கக்கூடிய நபர்களாக இருப்பார்கள்.
எந்த திதியில் எந்த ராசி வலுவிழக்கும்?
- சதுர்த்தி திதி நாளில்: கும்பம், ரிஷப ராசி வலு இழக்கும்.
- பிரதமை திதி அன்று: துலாம், மகர ராசிகள் வலுவிழக்கும்.
- துவிதியை திதி அன்று: தனுசு, மீன ராசிகள் வலுவிழக்கும்.
- ஆனால் பௌர்ணமி மற்றும் அமாவாசை திதிகளில் எல்லா கிரகங்களும் வலுவடைந்து இருப்பதால் திதி செளம்ய தோஷம் கிடையாது.
அமாவாசை, பெளர்ணமியில் பிறந்தவர்களின் குண நலன்கள்
அமாவாசை மற்றும் பௌர்ணமி திதிகளில் பிறந்தவர்கள் தாராள குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் சுயநல சிந்தனை இருக்காது. அவர்களின் திறமையை மற்றவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள் என்றாலும், அதற்காக துவண்டு விடாமல், தங்களை ஒரு தலைவனாக்கிக் கொள்ளக்கூடிய முயற்சியில் எப்போதும் இருப்பார்கள். இதனால் இவர்களை ஆணவக்காரன் என்று கூட சிலர் கூறலாம். ஆனால் இவர்கள் தங்களின் உரிமையை மீட்டெடுக்கவே முயல்கிறார்கள் என்பதை பிறர் உணர்வதில்லை.
தந்திரமானவர்கள்
அமாவாசை, பெளர்ணமி திதிகளில் பிறந்தவர்கள் ஒரு தந்திரமான நபராக இருப்பார்கள். இவர்களுடன் அதிக நெருக்கமாக பழகக்கூடிய நபர்களுக்கு மட்டும் தான் இவர்களின் தந்திர குணம் தெரியும். அதிலும் குறிப்பாக அமாவாசை திதியில் பிறந்தவர்களின் தந்திரம் நெருங்கியவர்களுக்குக் கூட புரியாது. பிறருக்கு இவர்கள் சொன்ன சில வார்த்தைகளுக்கான அர்த்தம் புரிய சில ஆண்டுகள் கூட எடுக்கும்.
விசித்திரமான மனநிலை கொண்டவர்கள்
அமாவாசையில் பிறந்தவர்கள் எப்போதும் ஏதேனும் ஒரு மனவருத்தத்திலேயே இருப்பார்கள். இவர்களிடம் ஒரு தேடல் இருந்து கொண்டே இருக்கும். தங்களின் செயல் அல்லது சாதனை கண்டு திருப்தி அடைவதில்லை. சில விஷயங்களை யோசித்துக் கொண்டும், அதனால் மன உளைச்சலுடனும் இருப்பார்கள். இதற்கு காரணம் மனோகாரகனான சந்திரன் அமாவாசை தினத்தில் வலுவிழப்பதால் தான். இவர்களின் மன சஞ்சலத்தால் தான் சாதனை படைத்தவர்களாக இருந்தாலும் தான் இன்னும் சாதிக்கவில்லை, பெரியதாகச் செய்ய வேண்டும் என்ற மனநிலையிலேயே இருப்பார்கள்.
பிறர் மனதை வெல்லும் திறமை கொண்டவர்கள்
அமாவாசை தினத்தில் பிறந்தவர்கள் பிறரின் மனதை திருடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். ஆம், இவர்கள் தங்களின் அறிவுத் திறன், திறமை, செயல்பாடு மூலம் பிறரின் மனதை வென்றுவிடுவார்கள். இவர்கள் ஒரு முடிவை எடுத்து விட்டால் அதில் உடும்பு பிடியாக நிலைத்திருப்பார்கள். இது இவர்களின் விடாமுயற்சியைக் காட்டுகிறது.
திருமண வாழ்க்கை மற்றும் காதல்
சந்திரன் வலுவிழந்து இருப்பதால், இவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில், நல்ல வாழ்க்கைத் துணை அமைந்திருந்தாலும் அவர்கள் இன்னும் நல்ல கணவன் அல்லது மனைவி அமைந்திருக்கலாம் என நினைப்பார்கள். எவ்வளவு தான் ருசியான உணவை உண்டாலும் அதில் திருப்தி அடையமாட்டார்கள். ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். பெற்றோரை நேசிக்கக்கூடிய நபர்களாக இருப்பதோடு, எதிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற மன நிலை கொண்டவர்களாக இருப்பார்கள்.