மனிதன் இறைவனை அடைவதற்கான ஆன்மிக வழிகாட்டும் சிவபுராணத்தை எதற்காக படிக்க வேண்டும் என ஆன்றோர்கள் அனைவரும் சொல்கிறார்கள்? இதை படித்தால் என்ன பலன் கிடைக்கும்? எத்தனையோ பாடல்கள் இருந்தாலும் இதற்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது. பக்தி மிகுந்த சிவபுராணம் மற்றும் திருவாசகத்தின் மகத்துவம் குறித்து விரிவாக காண்போம்.
திருவாசகம் மற்றும் சிவபுராணம்: ஒரு அறிமுகம்
திருவாசகம், மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டதாகும். மனிதன் சொல்ல, தெய்வமே தன்னுடைய கைப்பட எழுதிய நூல் இதுவாகும். அதாவது மாணிக்கவாசகர் சொல்ல, அந்தணர் வடிவில் வந்த சிவ பெருமான் தன்னுடைய கைப்பட எழுதி, தானே கையெழுத்திட்டு கொடுத்த நூல் திருவாசகம். இதில் 600க்கும் அதிகமான பாடல்கள் உள்ளன. சிவனை போற்றி பாட வேண்டும் என நினைப்பவர்களுக்கும், சிவனை நினைத்ததும் சிவனடியார்கள் அனைவருக்கும் முதலில் மனதில் தோன்றும் பாடல், "நமச்சிவாய வாழ்க...நாதன் தாழ் வாழ்க" என துவங்கும் சிவபுராணம் தான். இந்த திருவாசகம் மற்றும் சிவபுராணம் தமிழ் பக்தி இலக்கியத்தில் ஒரு மணிமகுடம்.
சிவ புராணத்தின் அரிய பெருமைகள்
சிவ புராணத்தின் சிறப்புகள், பெருமைகள் அனைவருக்கும் தெரியும். ஆனாலும் சிலர் சிவபுராணத்தின் பெருமைகள் தெரியாமலேயே அதை படித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் திருவாசகம் மற்றும் சிவ புராணத்தின் பெருமைகளை உணர்ந்த, தெரிந்த எவராலும் இதை படிக்காமல் இருக்க முடியாது. "திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்ற வாக்கியம் எவ்வளவு உண்மையானது என்பது இதை படித்தவர்களால் நிச்சயம் உணர முடியும். இதுவரை திருவாசகத்தையும் சரி, சிவபுராணத்தையும் சரி படித்தவர்களில், பக்திப் பெருக்கில் கண்ணீர் வராமல் படித்தவர்கள் எவரும் இருக்க முடியாது. இந்த ஆன்மீக புதையலின் பெருமை என்னவென்று நீங்கள் அறியாமல் இருந்தால், இதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.
திருவாசகம் உருவான தெய்வீகக் கதை
தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய 'திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார். மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்த படியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.
எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச்சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்து விட்டார்.
சிவ பெருமானே கையெழுத்திட்ட ஓலைச்சுவடி
மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சிதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர். ஓலைச்சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில் "மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது" என கையொப்பம் இடப்பட்டிருந்தது. மீண்டும் திகைத்து போய் பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள்.
திருவாசகத்திற்கு என்ன பொருள்? - மாணிக்கவாசகரின் முக்தி
ஓலைச்சுவடிகளில் உள்ள ஒவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய் "ஆம் அடியேன் சொல்ல எழுதப் பட்டது தான்" என்று சொல்லி, வந்தது பெருமான் தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார், மாணிக்கவாசகர். தீட்சிதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர். மாணிக்கவாசகர், அழகிய புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி "இப் பாடல்கள் அனைத்துக்கும் இவர் தான் பொருள்" என்றார். அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார். ஆனி மகம் மாணிக்கவாசகரின் குருபூசை நாள் ஆகும்.
சிவபுராணத்தின் வியக்கத்தக்க அமைப்புச் சிறப்புகள்
- நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரம்: திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் "நமச்சிவாய" என்னும் ஐந்தெழுத்தில் தொடங்குகிறது.
- "வாழ்க" வரிகள்: சிவபுராணத்தின் முதல் 6 வரிகள் "வாழ்க" என முடியும்.
- "வெல்க" வரிகள்: அதை அடுத்த 5 வரிகள் "வெல்க" என முடியும்.
- "போற்றி" வரிகள்: அடுத்த 8 வரிகள் "போற்றி" என முடியும்.
- 658 பாடல்களின் குறியீடு: இவ்வாறு 6-5-8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை சூட்சமமாக குறிக்கிறது.
- மாணிக்கவாசகரின் முக்தி வயது: சிவபுராணத்தின் 32 வது வரியில் "மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்" என பாடி இருப்பார். இது மாணிக்கவாசகர் தனது 32 வது வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.
- உருக்கும் வரி: திருவாசகத்தின் 18 வது வரியான "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.
சிவபுராணம் படித்தால் என்ன பலன் கிடைக்கும்?
சிவபுராணம் மற்றும் திருவாசகம் படிப்பது ஒருவரின் வாழ்வில் பல நன்மைகளை கொண்டு சேர்க்கும். சில முக்கிய பலன்கள் இங்கே:
- மோட்சப் பேறு: ரமண மகிஷி, திருவண்ணாமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.
- குழந்தை பாக்கியம்: காஞ்சி மகா பெரியவரிடம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று தங்கள் குறையை கூறினர். பெரியவர் திருவாசகப் புத்தகத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினம் படிக்க சொன்னார். அவர்களுக்கு வரிசையாக 6 குழந்தைகள் பிறந்தன. இது ஜோதிட ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் ஒரு அற்புத பலனாகும்.
- பிறவிப் பிணி நீங்கும்: இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும் என பெரியோர்கள் கூறுவர். சிவ புராணத்தின் பொருள் உணர்ந்து படித்தால் பிறவிப் பிணி நீங்கும்.
- பாவங்கள் நீங்கும்: சிவபுராணம் தொடர்ந்து பாராயணம் செய்வதன் மூலம் பாவங்கள் நீங்கி புண்ணியங்கள் சேரும்.
- இறைவனையும் அடையும் வழி: சிவபுராணம் இறைவனையும் அடையும் வழியை காட்டும் அரிய பொக்கிஷம்.
- சிவ பெருமானின் அருள்: சிவ புராணத்தை படிக்கும் போது மனம், மொழி, உடல் ஆகிய மூன்று ஒன்றிணைந்து படித்தால் சிவ பெருமானின் முழுமையான அருள் கிடைக்கும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவபுராணம் மற்றும் திருவாசகத்தை படித்து நற்பலன்களை பெறுவோம்!