கந்தசஷ்டி விழாவின் மிக முக்கியமான நிகழ்வான சூரசம்ஹாரம், இந்த ஆண்டு அக்டோபர் 22 அன்று துவங்கிய கந்தசஷ்டி விரதத்தின் நிறைவு நாளாகும். லட்சக்கணக்கான முருக பக்தர்கள் ஆறுபடை வீடுகளிலும், தங்கள் இல்லங்களிலும் இவ்விழாவை கொண்டாடுகின்றனர். முருகப் பெருமானின் அருளைப் பெற்று, நம்முடைய கர்மவினைகள் நீங்கி, தலைவிதி மாறும் என ஐதீகம்.
கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளாகவும், முக்கிய நிகழ்வாகவும் கருதப்படும் சூரசம்ஹாரம் நிகழ்வு இன்று நிகழ உள்ளது. இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா அக்டோபர் 22ம் தேதி துவங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் அனைத்து முருகன் ஆலயங்களிலும், வீடுகளிலும் இருந்த படி கந்தசஷ்டி விரதத்தை மேற்கொண்டு வருகின்றனர். கந்த சஷ்டி விழாவின் உச்ச நிகழ்வாக, முருகப் பெருமான், அன்னை பராசக்தியிடம் இருந்து பெற்ற சக்திவேலைக் கொண்டு சூரனை வதம் செய்து, தேவர்களை காத்த நிகழ்வான சூரசம்ஹாரம் அனைத்து முருகன் கோவில்களிலும் நடைபெற உள்ளது.
கந்த சஷ்டியின் ஆறு நாட்களும் விரதம் இருந்து வழிபட முடியாதவர்கள். இந்த ஒரு நாளில் விரதம் இருந்து, மிக எளிமையான வழிபாட்டினை மேற்கொள்வதால் முருகப் பெருமானின் அருளால் நம்முடைய தலையெழுத்து மாறும் என சொல்லப்படுகிறது. இந்த ஒரு நாளில் விரதம் இருந்தால் எப்படி தலையெழுத்து மாறும்? இந்த நாளுக்கு அப்படி என்ன சிறப்பு? என்ற கேள்வி தோன்றலாம். சூரனை, முருகப் பெருமான் சம்ஹாரம் செய்த சஷ்டி திதி அத்தனை சிறப்பு வாய்ந்ததாகும். முருகப் பெருமான் என்பவர் நமக்குள் இருக்கும் இச்சை, கிரியை, ஞானம் ஆகியவற்றின் வடிவமாக கருதப்படுகிறார். இவற்றை நாம் அடைவதற்கு தடையாக இருப்பது காமம், குரோதம், அகங்காரம் என்னும் மும்மலங்கள். இந்த மும்மலங்களையே சூரனின் மூன்று சகோதரர்களாக புராண கதைகள் சொல்கின்றன. சூரனுடன் நடைபெற்ற போரின் போது மும்மலங்களை அழித்தார் முருகப் பெருமான். அதற்கு பிறகு கடலுக்கு நடுவில் மாம்மரமாக உருமாறி இருந்த சூரபத்மனை அழிக்காமல், அவனது உடலை இரண்டு கூறுகளாக பிளந்து, ஒரு பாதியை சேவலாகவும், மற்றொரு பாதியை கொடியாகவும் மாற்றி ஆட்கொண்டார் என்கிறது புராணங்கள்.
அது போல் இந்த நாளில் முருகனை சரணடைந்தால், நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள், பாவங்கள், கர்மவினைகள் அனைத்தையும் அழித்து, நம்முடைய வாழ்வில் இருக்கும் தீமைகள் அனைத்தையும் ஓட செய்து, நம்மையும் காத்திடுவார் என்பது ஐதீகம். ஜோதிடம் ரீதியாகவும் இந்த நாள் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, ஆறுபடை வீடுகள் மற்றும் பிற முருகன் ஆலயங்கள் இந்த நாளில் பக்தர்களால் நிரம்பி வழியும். தமிழ் கலாச்சாரத்தில் இந்த விழாவுக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு.
சூரசம்ஹார வழிபாட்டு முறைகள் மற்றும் பலன்கள்
- விரதம்: காலையில் இருந்து விரதம் இருந்து வழிபட வேண்டும்.
- மந்திரம்: முருகனுக்கு சிவப்பு நிற மலர்கள் சூட்டி, "ஓம் சரவண பவ" மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.
- பாராயணம்: கந்தசஷ்டி கவசம், சத்ருசம்ஹார வேல் பதிகம், வேல் மாறல், திருப்புகழ் போன்ற பதிகங்களை படிக்கலாம்.
- நிறைவு: மாலையில் சூரசம்ஹாரம் நிறைவடைந்த பிறகு முருகப் பெருமானுக்கு சர்க்கரை பொங்கல், பால் ஆகியவற்றை படைத்து வழிபட வேண்டும்.
- தானம்: முருகனுக்கு பிரசாதமாக படைத்த பொருட்களை மற்றவர்களுக்கு தானமாக கொடுத்து, நாமும் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். அருகில் உள்ள முருகன் கோவில் சென்று, அங்கு கந்தசஷ்டி விரதம் இருந்த முருக பக்தர்களுக்கு பால் கொடுத்து, அவர்கள் விரதத்தை நிறைவு செய்ய கொடுக்கலாம்.
- பலன்: இதனால் முருகப் பெருமானின் மனம் குளிரும். அதோடு நம்முடைய கர்மவினைகளும் அழிந்து, நம்முடைய தலைவிதி எவ்வளவு மோசமாக இருந்தாலும் அது மாறி, வாழ்க்கை நல்லபடியாக மாறும் என்பது நம்பிக்கை.