தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் சம்பா, குறுவை, தாளடி என மூன்று பருவங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், உற்பத்தியைப் பெருக்கவும், குறுவை பருவ சாகுபடியை ஊக்கப்படுத்துவதற்காகவும், தமிழ்நாடு அரசு "குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டம்" என்ற உழவர் நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் நன்மைகள், விண்ணப்பிக்கும் முறை, மானியம் பெறும் வழிமுறைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பற்றி ஜோதிடம்360.in இப்பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
- குறுவை சாகுபடி என்றால் என்ன?
- குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டம்
- குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டத்தின் நன்மைகள்
- குறுவை சாகுபடி தொகுப்பு மானியம் பெற தேவைப்படும் ஆவணங்கள்
- குறுவை சாகுபடி தொகுப்புக்கு விண்ணப்பிக்கும் முறை
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குறுவை சாகுபடி என்றால் என்ன?
குறுவை சாகுபடி என்பது ஜூன் - ஜூலை மாதங்களில் பயிரிடப்பட்டு, அக்டோபர் - நவம்பர் மாதங்களில் அறுவடை செய்யப்படும் ஒரு குறுகிய கால சாகுபடி பருவம் ஆகும். இந்த பருவத்தில் குறுகிய காலத்தில் (100 - 120 நாட்களில்) விளையும் நெல் ரகங்கள் பயிரிடப்படுகின்றன. இது தமிழக விவசாயிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாகுபடியாகும்.
குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டம்
தமிழகத்தில் குறுவை சாகுபடியை அதிகரிப்பதற்காகவும், டெல்டா விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்துவதற்காகவும் தமிழ்நாடு அரசு குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டத்தை (Kuruvai Cultivation Special Package Scheme) அமல்படுத்தியது. இத்திட்டம் ஆரம்பத்தில் டெல்டா மாவட்டங்களில் மட்டுமே அமலில் இருந்த நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், நுண்ணூட்ட சத்துக்கள் மற்றும் விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. மேலும், வரிசை நடவு எனப்படும் இயந்திர நடவை ஊக்கப்படுத்தும் வகையில், இயந்திர நடவு பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தமிழக விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டத்தின் நன்மைகள்
- இயந்திர நடவு மானியம்: குறுவை சாகுபடி பருவத்தில் நெற்பயிரை இயந்திர நடவு மூலம் நடவு செய்யும்போது, பின்னேற்பு மானியமாக விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ.4,000 வழங்கப்படுகிறது.
- நெல் விதைகள் மானியம்: வேளாண் விரிவாக்க மையங்களின் மூலமாக 50 சதவீத மானியத்தில் ஏக்கர் ஒன்றுக்கு சான்று பெற்ற நெல் விதைகள் 20 கிலோ வரை வழங்கப்படுகின்றன.
- நுண்ணூட்டச் சத்து மானியம்: நுண்ணூட்டச் சத்து குறையுள்ள நிலப்பரப்பிற்கு 50 சதவீத மானியத்தில் நெல் நுண்ணூட்டக் கலவை வழங்கப்படுகிறது.
- துத்தநாக சல்பேட் மானியம்: துத்தநாக சத்துக் குறையுள்ள நிலப்பரப்பில் துத்தநாக சல்பேட் உரத்தைப் பயன்படுத்த ஏக்கருக்கு ரூ.250 வழங்கப்படுகிறது.
- பயறு வகைப் பயிர்கள் ஊக்குவிப்பு: பயறு வகைப் பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்க 50 சதவீத மானியத்தில் தரமான சூடோமோனஸ், இலை வழி உரம் மற்றும் திரவ உயிரி உரம் வழங்கப்படுகிறது.
- அதிகபட்ச வரம்பு: இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 1 ஏக்கர் வரை விவசாயிகள் மானிய விலையில் விதைகள் மற்றும் இயந்திர நடவு மானியம் பெறலாம்.
குறுவை சாகுபடி தொகுப்பு மானியம் பெற தேவைப்படும் ஆவணங்கள்
இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் நெல் விதை மற்றும் உரங்கள் மானியம் பெற பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்:
- ஆதார் அட்டை நகல்
- கிராம நிர்வாக அலுவலரின் சான்று
- விவசாய நிலத்தின் பட்டா நகல்
இயந்திர நெல் நடவு மானியம் பெற விவசாயிகள் கூடுதலாக சமர்ப்பிக்க வேண்டியவை:
- ஒரு ஏக்கருக்கான அடங்கல்
- மிஷின் நடவு மேற்கொண்டதற்கான பட்டியல்
- கணினி சிட்டா
- ஆதார் அட்டை நகல்
- வங்கி பாஸ்புக்
- பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
குறுவை சாகுபடி தொகுப்புக்கு விண்ணப்பிக்கும் முறை
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், குறுவை சாகுபடி தொகுப்புக்கான அறிவிப்பு வெளியாகும் போது, கடைசி தேதிக்கு முன்பாகவே தங்கள் அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்திற்கு சென்று இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண் உதவி அலுவலகத்தை அணுகியும் பயன்பெறலாம்.
அதேப்போல், நெல் இயந்திர நடவு செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் இயந்திர நடவு மானியம் பெற உழவன் செயலியில் இதற்கான முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பிறகு, வட்டாரத்தில் உள்ள வேளாண் உதவி அலுவலகத்திற்கு சென்று கூடுதல் விவரங்களை கேட்டு தெரிந்துக் கொள்ளலாம்.